PUBLISHED ON : அக் 17, 2020

வெறுப்புடன் நடந்தது கரடி.
அருகே சென்ற மான், 'எதற்காக, அடிக்கடி, உன் உடலையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்...' என கேட்டது.
'பார்... உடலெங்கும் சடை சடையாய் முடிகள். இவற்றை பார்த்தால் வெறுப்புத்தான் வருகிறது. இவை தொலைந்தால் தான் நிம்மதியாவேன். அதற்கு ஒரு யோசனைக் கூறு...'
'முடிகள் தான், உனக்கு அழகு சேர்க்கின்றன...'
'நான் வெறுப்பதை பாராட்டுகிறாயே... தயவுசெய்து, என் மனநிலை புரிந்து ஒரு வழி சொல்...'
'உன் முடிகள் தான் அழகு! இதை, எத்தனை முறை வேண்டுமானலும் சொல்லிக் கொண்டேயிருப்பேன். முடியை நீக்க யோசனை சொல்லும் அளவு எனக்கு அறிவில்லை...'
'உன்னோடு பேசியது வீண்...'
மானை விரட்டியடித்தது கரடி.
வழியில் குரங்கைச் சந்தித்தது. உடலில் படர்ந்திருக்கும் முடியை நீக்க, யோசனை கேட்டது கரடி.
எப்பவோ நடந்த சிறு தகராறில் கரடியை அவமானப்படுத்த திட்டமிட்டிருந்தது குரங்கு. அதற்கு சரியான சந்தர்ப்பமாக எண்ணி, 'முடிகளுக்கு நெருப்பு வைத்து விடு; எரிந்து, சாம்பலாகி விடும். பின், அழகாக காட்சியளிப்பாய்...' என்றது வஞ்சக குரங்கு.
கண்மூடித்தனமாக அதை நம்பி, உடலில், நெருப்பு வைக்க முயற்சித்தது கரடி.
இதைக் கண்டு திடுக்கிட்டு, 'முடிக்கு நெருப்பு வைத்தால், நீயும் சேர்ந்து எரிந்து இறந்து விடுவாய். குரங்கின் வஞ்சம் தெரியாமல் அந்த யோசனையை செயல்படுத்தாதே...
'மனுஷங்களைப் பார்... முடியுள்ள கரடி பொம்மை செய்து, குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கின்றனர். 'டெட்டி பியர்... டெட்டி பியர்...' என்று பாடி, செல்லம் கொஞ்சுவர் குழந்தைகள். உன் முடியின், கதகதப்பை அனுபவிக்கின்றனர். முட்டாள் தனமான முடிவை கைவிடு...' என அறிவுரைத்தது மான்.
கரடிக்கு புத்தி வந்தது.
செல்லங்களே... நல்லோரிடம் அறிவுரை கேட்டு, அதுபோல் வாழ பழகுங்கள்.
