/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
பொங்கலோ பொங்கல்! ஸ்பெஷல் பொங்கல்!
/
பொங்கலோ பொங்கல்! ஸ்பெஷல் பொங்கல்!
PUBLISHED ON : ஜன 15, 2020

பொங்கல் வந்தால் சர்க்கரை பொங்கல் சாப்பிடும் ஆசை நமக்குள் பொங்கலோ பொங்கல் என பொங்கும். எத்தனை நாளைக்கு தான் ஒரே விதமான சர்க்கரை பொங்கலை சாப்பிடுவீங்க... வாங்க, சென்னை உணவுக் கலைஞர் வசந்தி விதவிதமான ஸ்பெஷல் பொங்கல் வைக்க செய்முறை சொல்றாங்க...
ரவா பொங்கல்
தேவையானவை:
ரவை - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
பால் - 2 கப்
தண்ணீர் (அ) இளநீர் - 2 கப்
நெய் - 4 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
முந்திரி - 20
மிளகு - 20
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு (தட்டியது)
கறிவேப்பிலை - 20
பச்சை மிளகாய் - 1
செய்முறை: கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாசிப் பருப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசம் போக வறுக்கவும். ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து இஞ்சி, உடைத்த முந்திரி சேர்க்கவும். இத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து சிறிது வறுத்து தீயில் பொன்னிறமாக வதக்கவும் அதில் 2 கப் பால், 2 கப் இளநீர் (அல்லது தண்ணீர்) சேர்த்து கொதி வரும் போது வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து குழைய வேக விடவும்.
இத்துடன் வறுத்த ரவை சேர்த்து மெதுவாக கிளறவும். 10 நிமிடங்கள் மூடி வைத்து பின் மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து கிளறி இறக்கினால் ரவா பொங்கல் ரெடி.
அவல் சர்க்கரை பொங்கல்
தேவையானவை:
அவல் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு - 1/2 கப்
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் - 5 ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பேரீச்சை - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த திராட்சை - 10
செய்முறை: அவலை தண்ணீரில் அலசி பால் தெளித்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் ஏற்றி 2 ஸ்பூன் நெய்யில் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், நறுக்கிய பேரீச்சை, காய்ந்த திராட்சை சேர்த்து பிறகு ஏலக்காய் துாள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இத்துடன் ஊற வைத்த அவல், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும். இனிப்பு அவல் பொங்கல் ரெடி.
வரகு அரிசி பொங்கல்
தேவையானவை:
வரகு அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 15
பெருங்காயப்பொடி - சிறிது
கறிவேப்பிலை - 10
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை: வரகு அரிசி, பாசிப்பருப்பை குக்கரில் போட்டு 4 டம்ளர் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். அதனுடன் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். குக்கரை திறந்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும். நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்கவும். தாளித்ததை பொங்கலில் இட்டு தேவையான உப்பு சேர்த்து கிளறவும். சுவையான வரகு அரிசி பொங்கலை தேங்காய் சட்னியுடன் ருசிக்கலாம்.
மிக்ஸ்டு புரூட் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
முந்திரி - 10
திராட்சை - 1/4 கப்
மிக்ஸ்டு புரூட் - 2 கப்
கறும்பு சாறு - 2 கப்
நெய் - 1/4 கப்
கல்கண்டு - 1 கப்
ஏலக்காய் - 5
செய்முறை: பாசிப்பருப்பு, அரிசியை நன்கு கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். முந்திரி, திராட்சை, ஏலக்காயை 1 ஸ்பூன் நெய்யில் வறுக்கவும். நறுக்கிய பழங்கள், கற்கண்டை நெய் விட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். வேக வைத்த அரிசி, பாசிப்பருப்பை மசிக்கவும்.
இத்துடன் கரும்பு சாறு கலந்து நன்கு கலக்கவும். இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கற்கண்டு சேர்த்து மிதமான தீயில் கட்டி சேராமல் கிளறவும். மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும். பின் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி தண்ணீர் கொதிக்கும் போது ஓட்ஸ், வேக வைத்து மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிளறி 5 - 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். ஓட்ஸ் வெந்ததும் வறுத்த முந்திரி, நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மிக்ஸ்டு புரூட் பொங்கல் தயார்.

