
வயலில் கரும்பை வெட்டி, மாட்டு வண்டியில் ஏற்றினார் விவசாயி. வெல்லம் காய்ச்சும் ஆலைக்கு எடுத்து வந்து இறங்கி, சிறிது ஓய்வெடுத்தார்.
அப்போது மாட்டு வண்டியின் சக்கரம் கேலியாக சிரித்தபடி, 'வண்டி பாகங்களிலே நாம் இருவரும் தான் பெரிய உருவம்; சரியாக உருளவில்லை என்றால், கரும்பு இங்கு வந்திருக்க முடியுமா... அச்சாணிகளை பார், ஒருவேலையும் செய்யாமல் சோம்பேறியாய் பொழுதை போக்குகின்றன...' என்று எதிர் சக்கரத்திடம் கூறியது.
கேலியை கண்டுகொள்ளாமல் அமைதி காத்தன அச்சாணிகள்.
வண்டி அருகே விளையாடிய குறும்புக்கார சிறுவன், அச்சாணிகளை கழற்றி எடுத்து போனான். இதை அறியாத விவசாயி, மாடுகளை பூட்டி, வண்டியை ஓட்டத் துவங்கினார்.
'உதவாக்கரை அச்சாணிகள் ஒழிந்தன' என, மகிழ்ந்து சுழன்றன சக்கரங்கள். சற்று நேரத்தில் சீராக ஓட முடியாமல் தடுமாறத்துவங்கின.
அவற்றுக்கு பயம் தொற்றியது. 'கழன்று விழுந்தால் உடைந்து விடுவோம்' என எண்ணி பதறி துடித்தன.
தடுமாறுவதை உணர்ந்த விவசாயி வண்டியை நிறுத்தினார். சக்கரங்களை சோதித்தார். அச்சாணியின்றி ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டார். புதிய அச்சாணிகள் வாங்கி, முறைப்படி பொருத்திய பின் ஓட்டினார். திணறலின்றி பாதுகாப்பாக ஓடத்துவங்கியது வண்டி.
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டன சக்கரங்கள். அச்சாணிகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டன.
அன்பு பூக்களே... உருவத்தை பார்த்து யாரையும், கேலி, கிண்டல் செய்யக் கூடாது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் உதவுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எஸ்.டேனியல் ஜூலியட்

