PUBLISHED ON : அக் 15, 2022

திருநெல்வேலி மாவட்டம், சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
ஓவிய ஆசிரியர் தேவபிச்சை ஒருமுறை காரணம் எதுவும் சொல்லாமல் அடித்து விட்டார். கடும் கோபத்தில், அவரை பழி தீர்க்கும் உணர்வு ஏற்பட்டது. ஒருநாள் அவர் கழிப்பறைக்கு சென்றதை மூன்றாவது மாடியிலிருந்து கவனித்தேன். இறங்கி ஓடி வந்து, கழிப்பறை கதவை தாழ் போட்டு ஓடி விட்டேன்.
நான் இறங்கி வருவதற்குள், ஓவிய ஆசிரியர் வெளியே சென்று விட்டார். ஆனால், மற்றொரு ஆசிரியர் மாட்டிக் கொண்டார். நான் செய்ததை யாரும் கவனிக்கவில்லை என எண்ணியிருந்தேன். கழிப்பறை கதவை தாழ்ப்பாள் போட்ட விஷயம் பரவி, பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடந்தது. யாரும், 'தெரியாது...' என ஒதுங்கி விட்டனர். தப்பி விட்டதாக நிம்மதி அடைந்தேன்.மறுநாள் -
என் வீட்டின் வழியாக சென்ற ஆசிரியர் சாம்ராஜ் அழைத்தார். ஒன்றும் தெரியாதது போல், பணிவாக, வணக்கம் வைத்தபடி அருகே சென்றேன். மிக மென்மையாக, 'நேற்று பள்ளியில் என்ன செய்தாய்...' என்று கேட்டார். திருடன் போல் விழித்தபடி, 'ஒன்றும் செய்யவில்லையே...' என்றேன்.
மிக அமைதியாக, 'கழிப்பறை கதவை சாத்தி, தாழ்ப்பாள் போட்டு, நீ ஓடியதை பார்த்தேன். அது தவறல்லவா...' என கனிவுடன் கேட்டார். சம்மட்டியால் மனதில் அடிப்பது போல் இருந்தது. பழி வாங்கும் எண்ணம் தவறு என்பதை உணர்ந்து, என்னை மாற்றிக் கொண்டேன். குருவின் மென்மை சொல் வாழ்வை மாற்றியமைத்தது. அன்று முதல், யார் மனதையும் புண்படுத்தியது இல்லை; யாரையும் வெறுத்ததும் இல்லை.
இப்போது, என் வயது, 49; சொந்தமாக புத்தகக் கடை நடத்தி, மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். கனிவான சொற்களால் மாற்றிய அந்த ஆசிரியர் சமீபத்தில் மறைந்தார். அவர் நினைவை மனதில் கொண்டுள்ளேன்!
- அ.நஜீப்கான், சென்னை.
தொடர்புக்கு: 98404 92444
