PUBLISHED ON : ஆக 31, 2018

ஒரு ஊரில், இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு, கண் பார்வை தெரியாது; அதை மறைத்து, திருமணம் செய்தான். மணமேடையில் சுற்றி வரும் போது, மனைவியின் விரலை பிடித்து, சமாளித்தான்; காரில் ஏறும் போது, மனைவியின் புடவைத் தலைப்பை பிடித்தபடியே, அழகாக சமாளித்தான்.
திருமணம் முடிந்த அன்றே பொண்ணு, மாப்பிள்ளை, இருவரும் மாமனார் வீடு சென்றனர்.
காரில் இருந்து இறங்கியதும், மாப்பிள்ளையை முதலில் போகச் சொன்னார்கள்; வீட்டு வாசலில் பெரிய வேப்பமரம் இருந்தது; அதில்,போய் இடித்துக் கொண்டான்.
'என்ன மாப்பிள்ளை மரத்தை ஏன் இடிச்சீங்க...' என்றனர்.
''இல்ல... மரம் எவ்வளவு வலிமையா இருக்குன்னு, சோதித்து பார்த்தேன்...'' என்றான்.
எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், மகிழ்ச்சி!
'இவ்வளவு பெரிய மரத்தையே தோளில் இடிச்சு சோதனை செய்றாரே... இவர் பலசாலி மாப்பிள்ளை...' என்று பெருமைப்பட்டனர்.
இரவு மாமனார் வீட்டில் விருந்து...
இலை போட்டு, வடை, சுழியன் பறிமாறினாள், மாமியார்.
அந்த வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது, மாப்பிள்ளைக்கு வைத்த வடையை துாக்கியபடி ஓடியது; இதை பார்த்து அனைவரும் சிரித்தனர்.
'என்ன மாப்ள... பூனை வந்து, ஒவ்வொண்ணா திருடுது, விரட்டாம, பேசாம இருக்கீங்களே...' என்று சொல்லி, சிரித்தனர்.
''திருட்டுப் பூனை... அதுவும் எத்தனை முறை தான் வடையை துாக்கிட்டுப் போவுதுன்னு, சோதனை செய்தேன்...'' என்று கூறி சமாளித்தான்.
ஆனாலும், 'இப்படியே விட்டா, கண்ணு தெரியாதத கண்டு பிடிச்சிடுவாங்க... பூனை வந்தததும், 'ச்சூ' என்று அடித்து விரட்டணும்' என்று மனதிற்குள் நினைத்தபடி காத்திருந்தான்.
இந்த முறை இட்லி வைப்பதற்கு வந்தார் மாமியார்.
காலடி ஓசை கேட்ட மாப்பிள்ளை, பூனை தான் வருதுன்னு நெனச்சு, 'ச்சீ... திருட்டுப்பூனை உனக்கு இதே வேலையா...' என்று தட்டி விட்டான்.
மாமியார் கையில் இருந்த இட்லி முழுவதும் சிதறியது.
இப்போது...
மாப்பிள்ளைக்கு கண்ணு தெரியாத விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.
பொய்க் கூறி, எத்தனை காலம் தான் சமாளிக்க முடியும்...
அப்புறம் என்ன... 'என் மகளை ஏமாத்தி கட்டிகிட்டியேடா பாவி...' என்று அடித்து நொறுக்கி விரட்டி விட்டனர்.
குட்டீஸ்... இப்படியெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றினால், இந்த மாப்பிள்ளையின் கதி தான் நேரிடும். அதை விட, உண்மையை சொல்லுவது எப்போதும் நல்லது!
06. ஆசிரியர் தினம் சிறப்புக் கட்டுரை! : மாதா, பிதா, குரு...
நாடு என்பது, எண்ணற்ற மனிதர்களின், அறிவு, உழைப்பு, ஆற்றல், திறமை மற்றும் ஒற்றுமை போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டது.
மாதா, பிதா, குரு என்று, மூன்று பேரும் சமமாகி விட்டனர்.
காரணம்... குரு - ஆசிரியருடனான நேரம், பெற்றோரிடம் இருப்பதை விட, அதிகமாக இருக்கிறது. அதை விட, பெற்றோருக்கு சமமான பொறுப்பு, ஆசிரியரிடம் இருக்கிறது.
தேசத்தின் சிறந்த குடிமகனை, நாளைய எதிர்காலத்தை உருவாக்கும், உன்னத கடமை, பெருமை ஆசிரியர்களுடையது. இந்த கடமையை உணர்ந்து செயல்படுவதே நல்லாசிரியர்.
