ஆயக்கா குருவம்மா எல்லம்மா
அன்பரசி கருவாச்சி சொக்கி
எல்லோரும் ஒன்னாச் சேரும் ஒரு நாளு
அது தைப்பொங்கத் திருநாளு!
உண்ண உடுக்க பூவெக்க
எப்பவுமா வருது இப்படி ஒரு நாளு
அம்பாரமாக் கரும்புச் சக்கை
ஆளாளுக்குக் கடிச்சுத் துப்பி
வாசப்படி ஓரத்தை
தேரொசரம் நிறைச்சு வைச்சு
தேனொழுகத் திட்டு வாங்கும் திருநாளு!
'விக்கோ டர்மரிக்'கை விட்டுட்டு
விறைச்ச மஞ்சள விழுதாக்கி
விடியுமுன்ன பூசிக் குளிச்சு
கதம்பம் கட்டி முடிச்சு
கையெல்லாம் நெய் மணக்கும் ஒரு நாளு.
போலிச் சரிகைபோட்ட பட்டுகட்டி
நிசமாச் சிரிச்சு நிறையப் பூவைச்சு
நின்னு பேசாம நிக்காம ஓடிட்டே
தெருவடைக்கப் பொங்கச் சோறு
வாங்கித் தின்னு வாயாறும் திருநாளு.
வருஷத்துக்கொரு வாட்டி தானே
வருமிந்தப் பெருநாளு!
கால் மடக்கி ராவெல்லாம் உட்கார்ந்து
கலர்க் கோலப் போட்டியில
அந்தத் தெரு இந்தத் தெரு
எல்லாத்தையும் ஜெயிச்சு
அப்புறமும் அடங்காத் திமிரோட
அல்லி அரசாணியாய்
வலம் வருமொரு நாளு!
வருஷத்துக்கொரு வாட்டி தானே
வருமிந்தப் பெருநாளு!
ஜில்லி, ஜிமிக்கி, சூரன், வழுதின்னு
கூப்பிட்ட மாடுகளை
மவராசி, மவராசான்னு
மூக்கோடு மூக்கு வைச்சுச் சீராட்டி
மூக்கணாங்கயித்துக்கொரு லீவு விட்டு
சாணித் தங்கத்தையும்
புண்ணாக்குப் புதையலையும்
பெருஞ் சொத்தா நினைக்கிற திருநாளு!
கோலம் போட்ட மண்பானை
புதுசாக் குசவன் கைப்பட்ட வெட்கத்துல
வளைஞ்சு நிக்கும் மண்ணடுப்பு
அகண்ட முதுகைப் போல
அம்சமான கண்கரண்டி அத்தனையும்
ஆத்தா சீர் கொடுக்கும் அந்நாளு
அந்த ஒரு நாளு!
ஆயக்கா குருவம்மா எல்லம்மா
அன்பரசி கருவாச்சி சொக்கி
எல்லாரும் ஒன்னாச் சேர்ந்த
அந்த ஒரு நாளு -
இப்பல்லாம் 'டிவி'க்கு முன்னால
அண்ணாந்து பார்த்தபடி
அவுக அவுக வூட்டுல
அவரக்காய் ரிமோட்லனு ஆயாச்சு!
- தமிழச்சி தங்கப்பாண்டியன்

