/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கண்ணாடி பாட்டிலில் எப்படி பிளாஸ்டிக் வந்தது?
/
கண்ணாடி பாட்டிலில் எப்படி பிளாஸ்டிக் வந்தது?
PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

கண்ணாடிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் பாதுகாப்பானவை என்ற பொதுவான நம்பிக்கை தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. பிரான்சில் நடந்த ஓர் ஆய்வில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்பானங்கள், ஐஸ் டீ, பீர், எலுமிச்சைச் சாறு போன்ற கண்ணாடிப் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களில், லிட்டருக்கு ஏறத்தாழ 100 நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது அசல் பிளாஸ்டிக்காலான பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் இருக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களை விட கணிசமாக அதிகம். இந்த நுண்துகள்கள் எப்படி கண்ணாடி பாட்டில்களில் வர முடியும்?
ஆய்வில் தெரியவந்தது இதுதான்: பாட்டில்களில் இருக்கும் உலோக மூடிகளின் மேல் பூசப்பட்டுள்ள அலங்காரப் பெயின்ட் கரைந்து கலப்பதே இந்த மாசுக்கு முக்கியமான காரணம்.
பாட்டில் மேல்மூடியை அடைக்கும் முன், மூடிகளை காற்றால் ஊதி கழுவுவதன் வாயிலாக, இந்த துகள்களின் எண்ணிக்கையை 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
கார்க் எனப்படும் தக்கையால் மூடப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் உள்ள தண்ணீர் மற்றும் ஒயின்களில் மிகக் குறைந்த அளவே நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள், தயாரிப்பாளர்கள் மூடிகளை கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.