
மிகப்பெரிய செல்வந்தர் சுந்தர். ஏழை, எளியோருக்கு உதவுவார். மக்களிடம், மதிப்பும், மரியாதையும் பெற்று வாழ்ந்தார். கடுமையான உழைப்பாளி.
அவருக்கு, இரு மகன்கள். மூத்தவன் பரிமள்; நற்குணம் படைத்தவன்.
இளையவன், ஸ்ரீதர்; துர்குணம் படைத்தவன்; ஊதாரி. அவன் போக்கைக் கண்டு மிகவும் கவலைப்பட்டார் தந்தை.
இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்து இருவரையும் அழைத்து, 'என் பழைய வீடு யாருக்கு வேண்டும்...' என்றார்.
'பழைய வீடு வேண்டாம்; அதற்கு ஈடாக, பணமாக கொடுங்கள்... வசதியான வீடும், தோட்டமும் வாங்கிக் கொள்கிறேன்...' என்றான், ஸ்ரீதர்.
ரொக்கமாக, 5 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பழைய வீட்டை விரும்பி வாங்கிக் கொண்டான் பரிமள்.
சில நாட்களில் இறந்தார் சுந்தர்.
ஊதாரித்தனமாக பணத்தை செலவிட்டு கொட்டமடித்தான், ஸ்ரீதர். அவனை ஏமாற்றி, அரசு நிலத்தில் வீடு கட்ட வைத்து, பணத்தை அபகரித்தனர் சிலர். நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் மாட்டிக் கொண்டான்.
குற்றவாளி என, தீர்ப்பு வந்தது. கட்டிய வீட்டை இடிக்கவும், அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார், நீதிபதி.
எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வந்தான் ஸ்ரீதர்.
யாரும் உதவ முன் வரவில்லை. துாண்டியவர்களும் கைகொட்டி நகைத்தனர்.
தம்பியின் துன்பம் அறிந்தான் பரிமள்.
'வருந்தாதே... தீயவர் சகவாசத்தால் ஏற்பட்ட பலனைப் பார்த்தாயா... என்னுடன் வந்து விடு... சேர்ந்து உழைப்போம்...' என, அறிவுரை கூறினான்.
வருந்தி மன்னிப்புக் கேட்டான் ஸ்ரீதர். நன்றாக உழைத்து எல்லாரிடமும் அன்பு காட்டி வாழ்ந்தான்.
தளிர்களே... அனைவருடனும் அன்பாக பழகி உழைத்து வாழ பழகுங்கள்.

