PUBLISHED ON : ஜன 04, 2020

அவன் சேட்டைக்காரன். பள்ளியில் எந்த ஆசிரியருக்கும் பிடிக்காது. வீட்டுப் பாடம் ஒழுங்காக செய்ய மாட்டான். நேரத்திற்கு பள்ளிக்கு வர மாட்டான்; வந்தாலும், வகுப்பை கவனிக்காமல், ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான். 'படிப்பதற்கு லாயக்கற்றவன்' என்று பள்ளியை விட்டு அனுப்பிவிட்டது நிர்வாகம்.
குறும்பு செயல்களுக்காக, அப்பாவிடம் அடி வாங்காத நாட்களே இல்லை. அன்றும் அப்படித்தான் நையப்புடைத்து விட்டார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பக்கத்து வீட்டு சிறுவனுக்கு, வயிற்றுவலியை உண்டாக்கி விட்டான்.
சரி, ஒருவனின் வயிற்றுவலியை, மற்றொருவனால் எப்படி ஏற்படுத்த முடியும்.
அது பற்றி பார்ப்போம்...
ஒரு நாள் பள்ளிக்கு மட்டம் போட்டான். ஊருக்கு ஒதுக்குப் புறமாக வசித்த பாட்டியிடம், 'பறவை எல்லாம் எப்படி பறக்குது...' என்று கேட்டான்.
'மண்ணுல புழுக்களை சாப்பிடுறதால பறவைகளால் பறக்க முடியுது...' என்றாள் பாட்டி.
'புழுவைத் தின்றால் பறக்க முடியுமா' என, யோசித்தபடியே வீட்டு தோட்டத்துக்கு போனான். ஈரம் கவிந்திருந்த இடத்தில் தோண்டினான். நிறைய மண் புழுக்கள் இருந்தன. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வந்தான். பறக்கலாம் என்ற நம்பிக்கையில், அவற்றை அரைத்துக் குடித்தான்.
கடுமையான குமட்டலை ஏற்படுத்தியது; சகித்தபடி, பறக்கும் ஆர்வத்தில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் வயிற்றைக் கலக்கியது. அன்று முழுவதும் கழிப்பறையில் அமர்ந்திருந்தான். வயிற்றுப் போக்கால் அவதியுற்றான். 'பறக்க முடியவில்லையே' என்ற கவலை வாட்டியது.
மறுநாளும் பள்ளிக்க மட்டம் போட்டு அதே பாட்டியிடம், 'நீ சொன்ன மாதிரியே புழுக்களை புடிச்சு தின்னு பார்த்தேன்; பறக்க முடியலயே...' என்று பரிதாபமாக கேட்டான்.
'பறவைகளை நல்லா பாத்தது இல்லையா... அவை, புழுக்களை மட்டும் அல்ல; மூலிகை செடிகளையும், பழங்களையும் சாப்பிடும்... எல்லாத்தையும் சேத்து சாப்பிடறதுனால தான் பறக்கமுடியுது...' என்று, விளக்கமளித்தாள்.
இந்தமுறை, புழுக்களோடு சில மூலிகைகளையும் சேர்த்து அரைத்தான். அதை சாப்பிட்டு சோதிக்க அவன் தயாராக இல்லை. புழு சாப்பிட்ட அனுபவம் தடுத்தது.
யோசித்தான். பக்கத்து வீட்டில் வசித்தவனை ஏமாற்றி அழைத்து வந்தான். 'குடித்தால் பறக்கலாம்...' என்று ஆசை வார்த்தை கூறி, புழு மூலிகை கலவையை தந்தான்.
அந்த கலவையைக் குடித்தவன் பறப்பான் என, எதிர்பார்த்த அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. குடித்தவன் வயிற்று வலியால் துடித்தான். அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார் அவன் அம்மா.
இந்த செயலுக்காக தான், அப்பா நையப்புடைத்தார். தப்பினால் போதும் என்று ஓடியவன், நள்ளிரவிலும் வீடு திரும்பவில்லை. அப்பாவுக்கு கிலி பிடித்துவிட்டது. அம்மாவின் அழுகுரல் அதிகமானது. அக்கம் பக்கத்தில் தேடத் துவங்கினர்.
வீட்டின் பரண் மேல் மறைந்திருந்தவன், மெல்ல இறங்கி வந்தான்.
கோபத்தோடு, 'அங்கே என்னடா செய்துகொண்டிருந்தே...' என்றார் அப்பா.
'அடை காத்துக்கிட்டிருந்தேன்...'
'அடை காக்குறியா...'
குடும்பத்தில் அனைவரும் சிரிக்க, அப்பாவின் கோபம் தணிந்தது.
பரணில், கோழி முட்டைகள் மீது உட்கார்ந்திருந்தான். சில முட்டைகள் உடைந்து போயின. இது போல், வினோதமான செயல்களால் வளர்ந்த அந்த சிறுவன், பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, உலகே வியக்கும் விஞ்ஞானியானார்.
விடை:
முட்டையை அடைக்காத்தவர் இவர் தான். வட அமெரிக்கா நாடான கனடா, மிலன் நகரில், 1847 பிப்., 11ல் பிறந்த பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளால், உலகத்தை மாற்றி அமைத்தவர்.
