/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.150 கோடி டெண்டரில் கமிஷன் பார்த்த பெண் அதிகாரி!
/
ரூ.150 கோடி டெண்டரில் கமிஷன் பார்த்த பெண் அதிகாரி!
ரூ.150 கோடி டெண்டரில் கமிஷன் பார்த்த பெண் அதிகாரி!
ரூ.150 கோடி டெண்டரில் கமிஷன் பார்த்த பெண் அதிகாரி!
PUBLISHED ON : மார் 19, 2026 03:32 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''கேட்ட இடங்களுக்கு இடமாறுதல் குடுத்துட்டாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி ரயில்வே எஸ்.பி., கட்டுப்பாட்டில் வர்ற ரயில்வே போலீஸ் எஸ்.ஐ.,க்கள், 25 பேரை, தேர்தலை காரணம் காட்டி, சமீபத்தில் இடமாற்றம் செஞ்சாங்க... இதுல, திருச்சியில் இருந்தவரை கன்னியாகுமரிக்கும், அங்க இருந்தவரை நாகபட்டினம்னு, 300 முதல் 400 கி.மீ., தள்ளி மாத்திட்டாங்க பா...
''சில எஸ்.ஐ.,க்கள் உடல்நிலை சரியில்லாம சிகிச்சை எடுத்துட்டு இருந்தாங்க... தேர்தல் முடிஞ்சு, மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்ப, குறைஞ்சது நாலு மாசங்கள் ஆகிடும்கிறதால, கடும் மன உளைச்சல்ல இருந்தாங்க பா...
''இதை கேள்விப்பட்ட ரயில்வே எஸ்.பி., ஆதர்ஷ் பச்சேரா, மனிதாபிமான அடிப்படையில், பழைய இடமாறுதல் உத்தரவை ரத்து பண்ணி, எஸ்.ஐ.,க்கள் கேட்ட மாவட்டங்களுக்கும், பக்கத்துல உள்ள மாவட்டங்களுக்கும் இடமாறுதல் குடுத்துட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''புல்லட் பைக்லயே வந்துடுதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு, சென்னை, நீலாங்கரையில் வீடு இருக்கு... இவருக்கு, பசுமை வழிச்சாலையில் அரசு இல்லமான குறிஞ்சி பங்களாவும் ஒதுக்கியிருக்காவ வே...
''சமீபகாலமா முதல்வர் ஸ்டாலின், குறிஞ்சி பங்களா வளாகத்தில் தான், 'வாக்கிங்' போறாரு... அப்ப, மகனுடன் ஆலோசனை பண்ணி, கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை இங்கதான் எடுக்காரு வே...
''இதனால உதயநிதி, பெரும்பாலும் ராத்திரி குறிஞ்சி பங்களாவில் தான் தங்குதாரு... இதுக்காக, ராத்திரி, 10:00 மணிக்கு மேல நீலாங்கரை வீட்டில் இருந்து, தன் நண்பருடன் புல்லட் பைக்லயே குறிஞ்சி பங்களாவுக்கு வந்துடுதாரு வே...
''யாருக்கும் அடையாளம் தெரியாதபடி, 'ஹெல்மெட்' போட்டு புல்லட்ல வந்தாலும், பின்னாடியே சாதாரண உடையில போலீசார் பாதுகாப்புக்கு வர்றாவ... குறிஞ்சி பங்களாவில் உதயநிதியை பத்திரமா கொண்டு விட்டுட்டு தான், கிளம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆட்சி முடியும் நேரத்தில், ஒரு தொகையை அள்ளிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழகம் முழுக்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்களை, 'ஆன்லைன்'ல இணைக்க திட்டமிட்டிருக்காங்க... இதுக்கான கருவிகள் வாங்கவும், 'நெட்ஒர்க்' வசதிகளை செய்யவும், 150 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க...
''மாநில குற்ற ஆவண காப்பகம், தமிழக அரசின், 'எல்காட்' மூலமா இதுக்கான டெண்டரை வெளியிட்டுச்சு... அதுல, குறிப்பிட்ட ரெண்டு நிறுவனங்கள் மட்டுமே கலந்துக்கிற வகையில் விதிகளை மாத்தியிருக்காங்க...
''மேலிடத்தின் வழிகாட்டுதல்படி, ஒரு பெண் போலீஸ் அதிகாரி , அதுல ஒரு நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்கியிருக்காங்க... இதுல, பெண் அதிகாரிக்கும், 'கட்டிங்'கா பெரும் தொகை கிடைச்சிருக்கு துங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
தெருவில் சென்ற சிறுமியை நிறுத்திய குப்பண்ணா, ''லாவண்யா, உன் தோப்பனார் வீட்டுல இருக்காரா...?'' என விசாரிக்க, அந்த சிறுமி, 'ஆம்' என தலையை அசைத்தபடியே நடக்க, நண்பர்களும் இடத்தை காலி செய்தனர்.

