PUBLISHED ON : ஜன 04, 2020

குட்டிப்பாளையம் கிராமத்தில், கழுதைகளை வளர்த்து வந்தார், ஒரு சலவைத் தொழிலாளி. அவை, விசுவாசமாக, பொதி சுமந்து வாழ்ந்து வந்தன. முன்னேற வேண்டும் என்ற லட்சியம் இன்றி, கிடைத்ததை உண்டு வாழ்ந்தன.
காட்டுப்பகுதியில் வழி தவறிய குதிரைக்குட்டி ஒன்று, அந்த கிராமத்துக்கு வந்தது. சலவைத்தொழிலாளி வீட்டருகே, ஒரு கணம் நின்று உற்றுப்பார்த்தது.
உருவ அமைப்பில் உத்தேசமாக ஒரே மாதிரி இருந்த கழுதைகளுடன் சேர்ந்து கொண்டது. கூடுதலாக ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அதையும் பராமரிரத்தார் தொழிலாளி. குதிரைக்குட்டி பொதிகளைச் சுமக்க ஆரம்பித்தது. தன் பலத்தையும், ஆற்றலையும் மறந்தது.
அன்று ஆற்றங்கரையில், துணி மூட்டையை இறக்கிய பின், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கழுதைகள், அவ்வழியே ஓடிய குதிரை ஒன்றைக் கண்டன. அதன் அழகும், கம்பீரமும் கவர்ந்ததால் வியந்து, 'அதைப் போலதான் இருக்கிறோம்; நம்மால் துள்ளிக்குதித்து ஓட முடியவில்லையே...' என, புலம்பின.
அங்கிருந்த குதிரைக் குட்டியும், 'ஆமாம்... ஆமாம்... மிக மிக ஆழகாக இருக்கிறதே, இது என்ன வகை விலங்கு; புயல்போல் அல்லவா பாய்ந்து ஓடுகிறது...' என, வியந்து கேட்டது.
கூட்டத்தில் மூத்த கழுதை, 'அந்த விலங்கிற்கு, குதிரை என்று பெயர்; அதிவேகமாக பாய்ந்து ஓடும்; படையில் பீடுநடை போட்டு, எதிரிகளை வீழ்த்தும். அதனுடன் போட்டி போடவே முடியாது...' என்றது.
'ஓ அப்படியா...' என்ற குதிரைக்குட்டி, தான் யாரென்று அறியாமலேயே, இயந்திர கதியில், பொதியைச் சுமந்து கொண்டிருந்தது.
செல்லங்களே... இயந்திரம் போல் செயல்படாதீர்கள். கற்பனையுடன் வலம் வாருங்கள். உங்கள் திறனை அறிந்து செயல்களில் ஈடுபடுங்கள். உலகில் உயர்ந்த பதவிகளில் அமரும் வாய்ப்பு தேடி வரும்.
பூபதி பெரியசாமி
