கி.பி.,3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பகுதி (24)
கி.பி.,3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பகுதி (24)
PUBLISHED ON : ஜன 21, 2011

இதுவரை: விஞ்ஞானி சகாணி தான் செயற்கைத் தீவின் ஒற்றன் என்று சொல்லிவிட்டு இறந்ததும் இந்திய நாடே அதிர்ந்தது.
இனி-
அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் நூலகத்தில் காவல் இயந்திரங்களால் அடித்து இறந்தது சகாணி என்றதும், இந்திய அரசு விழித்துக் கொண்டது. தன் உடல் நலமில்லை என்று காரணம் காட்டி வெளிநாடு செல்வதாக கூறி சென்ற சகாணி உண்மையில் இருந்தது செயற்கைத்தீவில் தான் என்றும், அவன் அத்தீவின் ஒரு உளவாளி என்றும் அறிந்ததும் இந்திய அரசும், மற்ற நாட்டு விஞ்ஞானிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதேசமயம் பாரிசின் இந்திய தூதர் பிரத்யேக பயணமாக இந்தியா வந்து பிரதமரை சந்தித்தார். தன்னிடம் துப்பறியும் சிங்கம் சீத்தராமா தாசின் மகன் ரோஷன் சொன்ன விவரங்களையும் பின் தானே அந்த விவரங்கள் உண்மையா என்று காண தாசின் உளவுக் கூடத்துக்கு சென்றதாகவும், அங்கே நம் நாட்டின் மூத்த விஞ்ஞானி பவிஷ்கோஷ் உயிருடன் இருப்பது கண்டு மிக மகிழ்ந்ததாகவும் கூறினார்.
தாசின் ஆலோசனையுடன் மிகத் துணிச்சலாக தங்கள் உயிர்களை பணயம் வைத்து தாசின் மகன் ரோஷனும், அவன் அத்தை மகன் பிரசன்னாவும் செயற்கை தீவு சென்று நம் மூத்த விஞ்ஞானியையும் வீரச்சிறுவன் கைலாசையும் உயிருடன் மீட்ட விபரத்தையும் விரிவாக பிரதமரிடம் எடுத்துரைத்தார். இதைக்கேட்ட பிரதமர் உணர்ச்சி பிழம்பானார்.
பவிஷ்கோஷின் வாக்குமூலப்படி இந்திய அறிவியல் கழகத்தின் துணை விஞ்ஞானிதான் அவரை கடத்தி செயற்கை தீவுக்கு முழு உதவியும் செய்ததாகவும், தேவையில்லாமல் சந்தேகப்பட்டு ஒரு உன்னத விஞ்ஞானி பிரகடீஸ்வரை வீட்டுக்காவலில் வைத்திருப்பது மனதுக்கு வருத்தம் அளிப்பதாகவும் கூறியதை பிரதமரிடம் விளக்கினார் தூதரக அதிகாரி.
பெரும் தவறு நிகழ்ந்து விட்டது. நாட்டுக்காக அயராது உழைத்து அனுதினமும் அறிவியல் துறையில் புதுமைகள் செய்து இன்று உலகில் அறிவியல் துறையில் தற்சார்பு அடைந்த நாடாக நம் நாட்டை உருவாக்கிய தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வரை வீட்டுக்காவலில் வைத்தது பெரும் குற்றமே என்று ஒப்புக் கொண்டு, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி உடனடியாக பிரகடீஸ்வரின் விடுதலைக்கான உத்தரவை தயாரித்து, அதில் கையொப்பமும் இட்டார் பிரதமர். பின் இருவரும் பிரகடீஸ்வரை நேரில் சந்தித்தனர். தூதரக அதிகாரி கூறியவைகளை பிரகடீஸ்வருக்கு எடுத்துரைத்தார். பிரகடீஸ்வர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். விஞ்ஞான உலகின் சிற்பி பவிஷ்கோஷ் வீரச்சிறுவர்களால் மீட்கப்பட்டதும், அவர் தமக்கை மகன் கைலாஷும் உயிருடன் மீட்கப்பட்டு இப்போது தாசின் உளவுக்கூடத்தில் இருப்பது கேட்டும் ஆனந்த கண்ணீர் உகுத்தார். பிரதமர் சகாணி இறந்த விவரத்தையும் அவன் சாகும் போது கொடுத்த வாக்கு மூலத்தையும் கூறி ஆராயாமல் அவசர கோலத்தில் உண்மையை உணராமல் பிரகடீஸ்வரை வீட்டுக்காவலில் வைத்தமைக்கு தன் மன வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டார் பிரதமர். ''அப்படி எல்லாம் எதுவும் தேவையில்லை...