மனதில் ஓடும் காட்சிகளை வீடியோவாக பார்க்க முடியுமா?
மனதில் ஓடும் காட்சிகளை வீடியோவாக பார்க்க முடியுமா?
PUBLISHED ON : ஜூலை 02, 2026 07:17 AM

கண்கள் காண்பதை மூளை எவ்வாறு புரிந்துகொள்கிறது? இது பற்றிய ஆராய்ச்சியில், மூளையியல் விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். லண்டன் பல்கலை கல்லுாரி ஆய்வாளர்கள், ஒரு எலிக்கு சில காட்சிகளை காட்டினர். காட்சி களை எலி பார்க்கையில், அதன் மூளையில் எழும் சமிக்ஞைகளை மட்டுமே பயன்படுத்தி, 10 வினாடி வீடியோக்களாக மறுஉருவாக்கம் செய்துள்ளனர்.
இதுவரை மனிதர்களில், எப்.எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் தோராயமான படங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில், எலியின் மூளையில் உள்ள தனித்தனி நியூரான்களின் செயல்பாட்டை நேரடியாக பதிவு செய்து, விஞ்ஞானிகள் இதை சாதித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம், நரம்பியல் தரவுகளை வீடியோவாக மொழிபெயர்க்கிறது. எலி ஒரு காட்சியை காணும்போது, அதன் பார்வை புலத்தில் எந்தெந்த நியூரான்கள் துாண்டப்படுகின்றன என்பதை, ஒரு செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் முதலில் கற்றுக் கொள்கிறது.
பின்னர், ஒரு வெற்றுத் திரையை எடுத்துக்கொண்டு, மூளையின் உண்மையான செயல்பாட்டிற்கு ஏற்ப, அத்திரையில் உள்ள பிக்சல்களை படிப்படியாக மாற்றியமைத்து வீடியோவை உருவாக்குகிறது.
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறு உருவாக்கம் செய்யப்படும் வீடியோவின் துல்லியமும் மேம் படுவதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
'இ - லைப்' ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின் நோக்கம், மூளையை படிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டுமல்ல; நம் பார்வை இயங்கும் விதத்தை புரிந்துகொள்வதும் தான். கண்கள் பார்க்கும் காட்சியை, மூளை அப்படியே கேமரா போல பதிவு செய்வதில்லை; அது, தகவல்களை தனக்கு ஏற்றவாறு திருத்தியும், மாற்றியும் அமைக்கிறது.
'இப்படி திருத்துவது ஒரு குறையல்ல, மூளையின் செயல்பாட்டு சிறப்பம்சம்' என்கிறார் விஞ்ஞானி ஜோயல் பாயர். எதார்த்தத்திற்கும், மூளை எதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆராய, இந்த தொழில்நுட்பம் பயன்படும்.
