/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
மகனுக்கு கோயில் கட்டி வழிபடும் தந்தை
/
மகனுக்கு கோயில் கட்டி வழிபடும் தந்தை
PUBLISHED ON : ஜன 15, 2015

''அண்ணன் என்னடா? தம்பி என்னடா? அவசரமான உலகத்திலே...! ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா...? காசில்லாதவன் குடும்பத்திலே...!,'' என்ற அர்த்தமுள்ள வார்த்தைகளால் கவிஞர் கண்ணதாசன் அவசர உலகின் அலங்கோலங்களை பாடி வைத்தார். 'காசு ஒன்றே குறிக்கோள்' என வாழும் மனிதர் சிலருக்கு ஆக்கப்பூர்வமாக... எடுத்துக்காட்டாக... வாழ்ந்து வருபவர்கள் எண்ணற்றோர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து வருகின்றனர்.
நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டி அழகு பார்க்கும் இந்தக்காலத்தில், மகன் மீதான அளவற்ற பாசத்தால் தந்தை ஒருவர் கோயில் கட்டி குருபூஜை நடத்தி வரும் அதிசயமும் இப்பூவுலகில் நடப்பது நிதர்சனம். அந்த அற்புதமான தந்தை மதுரை பசுமலையை சேர்ந்த 73 வயதான தாமோதரன். மனைவி சுமதி, மகன்கன் உமாரெங்கன், கண்ணன், மகள் ராணிபூர்ணிமாதேவி. மதுரை ரீகல் தியேட்டரில் தாமோதரன் ஸ்டால் நடத்தி வந்தார்.
உழைப்பால் முன்னேறிய தாமோதரன் மகன்கள், மகளை உயர் கல்வி படிக்க வைத்தார். உமாரெங்கன் அமெரிக்காவிலும் மகள் சென்னையிலும் உள்ளனர். இளைய மகன் கண்ணன் வக்கீல். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டதால் வக்கீல் பணியை துறந்து ஆன்மிகத்தில் ஐக்கியமானார். பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்.
கண்ணன் தனது 44 வது வயதில் இப்பூவுலகை விட்டு விடுதலை பெற்றார். ''மகன் இன்றளவும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்,'' என்பது தாமோதரனின் அசைக்க முடியாத நம்பிக்கை. மனைவி 2004ல் காலமானார். அழகர்கோவில் மலையடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த ஆயத்தம்பட்டி கிராமத்தில் மகனுக்கு பளிங்கு கற்களால் கோயில் கட்டினார். கோயிலுக்குள் பூவரசம், வேப்பமரம், நெல்லி, பலா போன்ற மரங்களை வளர்க்கிறார். தினமும் காலை, உச்சிகாலம், மாலை சிறப்பு பூஜைகளும், ஆண்டுதோறும் குருபூஜை நடத்தி அன்னதானம் வழங்குகிறார்.
''யாரிடமும் அவர் (கண்ணன்) பேசுவது கிடையாது. அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கும்,'' எனக்கூறும் தாமோதரன், மகன் இறந்து விட்டதாக ஒரு நாளும் நினைத்தது கிடையாது; அவ்வாறு கூறியதும் கிடையாது. மகன் மீது அளவற்ற பாசமும், பக்தியும் வைத்துள்ள தாமோதரன் போன்ற தந்தையரின் நீங்காப்புகழ் வானமும், பூமியும் உள்ளவரை தழைத்தோங்கும்.
அன்புத் தந்தையிடம் 74189 73112ல் பேசலாம்.