
விவசாயியிடம், ஒரு கழுதை இருந்தது; கடுமையாக உழைத்தது.
அதிக சுமையை ஏற்றிய போதும், கவலைப்படாமல் வேலையை ஒழுங்காக செய்து வந்தது.
ஆண்டுகள் உருண்டோடின.
கழுதைக்கு வயது முதிர்ந்தது; அதிக சுமைகளை சுமக்க முடியவில்லை. விவசாயிக்கு அது புரியவில்லை. எப்போதும் போல, அதிக சுமையை ஏற்றி வந்தான்.
ஒரு நாள் -
மூட்டைகளை ஏற்றியபோது, வழுக்கி விழுந்தது கழுதை; விவசாயி அடித்து நொறுக்கினான். மிகுந்த துன்பத்துடன், சிரமப்பட்டு எழுந்து நடந்தது.
சில வாரங்களுக்குப் பின், 'உனக்கு வயதாகி விட்டது; இங்கிருந்து சென்று விடு; எனக்கு இனிமேல் வேண்டாம்...' என்று, கோபத்தில் கத்தினான் விவசாயி.
'எஜமான் என் வாழ்வு முழுவதும் இங்கேயே கழித்து விட்டேன்; இனி எங்கு செல்வேன். எனக்கு யார் உணவு கொடுப்பர். தயவுசெய்து, என்னை இருக்க விடுங்க... வேலைகளை செய்கிறேன்...'
'பயனில்லாத, வேலை செய்ய வலுவில்லாத நீ எனக்கு வேண்டாம்; உனக்கு பலமிருந்தால், சிங்கத்தையோ, புலியையோ காட்டிலிருந்து இங்கே இழுத்து வா பார்க்கலாம்... அதை நிரூபித்தால், இங்கேயே தங்கலாம்...'
'எப்படி ஐயா, சிங்கம், புலியை இழுத்து வர முடியும்... என்னைப் பார்த்ததும் அடித்துக் கொன்று தின்று விடுமே...'
உண்மையை சொன்ன கழுதையை வெளியே தள்ளி, கதவை மூடினான் விவசாயி.
சோகத்துடன், மர நிழலில் படுத்திருந்தது.
அந்த பக்கமாக வந்த நரி, 'ஏன் மாமா, வருத்தத்தில் இருக்கிறாய்... என்ன நடந்தது...' என்றது.
சோகக்கதையைக் கூறி, 'உதவ முடியுமா...' என கேட்டது கழுதை.
சிறிது நேரம் யோசித்தபின், 'என்னோடு வா...' என்றது நரி.
சிங்கத்தின் குகைக்கு அவை சென்றன.
குகை முன் வந்த நரி, 'நீ இங்கேயே இரு; நான் சத்தம் கொடுத்ததும், உன் எஜமான் வீடு நோக்கி திரும்பி பார்க்காமல் ஓடு... வழியில் நிற்பதோ, திரும்பி பார்ப்பதோ கூடாது. அதன்பின் நடப்பதைப் பார்..' என்றது. புரியாமல் தலையாட்டியது கழுதை.
ஒரு தடித்த கயிறை, கழுதையின் வாலில் முடிச்சிட்டு, மற்றொரு முனையை குகையில் உறங்கும் சிங்கத்தின் வாலில் கட்டியது நரி. வேகமாக வெளியில் வந்து, 'ஓடு...' என்றது. சிங்கத்தை இழுத்து, வேகமாக ஓடியது கழுதை.
திடீர் நிகழ்வால், எழுந்து கொள்ளவோ, கழுதையை தாக்கவோ சிங்கத்தால் முடியவில்லை.
வேகமாக ஓடி, எஜமான் முன் நின்றது கழுதை.
ஆச்சரியத்துடன், 'உண்மையிலேயே சிங்கத்தை கொண்டு வந்துள்ளாயே; எப்படி நடந்தது...' என்றான் விவசாயி.
அதற்குள் அடியாட்கள் கம்புகளுடன் வந்து சிங்கத்தை துரத்தி குகைக்குள் அடைத்தனர்.
'உண்மையிலேயே, நீ வீரமும், பலமும் உள்ளவன் தான்; இனி இங்கேயே வாழலாம்; உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்...' என்றான் விவசாயி.
குழந்தைகளே... எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும், அறிவால் வெற்றி கொள்ளலாம்!
க.நா.ராமகிருஷ்ணன்

