
பெயரில் அறிவியல்!
சும்மா உருவாகிவிடவில்லை பெயர்கள். தமிழில் தாவரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள், மொழி சார்ந்தது மட்டுமல்ல, சூழலியல் அறிவையும் உள்ளடக்கியது. தாவரத்தின் பண்பு, தோற்றம், வளரும் பண்பு என பல அம்சங்களைக் கொண்டு சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயர்கள், அறிவியல் பூர்வமாகவும் உள்ளன.
எடுத்துக்காட்டாக புளி, கொடுக்காய்புளி மரங்களை எடுத்துக் கொள்வோம். தோற்றத்தில், புளியைப் போல் இருக்கும் கொடுக்காய்புளி. காய், தேள் கொடுக்கு போல வளைந்து இருக்கும். இது காரணப் பெயர் மட்டுமல்ல, அந்தத் தாவரம், புளி குடும்பத்தையும் சேர்ந்தது. யானைப்புளி, என்றொரு தாவரம் உண்டு. உருவத்தில் பெரிதாக இருப்பதால் இந்த பெயர் பெற்றது.
தமிழர் மரபில், இதுபோல் நிறைய உள்ளன. அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தான் பெயர்கள் சூட்டியுள்ளனர். உள்நாட்டில் வளருபவற்றை, இயல் தாவரம் என்பர். வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதை அயல் தாவரம் என்பர்.
தாவரங்கள் குறித்த தகவல் அறியும் அக்கறை, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது ஆக்கப்பூர்வமான மாற்றம். இந்த நேரத்தில், மரம் நடுவதையும், வெட்டுவதையும் முறைப்படுத்த, தாவர ஆணையம் போன்று ஓர் அறிவுப்பூர்வமான அமைப்பு மிக முக்கியத் தேவை.
ஓர் இடத்தில் வளர்ந்துள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்ற முடிவெடுப்பதற்கு மட்டும் இன்றி, எந்த இடத்தில், என்ன வகை மரங்களை நடுவது உகந்ததாக இருக்கும் என்ற ஆலோசனை வழங்கவும், அந்த அமைப்புக்கு அதிகாரம் தேவை.
அதற்கு ஏற்ற நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களை உள்ளடக்கிய குழுவை, உருவாக்க முன்வர வேண்டும் தமிழக அரசின் வனத்துறை.
சொதப்பல் விமானம்!
மனிதனின் கனவுகளில் ஒன்று பறப்பது... கப்பல் போக முடியாத பகுதிகளையும் அடைய ஆசைப்பட்டான். அந்த முயற்சியில் உருவானது தான் விமானம். அதிலும், மிகவேகமாக பறக்க ஆசைப்பட்டதால் உருவானது சூப்பர் சானிக் விமானம்.
பயணியருக்கான முதல் சூப்பர் சானிக் விமானம், கான்கார்டு எனப்படுகிறது. அது மார்ச், 1969ல் வானில் உயர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் நகரிலிருந்து, 7,100 கி.மீ., துாரத்தில் உள்ள, அமெரிக்கா, நியூயார்க் நகரை, மூன்று மணி நேரத்தில் அடைந்தது.
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து- - பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் தயாரான இந்த விமானம், நவீனப் போக்குவரத்தின் அதிசயமாக பேசப்பட்டது. சில பிரச்னைகளும் ஏற்பட்டன. அவை:
* வானில் பறந்தபோது ஏற்பட்ட பேரொலி, தரையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது
* பேரொலி மனிதர்களின் செவித்திறனையே சிதைக்கும் அளவில் இருந்தது
* அதிவேக அழுத்த அலைகள், கட்டட கண்ணாடிகளில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த பாதிப்புகள் உறுதியானதை அடுத்து, கான்கார்டு விமானம், தங்கள் பிராந்தியத்துக்குள் பறக்க, பல நாடுகள் தடைவிதித்தன.
அதிக எரிபொருளையும் குடித்தது இந்த விமானம். ஒரே நேரத்தில், 100 பயணியர் மட்டுமே செல்ல முடிந்தது. கட்டணமாக பெருந்தொகை வசூலிக்கப்பட்டது.
ஐரோப்பிய நிறுவனங்களான இங்கிலாந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ், பிரான்ஸ், ஏர் பிரான்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் மட்டுமே, கான்கார்டு விமானங்களை இயக்கிவந்தன. பெரும் இழப்பையும் அந்த நிறுவனங்கள் சந்தித்தன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில், 2000ல் புறப்பட்ட, கான்கார்டு விமானம் விபத்தைச் சந்தித்தது. விமானத்தில் பயணித்த, 113 பேரும் இறந்தனர். இதைத் தொடர்ந்து, அவ்வகை விமானங்கள் சேவையில் இருந்து விலக்கப்படுவதாக, நவம்பர் 26, 2003ல் அறிவிக்கப்பட்டது.
கடைசியாக, அக்., 24, 2003ல் அமெரிக்கா, நியூயார்க், கென்னடி விமான நிலையத்தில் புறப்பட்டது, கான்கார்டு விமானம். பிரபலமான, 100 பேர் அதில் பயணித்தனர். மூன்று மணி நேரத்தில், லண்டனை அடைந்தது. பின், வானில் எழவேயில்லை. அதன் சேவை, முற்றிலும் தடை செய்யப்பட்டது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