முடிவு நல்லபடியாக அமைந்துவிட்டதில் நாம் மகிழ்ந்து இனி அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த செயற்கை தீவை அழிக்கும் முயற்சியில் இறங்குவோம்,'' என்று பிரகடீஸ்வர் கூறவும் தூதரக அதிகாரி குறுக்கிட்டு, இப்போது அதற்கான பணிகள் யாவும் மூத்த விஞ்ஞானி பவிஷ்கோஷ் தலைமையில் தாசும், ஆசானும் முடித்து விட்டனர். அந்த செயற்கை தீவை அழிக்க இருக்கும் ஏவுகணைக்கு, 'பவிஷ்கோஷ் இந்தியா' என்று பெயரிட்டுள்ளதாகவும், அது நாளை நள்ளிரவு அந்த தீவை தாக்கும்படி தாசின் ஏவுகணை தளத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரக அதிகாரி கூறினார்.
''ஆகா அப்படி என்றால் நானும் அந்த அற்புத நிகழ்வில் பங்கு பெற வேண்டுமே,'' என்று பிரகடீஸ்வர் கூற, உடனே பிரதமர் தலை அசைத்து ஆமோதித்து, ''உங்களுடன் நம் நாட்டு அறிவியல் துறைக்கான அமைச்சரும் வருவார். இத நாம் பவிஷ்கோஷுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். ஆனால், உங்கள் விடுதலையும் நீங்கள் பாரிஸ் செல்வதும் வெளி உலகுக்கு பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்பட மாட்டாது,'' என்றும் பிரதமர் கூறினார்.
பிரகடீஸ்வர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பின் பிரதமரின் உத்தரவின் பேரில் தூதரக அதிகாரி மற்றும் இந்திய அறிவியல் துறைக்கான அமைச்சரோடு பிரகடீஸ்வர் யாரும் அறியாதபடி ஒரு தனியார் ராக்கெட்டில் புறப்பட்டு சென்றார்.
ராக்கெட் தளத்தில் இருந்து தாசின் உளவுக்கூடத்துக்கு பாரிஸ் நாட்டு ஹெலிகாப்டரில் சென்று இறங்கினர். தாசும் விஞ்ஞானி பவிஷ்கோஷ் ஆசான் மற்றும் சிறுவர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். பவிஷ்கோஷ் பிரகடீஸ்வரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார். சற்று நேரம் உணர்ச்சி வசத்தால் ஒருவரும் பேசாமல் அமைதி காத்தனர். அப்போது மாமா என்று பாசம் மேலிட பிரகடீஸ்வரை கட்டி அணைத்துக் கொண்டான் சிறுவன் கைலாஷ். அவரும் கண்ணீர் மல்க அவனை அணைத்து முத்தம் பதித்தார்.
ரோஷன் மற்றும் பிரசன்னாவின் வீர தீர செயல்களையும் துப்பறியும் தாசின் துப்பறியும் ஆற்றலையும் ஆசானின் உதவியையும் மனதார பாராட்டினார் பிரகடீஸ்வர். பிறகு அனைவரும் நாளை இரவு ஏவத் தயாராக வைக்கப்பட்டிருந்த 'பவிஷ்கோஷ் இந்தியா!' ஏவுகணையை பார்த்தார் பிரகடீஸ்வர். அன்று அனைவரும் நாளைய இரவை எதிர்பார்த்து அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஒத்திகை பார்த்தபடி இருந்தனர்.
அங்கே செயற்கை தீவின் தலைவன் பெரும் கோபத்துடன் அங்கும் இங்கும் புலம்பியபடி நடந்து கொண்டிருந்தான்.
''வெட்கம் பெரும் வெட்கம். அந்த பிரகடீஸ்வரின் திறமையினால் திருத்தி உருவாக்கப்பட்ட உலோக ஆடைகளின் மர்மத்தை அறியாத முட்டாள் தனத்தால் இன்று சகாணி மடிந்து விட்டான். சாகும்போது, தான் செயற்கை தீவின் உளவாளி என்றும் கூறி செத்திருக்கிறான் மடையன். அதனால், பயன் அடையப் போவது அந்த பிரகடீஸ்வர்தான்.
