/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண் கல்வி அதிகாரி நியமனத்தில் விதிமீறல்!
/
பெண் கல்வி அதிகாரி நியமனத்தில் விதிமீறல்!
PUBLISHED ON : மார் 20, 2026 03:39 AM

''மு தல்வர் துவக்கிய திட்டத்தையே முடக்கிட்டா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் ஆஜரானார் குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பத்திரப்பதிவு பணிகளை எளிமைப்படுத்த, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருளை தயார் பண்ணா... இதன் மூலமா, சார் - பதிவாளர் அலுவலகம் வராமலேயே, மக்கள் பத்திரப்பதிவு செய்ய முடியும் ஓய்...
''இந்த வசதியை, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வச்சார்... இந்த திட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பதிவுத்துறை தலைமையில இருந்து உத்தரவு போட்டா ஓய்...
''ஆனா, மக்கள் வீட்டுல இருந்தபடியே வேலையை முடிச்சுட்டா, நமக்கு, 'கட்டிங்' தேறாதுன்னு, பதிவுத்துறையில் பலரும் நினைக்கறா... இதனால, சில டி.ஐ.ஜி.,க்கள் இந்த விழிப்புணர்வு கூட்டங்களையே நடத்தல ஓய்...
''சிலர் மட்டும், பத்திர எழுத்தர்களை வச்சு, கண்துடைப்புக்கு கூட்டம் நடத்தியிருக்கா... 'முதல்வர் துவக்கி வச்ச திட்டத்தையே முடக்கிட்டாளே'ன்னு பதிவுத்துறையில் இருக்கற நேர்மையான ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சீட்டுக்காக, முதல்வர் வீட்டை வலம் வர்றாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., அமைப்பு துணை செயலரா இருக்கிறவர், தாயகம் கவி... இவர், சென்னை திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ.,வாகவும் இருக்காருங்க... இவருக்கும், அமைச்சர் ஒருத்தருக்கும் ஆகாதாம்...
''இதனால, தாயகம் கவிக்கு திரு.வி.க., நகர்ல, 'சீட்' கிடைக்கக் கூடாதுன்னு அந்த அமைச்சர் தீவிரமா இருக்காராம்... அந்த தொகுதியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை நிறுத்தவும் முயற்சி பண்றாருங்க...
''இந்த சூழல்ல, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், தாயகம் கவியின் அறையை, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வரா இருந்து, சமீபத்தில் தி.மு.க.,வில் சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்க போறாங்களாம்... அறை போனாலும் பரவாயில்லை... சீட் கைவிட்டு போயிட கூடாதுன்னு நினைக்கிற தாயகம் கவி, முதல்வர் வீட்டையே சுத்தி சுத்தி வர்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சேகர்பாபு, இங்கன உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''உத்தரவு எல்லாம் காத்தோட போயிட்டு வே...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திருச்சியில், சரக வட்டார கல்வி அலுவலரா, சமீபத்தில் ஒரு பெண் அதிகாரியை நியமிச்சாவ... இவங்க, ஏற்கனவே இந்த இடத்துல, 10 வருஷங்களுக்கு மேலா இருந்திருக்காங்க வே...
''திரும்பவும் அதே இடத்துக்கு வந்திருக்காங்க... 'ஏற்கனவே பணியாற்றிய இடங்கள்ல, மீண்டும் வட்டார கல்வி அதிகாரிகளை நியமிக்க கூடாது'ன்னு, ஆறு மாசங்களுக்கு முன்னாடி, துவக்க கல்வி துறை உயர் அதிகாரி உத்தரவே போட்டிருந்தாரு வே...
''ஆனா, அதை மீறி இந்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டதால, மற்ற கல்வி அலுவலர்கள் கடுப்புல இருக்காவ... 'உயர் அதிகாரி, தான் போட்ட உத்தரவை, தானே மீறியது ஏன்... பணம் பாதாளம் வரை பாயும்கிறது உண்மைதானோ'ன்னு தங்களுக்குள்ள பேசிக்கிடுதாவ வே...
''அதோட, 'அந்த பெண் அதிகாரியும் லேசுப்பட்டவங்க இல்ல... காசு, பணம், துட்டு, மணின்னு வாரி குவிச்சவங்க தான்... மறுபடியும் அந்த வேலையில் தீவிரமா இறங்கிடுவாங்க'ன்னும் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
-ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''ரெஜி பெஞ்சமின் மேடம்... நரேஷ் சார் போனை எடுக்கல... அவர்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