வியாதிகளே உற்ற தோழன்!
தன் கடமையை மறக்க கூடாதவர்கள் மனிதர்கள்; கடமையை ஒழுங்காக செய்யும் நாடு ஆரோக்கியமாக, ஆனந்தமாக இருக்கிறது.
கடமையை மறக்கவே கூடாதவர்கள் ஆசிரியர்கள்; ஒரே ஒரு கெட்ட ஆசிரியர் இருந்தாலும், ஆசிரியர் இனமே, வெட்கி, தலை குனிய வேண்டும்.
அவ்வளவு முக்கியமானவர்கள் ஆசிரியர்கள்.
இந்த யுகத்தை, கலி யுகம், அறிவு யுகம் என்பர்; கலி யுகத்தில், முற்பகல் ஒரு பிழை செய்தால், அன்றே பிற்பகலில், அதற்கான தண்டனை தானே விளையும் என்பர்.
உலகின் குற்றங்கள் எல்லாம் நடைபெற அறிவை தவறான முறையில் பயன்படுத்துவதே காரணமாகிறது. படித்தவர்கள் செய்யும் குற்றத்திற்கு, ஆசிரியர்களே காரணம். ஒரு மாணவனை, சரியாக வழிகாட்டி வளர்க்காத ஆசிரியரே, அந்த மாணவன் தவறு செய்வதற்கு முழு முதற்காரணம்.
ராணுவ வீரர், காவல்துறை அதிகாரி மட்டுமல்ல; ஆசிரியர் கூட, இந்த சமூகத்திற்காக, தன்னை தியாகம் செய்ய வேண்டியவர் என்பதை உணர வேண்டும். நிறைய பணம் வரும், கஷ்டமில்லாத பணி, நிறைய விடுமுறைகள் வரும், யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது என, கணக்கு போட்டு சேரும் பணியல்ல ஆசிரிய பணி.
'ஆ...' என ஆச்சரியப்பட்டு, 'ஆசிரியர்...' என போற்ற வேண்டுமே தவிர, ஆ...'சிரியர்' என மனம் வெறுத்து துாற்ற பட கூடாது. எந்தெந்த குற்றத்திற்கெல்லாம் துாக்கு தண்டனை கொடுக்கலாம் என்று கொந்தளிக்கும் போது கண்டிப்பாக தவறு செய்யும் ஆசிரியரும், அந்த பட்டியலில் இடம் பெற வேண்டும்.
அறிவை போதிக்காத ஆசிரியர், காலாசாரத்தை போதிக்காத ஆசிரியர், பெரியோரின் மேன்மையை போதிக்காத ஆசிரியர், பண்பாட்டை போதிக்காத ஆசிரியர் மற்றும் தன் மாணவர்களிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்.
ஆசிரியர் என்ற பெருந்தன்மை படி, தன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டாத ஆசிரியரும் மிகப் பெரிய குற்றவாளி அல்லவா...
நம் நாட்டின் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் அவரவர் தம் கடமையை செய்யாததே.
ஒரு ஆசிரியர் தவறு செய்யும்போது, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை ஆசிரியரோடு செலவிடும் மாணவன் பார்க்கும் போது, ஆசிரியரே இப்படி என்றால், மற்ற மனிதர்களும் அப்படித்தான் என்ற எண்ணங்கள் ஆழ பதிந்து விடும்.
அப்புறம் என்ன...
மாணவன் வாழ்வும், அவனால் அவன் நாடும் சர்வ நாசம் தான்; ஒரே ஒரு ஆசிரியர் கூட தவறு செய்ய கூடாது.
தவறு இழைப்பது மனிதனின் குணம் என்பர். ஆசிரியர் மனிதரல்ல, தாய், தந்தை, தெய்வம் வரிசையில் சேர்த்து கொள்ளப்பட்ட மாமனிதர்; புனிதர். அரசு பணியிலேயே அற்புதமான பணியும், ஆசிரியர் பணியே!
உயிர் காக்கும் மருத்துவர், நாட்டை காக்கும் ராணுவத்தினர், காவலர், விஞ்ஞானிகள், மிகச் சிறந்த குடிமகன்கள் என, எல்லாரையும் உருவாக்குபவர் ஆசிரியரே!
இதை உணர்ந்து ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே நம் எல்லாரது விருப்பமும் கூட!
செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்!
- பாலாஜி.