''இனி நமக்கு அவனாலும் இடர்கள் வர இருக்கின்றன. என்ன செய்யப் போகிறீர்கள் அம்ருடன்? எனக்கு உடனே பதில் சொல்லுங்கள்!'' என்று கோபமாக பேசவும், 'டொக் டொக் டொக்' என்று பல்லியின் ஒலி கேட்டு உடனே கணினியை பார்த்தார் அம்ருடன். தலைவன் அதிர்ச்சியுடன் நோக்கினான்.
''அந்த எழவெடுத்த பல்லி அப்படி என்னதான்யா சொல்லுது. அப்பப்ப 'டொக்கு டொக்கு'ன்னு ஒலி எழுப்புது. அந்த தாஸ் என்னமோ வேலை செஞ்சுட்டுதான்யா இருக்கான். அது இப்ப என்னய்யா சொல்லுது!'' தலைவன் ஆவேசத்துடன் அம்ருடனை பார்த்தான்.
'மொட்டை தலையா மொட்டை தலையா
மூட்டை முடிச்சை கட்டிக்கோ
முடிஞ்ச மட்டும் சுருட்டிக்கோ
திரும்பிப் பார்க்காம ஓடிக்கோ
துரத்தி வருது ராக்கெட்டு
தலைக்கு வருது ஆபத்து!
''பாஸ்! இது என்ன இழவோ தெரியவில்லை. ஆனால், முன்பு போல் அதே தமிழில் தான் சங்கேத மொழி இருக்கிறது. நான் வேண்டுமானால் இதன் விளக்கத்தை கேட்க முயற்சி செய்யட்டுமா என்றதும், தலைவன் வேகமாக தலையாட்டி அதெல்லாம் ஒண்ணும் வேண்டான்யா. இதுக்காக ஒரு சகாணியை நேற்று பலி கொடுத்து விட்டோம். மீண்டும் இன்னொருவரையும் பலி கொடுக்க நான் தயாரில்லை. ஒன்று மட்டும் புரிகிறது. நாம் என்னவெல்லாமோ செய்து எல்லாரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த தாஸ் ஒரு சின்ன பல்லிய வெச்சு நம்மளை எப்படி பயமுறுத்தறான். அதோட இல்லாம ஒரு விஞ்ஞானியையே அல்லவா காவு வாங்கிவிட்டான். உண்மையிலேயே அவன் சிங்கம்தான்யா.
தலைவன் மொட்டைத் தலையை தடவியபடி ஆவேசத்துடன் கூறினான். பல்லியின் உளவுக்கருவி மூலம் இதை மின் திரையில் பார்த்துக் கொண்டிருந்த பவிஷ்கோஷ் மற்றும் ஏனையோரும் வாய்விட்டு சிரித்தனர். பிரகடீஸ்வர் தாசின் திறமையை பாராட்டி அவரை தட்டிக் கொடுத்தார். தலைவனின் பேச்சால் கோபமும் அவமானமும் அடைந்த அம்ருடன், ''பாஸ் அந்த தாஸ் ஒரு சுண்டெலி என்று உங்களுக்கு நாளை காட்டுகிறேன். ஆம். அன்று நாம் மயங்கி இருந்தபோது செயற்கை தீவுக்கு வந்து, கிழவன் பவிஷ்கோஷையும், பொல்லாத சிறுவன் கைலாசையும் கடத்தியது யார் என்று இப்போது பல முயற்சிகளுக்கு பிறகு தெரிந்து கொண்டு விட்டேன். தலைவா... நீங்கள் அதிர்ச்சியுறுவீர்கள்.
''அன்று நம் தீவுக்கு வந்தது தாஸ் அல்ல. மாறாக இரு சிறுவர்கள். அவர்களின் முழு நடவடிக்கையும் இப்போது நம் தீவின் வான் மண்டல தலைவன் நீலமேகன் உளவு கேமிரா மூலம் அறிந்து கொண்டேன்,'' என்று கூறி மின் திரையை இயக்கினான்.
(— தொடரும்) ***
