
தஞ்சாவூர், கல்யாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில், 1953ல், 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, மாணவியர், பாவாடை, தாவணி தான் அணிய வேண்டும்.
ஒரு நாள், பள்ளிக்கு புறப்பட்ட போது, தாவணி கிழிந்திருந்ததை கண்டேன். அழுகை வந்தது. தாயாரின் புடவையை இரண்டாக்கி, ஒன்றை அணிய தந்தார், என் தந்தை.
கோபத்தில், 'இதை அணிந்து சென்றால் கேலி செய்வர்... அனைவரும் அழகிய பூ போட்ட வண்ண தாவணி அணிந்து வருகின்றனர்; என்னால் அவமானப்பட முடியாது; இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன்...' என்று அழுதேன்.
கண்ணீரைத் துடைத்தபடி, 'ஆடை என்பது, மானத்தை காக்க தானே தவிர, பிறர் என்ன சொல்வர் என்பதை கேட்பதற்காக அல்ல; வாழ்க்கை எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும்; சொந்த காலில் நிற்க பழக வேண்டும்...' என அறிவுரைத்து தேற்றினார்.
அது மனதில் ஆழமாக பதிந்தது.
இப்போது என் வயது, 80; ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த சம்பவத்தை நினைத்த உடன் மனம் நெகிழ்ந்து விடுகிறது.
- ஆர்.வசந்தா, சென்னை.

