PUBLISHED ON : ஜன 15, 2024

மஹாபெரியவர் சொல்றதை கேளுங்க!
சூரியனை பற்றி காஞ்சி மஹாபெரியவர் 'தெய்வத்தின் குரல்' என்னும் நுாலில் கூறியதாவது... பரிவார தெய்வமாக விளங்கும் சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் பழங்காலத்தில் சூரியனே கடவுளாக கருதப்பட்ட மதம்(சவுரம்) இருந்தது. ஒடிசாவிலுள்ள கோனார்க் என்னும்
இடத்தில் சூரியனுக்கு கோயில் இருந்தது. 'கோண அர்க்கம்' (சூரியனின் பகுதி) என்பதே 'கோனார்க்' என மாறியது. அர்க்கம் என்பதற்கு 'சூரியன்' என்பது பொருள். எருக்கம் பூவினை 'அர்க்க புஷ்பம்' என்பர். அர்க்க என்பதே தமிழில் 'எருக்கு' என்றானது. சூரியனார் கோயிலின் தலவிருட்சமாக எருக்கு உள்ளது. எருக்கம்பூவால் விநாயகரை அர்ச்சிப்போருக்கு சூரியனை வழிபட்ட பலன் சேரும்.
ஐஸ்வர்யம் பெருக...
தைமாத வளர்பிறை சப்தமியே ரதசப்தமி. அன்று சூரியனின் ரதம் மேற்கு நோக்கி நகர்கிறது. அன்று காலையில் சுமங்கலிகள் குளிக்கும் போது ஏழு எருக்க இலைகளையும், சிறிது அட்சதையையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். ஆண்கள் நீராடும் போது ஏழு எருக்க இலைகளையும், அரிசியையும் வைத்து நீராட வேண்டும். பூஜையறையில் தேர்க்கோலமிட்டு சர்க்கரைப் பொங்கல், வடை நைவேத்தியம் செய்து சூரியனை வழிபட வேண்டும். இதனால் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெருகும்.
முகத்தில் ஆயிரம் கண்கள்
ககோளம் என்ற பிரம்மாண்டமான அண்டம் வான மண்டலத்தில் இருக்கிறது என்கிறது சூரிய புராணம். இந்த அண்டத்தில் இருந்து தோன்றியவர் சூரியன். ககோல்கத்தில் இருந்து பிறந்ததால் சூரியனுக்கு 'ககோல்கர்' என்றும் பெயருண்டு. 'பிரகாசம் கொண்டவர்' என்பது இதன் பொருள். அது மட்டுமல்ல! சூரியனுக்கு ஆயிரம் முகங்கள்,
ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள், முகத்திற்கு
ஒரு கண் வீதம் ஆயிரம் கண்களும் உண்டு.
நரகம் டூ சொர்க்கம் போவோமா!
காலமாகி விட்ட நம் முன்னோர் பற்றி நம் மனசாட்சிக்கே நன்றாகத் தெரியும். “என் தாய் அவளது மருமகளைக் கொடுமைப்படுத்தினாள். என் தந்தை தினமும் குடித்து விட்டு வந்து என் தாயை உதைத்தார். என் உறவுக்காரர் அரசுப்பணியில் இருந்த போது லஞ்சம் வாங்கினார். இன்னொருவர், ஒரு ஏழைப்பெண்ணின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகளைத் திருடியதால் அவளது திருமணமே நின்று போனது. என் சகோதரர் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டார்”. இத்தகைய கொடிய பாவங்கள் செய்தவர்களெல்லாம் காலமான பின் நரகத்தில் உழன்று கொண்டிருப்பார்கள். இவர்களை சொர்க்கம் அனுப்ப பூமியில் உள்ள அவரது பிள்ளைகள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் பற்றி சூரியபுராணத்தில் சூரியனே சொல்லியிருக்கிறார். சித்திரை மாதம் வளர்பிறை அல்லது தேய்பிறை சதுர்த்தசி திதியன்று ஏழைகளுக்கு விளக்கு வாங்கி கொடுக்க வேண்டும். மண் தீபம் வாங்கிக் கொடுத்தால் கூட போதும். இவ்வாறு செய்தால் நரகத்தில் அவஸ்தைப்படும் முன்னோர் சொர்க்கம் செல்வார்கள்.
