PUBLISHED ON : ஜூலை 15, 2023

துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, பி.எஸ்.பெரியநாயகம் உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 10ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!
கணித ஆசிரியர் ரத்தினபாண்டியன், அன்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நான் அமர்ந்திருந்த மேஜையின் ஒருபுறம் லேசாக விரிசல் விட்டிருந்தது. அதற்குள் பிளேடை சொருகி, விரலால் சுண்டி, அதிர்வால் வந்த ரீங்கார ஓசையை ரசித்து கொண்டிருந்தேன்.
இதை கண்டதும் பாடத்தை நிறுத்தி, அருகில் வந்த ஆசிரியரை கூட கவனிக்காமல், விளையாடியபடி இருந்தேன். என் கவனத்தை திருப்ப கையிலிருந்த பிரம்பால் ஆக்ரோஷமாக மேஜையில் அடித்தார்; நடுங்கியபடி எழுந்த என்னை புறக்கணித்து, 'பாடத்தை நன்கு கவனியுங்கள். அவன் விளையாடட்டும்...' என்றபடி தொடர்ந்தார்.
அன்று, அரையாண்டு விடைத்தாள் கொடுத்துக் கொண்டிருந்தார். கடைசியாக என்னை அழைத்தார்; நடுக்கத்துடன் சென்றேன். வகுப்பில் எல்லாருக்கும் தெரியும்படி என் விடைத்தாளை விரித்து காட்டிய பின் தந்தார். அதில், 100 மதிப்பெண் என்றிருந்தது.
அனைவரும் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். விலை உயர்ந்த பேனா ஒன்றை பரிசாக தந்து வாழ்த்தினார் ஆசிரியர். என் ஆனந்தக் கண்ணீர் நிற்க வெகுநேரமாயிற்று.
தற்போது எனக்கு, 73 வயதாகிறது; சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறேன். அந்த ஆசிரியரை மனதில் நிறுத்தி கணக்கு பிசகாமல், வியாபாரம் செய்து வாழ்கிறேன்.
- பி.வேல்சாமி, சென்னை.
தொடர்புக்கு: 70925 06849
