/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
பொள்ளாச்சி ரேக்ளாவும் பொலிவான காளைகளும்
/
பொள்ளாச்சி ரேக்ளாவும் பொலிவான காளைகளும்
PUBLISHED ON : ஜன 14, 2022

'உட்ரு, மாறிக்க... களத்திலே வந்து கொண்டிருக்கும் வண்டி எண் 8ஏ' என, 'மைக்கில்' வர்ணனையாளர் கம்பீரமான குரலில் சப்தமிட்டதும், சீறிப்பாய்ந்தோடும் காளைகளையும், தடுப்புக்கு பின் நின்று கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்யும் மக்களையும், கொங்கு மண்டலம் எங்கும் நடக்கும் ரேக்ளா போட்டிகளில் காண முடியும்.
'ரேக்ளா' என்பது பிறருக்கு சாதாரண வார்த்தை. ரேக்ளாவை எந்நாளும் காத்து, வளர்த்து வரும் இந்த ஊர் இளைஞர்களுக்கு அது, மனதினுள் உத்வேகம் கொடுக்கும் சொல்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயம் பிரதானம். உழவு மேற்கொண்டு பயிர்கள் விதைக்கவும், உரமளிக்கவும், பால் விற்பனைக்காகவும், காணும் இடமெல்லாம் தோப்புகளில் கால்நடைகள் வளர்ப்பு உள்ளது.
பலரும் நாட்டு மாடான காங்கேயம், லம்பாடி இன காளைகளை அதிக அளவில் வளர்த்து, உழவுக்கும், ரேக்ளா போட்டிக்கும் தயார்படுத்துகின்றனர்.
பழங்காலம் தொட்டே, தமிழகத்தில் பரவலாக ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டாலும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் தான் அதிக அளவில் இப்போட்டிகள் நடக்கின்றன
பந்தய தடத்தில் ரேக்ளா வண்டி அதிவேகத்தில் செல்ல, வண்டியின் எடை குறைவாக இருக்க வேண்டும். இதற்காக வண்டியின் 90 சதவீத பாகங்கள் தேக்கு மரங்களால் தயாரிக்கப்படுகின்றன. தேக்கு மரங்களை வாங்கி மூன்று மாதங்கள் உலர்த்தி, 25 நாட்கள் கடும் உழைப்புக்குபின் தான், ஒரு ரேக்ளா வண்டி உருவாகிறது.
வண்டியின் முகப்பு பகுதியில் தரையில் ஊன்றும் கொய்யாங்கட்டை, மாடுகளை இணைக்கும் நுகம், நுகத்தையும் ஓட்டுபவர் அமரும் 'பாடியையும்' இணைக்கும் ஏற்கால், கிளிமூக்கு கட்டை ஆகியவற்றை நேர்த்தியோடு அமைக்கின்றனர். நுகம் பகுதியில் தேக்கு மரத்தையும், சிலர் சாயமரத்தையும் பயன்படுத்துகின்றனர்.
தேக்கு மரத்தால் ஆன சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. வண்டி அதிர்வு குறைந்து, அதிவேகமாக பறக்க, இரும்பினாலான சக்கரத்தில் டயர் பயன்படுத்துகின்றனர். ஒரு ரேக்ளா வண்டி தயாரிக்க அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது.
காளைகள் பந்தய களத்தில் நிற்க பல வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உடலை வலுவாக்க பருத்திக்கொட்டை, கோதுமை தவுடு, உளுந்து குருணை, முட்டை, பால், பேரீச்சம் பழம், ஊட்டச்சத்துள்ள தீவனம் வழங்கப்படுகிறது.
பந்தய களத்தில் இலக்கை நோக்கி காளைகள் ஓட, வண்டி பூட்டி நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிகப்படியான உழவு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு, அவ்வப்போது நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ரேக்ளா களத்தை காணும் முன், இரண்டு, மூன்று முறை 'டிரயல்' ஓட்டம் நடத்தப்படுகிறது. பந்தயத்தில் காளைகள் வெற்றி பெற, காளைக்கும், வண்டி ஓட்டுபவருக்குமான 'கெமிஸ்ட்ரி' ரொம்ப முக்கியம்.
இதற்காக இரண்டு காளைகளும் ஒரே மாதிரியான செயல்திறனுடன் ஓட ஜோடியாக வளர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள் வரையில், ஒரு காளையை போட்டிக்கு பயன்படுத்தலாம். அதன்பின் உழவுப்பணிகளுக்கு பயன்படுகின்றன.
இரண்டரை முதல் மூன்று வயதுள்ள காளைக்கு இரண்டு பற்கள் முளைக்கின்றன. அதன்பின் நான்கு முதல் நான்கரை ஆண்டுக்குள் ஆறு முதல் எட்டு பற்கள் முளைக்கின்றன. இரண்டு முதல் நான்கு பற்கள் உள்ள காளைகளுக்கு 200 மீ., வரையிலும்; நான்கு பல்லுக்கும் மேலுள்ள காளைகளுக்கு 300 மீ., தொலைவுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்படி ரேக்ளா பந்தயத்தில் பல நுணுக்கங்கள் மறைந்திருக்கின்றன.
இது போன்ற போட்டிகளால் நாட்டு மாடுகளுக்கு என்றும் அழிவில்லை.
ச.பிரசாந்த்