PUBLISHED ON : ஜூலை 15, 2023

மயிலாடுதுறை, திவான் பகதுார் தி.ரெங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில், 1986ல், 6ம் வகுப்பு ஆங்கில வழியில் படித்தபோது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் மீனாட்சி அம்மாள். துவக்க கல்வியை தமிழ் வழியில் கற்றிருந்ததால் ஆங்கிலத்தில் தடுமாறிய என் போன்றோரின் பதற்றம் போக்கி நம்பிக்கை ஊட்டினார்.
ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை, முக்கனிகள் போல் இனிமை நிரப்பி தந்தார். வரைபடங்கள் வழியாக வரலாறு, புவியியல் முக்கியத்துவத்தை உணர்த்தி கற்பித்தார்.
அவர் தந்த பயிற்சியால் தான் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள், கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை, 'கூகுள் மேப்' உதவியின்றி அடையாளம் காணும் திறனை பெற்றேன்.
பரவலாக இன்று நடைமுறையில் உள்ள, 'அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்' என்ற கற்பித்தல் முறையை அப்போதே அறிமுகம் செய்து, 'பயணம் செய்யும் போது, பெயர் பலகை, அறிவிப்புகளை கூர்ந்து நோக்கினாலே ஆங்கில மொழியை சுலபமாக கற்கலாம்...' என அறிவுரைத்தார்.
அவரது செயல்முறை கற்பித்தல் உத்தியால் வேதியியல் பாடத்தில், தனி ஆர்வம் கொண்டேன். கல்லுாரி இளநிலை பட்ட வகுப்பில் அதையே முதன்மையாக படித்து முன்னேறினேன்.
என் வயது, 47; இதழ்களில், கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி வருகிறேன். கனிவு குன்றாமல், கண்டிப்பு மிகுந்த தாய் போல் பாடங்களை நவீனமயமாக கற்பித்த அந்த ஆசிரியை பூரண நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
- ஜெயஸ்ரீ எம்.சாரி, அவுரங்காபாத்.
தொடர்புக்கு: 94059 03763