ஞாயிறு போற்றுதும்
சூரியனின் இயக்கத்தைக் கொண்டே உலகம் நடக்கிறது. எல்லா உயிர்களும் அதிகாலையிலேயே கண் விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையுடன் ஒளிச்சேர்க்கை நடத்துகின்றன. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் கடமைகளில் ஈடுபடுகின்றனர். இப்படி ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக சூரியன் உள்ளது. அதனால் வாரத்தின் முதல் நாளை சூரியனுக்குரியதாக ஏற்படுத்தினர். தமிழ் காப்பியங்களில் முதல் நுாலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்றே தொடங்குகிறது. நிலா, மழை போன்ற இயற்கை தெய்வங்கள் கூட சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.
சிவத்தலமான தலைஞாயிறு
பழங்காலத்தில் 'சவுரம்' என்னும் பெயரில் சூரியவழிபாடு இந்தியாவில் இருந்தது. சனாதன தர்மம் என்னும் ஹிந்து மதத்துடன் சவுர மதத்தை இணைத்தவர் ஆதிசங்கரர். 'மண்டல பிரம்மோபநிஷதம்' என்னும் உபநிடதத்தில் முழுமுதல் கடவுளாக சூரியன் போற்றப்படுகிறார். யாக்ஞவல்கிய மகரிஷிக்கு இந்த உபநிடதத்தை உபதேசித்தவர் சூரியனே. பிற்காலத்தில் நவக்கிரகங்களில் ஒன்றான சூரியன் வாரத்தின் முதல் நாளுக்கு உரியவரானார். இந்நாளின் பெயரால் 'தலைஞாயிறு' என்றொரு சிவத்தலம் சென்னைக்கு அருகில் உள்ளது.
உலகின் முதல் பி.ஏ.,
சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டி, சூரியனின் 'பெர்சனல் அசிஸ்டன்ட்' (பி.ஏ.,) போல செயல்படுகிறார். தினமும் நடக்க வேண்டிய பணிகளை வகுத்துக் கொடுக்கிறார். இவரையே உலகில் முதல் 'பெர்சனல் அசிஸ்டன்ட்' எனலாம். பிங்கலன் காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் வேலையை செய்கிறார்.
துணுக்கு தோரணங்கள்
* பொங்கல் வைக்கும் இடத்தில் இடப்படும் கோலத்தின் வெண்ணிறம் பிரம்மாவையும், சாணத்தின் பசுமை மகாவிஷ்ணுவையும், செம்மண்ணின் சிவப்பு சிவபெருமானையும் குறிக்கும்.
* பொங்கலன்று வாசலில் மாக்கோலம் இடுவதால் எறும்பு போன்ற உயிர்கள் இதில் உள்ள அரிசிமாவை உண்ணும். இதனால் புண்ணியம் சேரும். மாக்கோலம் இடும் வீட்டில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட (சகஸ்ர போஜனம்) புண்ணியம் கிடைக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
* மழைக்கு அதிபதியான இந்திரனை பொங்கலுக்கு முதல் நாளான போகியன்று வணங்குவது வழக்கம். சங்க காலத்தில் இந்திரனுக்கு மூன்று நாள் கொண்டாட்டம் நிகழ்ந்ததாக மணிமேகலை என்னும் இலக்கியம் கூறுகிறது.
* சோழர் காலத்தில் 'புதியீடு' (முதல் அறுவடை) என்னும் பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. தை முதல்நாளில் அறுவடை செய்த நெல்லில் பொங்கல் இட்டு வழிபடுவதை இது குறிக்கிறது.
திருமண யோகம் கைகூட...
சீதைக்கும் ராமனுக்கும் திருக்கல்யாணம் நடத்த ஏற்ற மாதம் தை. ராமன் -(பரமாத்மா - கடவுள்), சீதை (பிரகிருதி - உலக ஜீவன்). சீதாதேவி ராட்சஷ சக்தியால் ராமனை விட்டு பிரிந்தாள். பின்னர் பதிபக்தியால் மீண்டும் கணவரை அடைந்தாள். அதுபோல உயிர்களும் கடவுளை மறந்து ராட்சஷ குணத்துடன் இருக்கின்றன. அதைக் கைவிட்டு கடவுள் ஒருவரே உண்மை என்பதை உணர வேண்டும். தை மாதத்தில் ஒரு முகூர்த்த நாளில் வேதியர்களைக் கொண்டு சீதா கல்யாணம் கோயிலில் நடத்தினால் திருமண யோகம் கைகூடும்.