PUBLISHED ON : ஜூலை 06, 2012

இதுவரை: அரசபதவிக்கு போட்டியாக இருந்த அனைவரையும் வென்று பதவியில் அமர்ந்தான் அலெக்ஸாண்டர். இனி-
கிரேக்க தத்துவ மேதைகளில் தலைச்சிறந்தவர் அரிஸ்டாடில். மாபெரும் அரசியல் மற்றும் சமூக சிந்தனையாளர். மாசிடோனியாவின் கிழக்கே இருந்த திரேஸ் நாட்டின் ஸ்டாகெய்ரா என்ற ஊரில், கி.மு.384ல் பிறந்தவர். பிற்பாடு ஏதென்ஸ் நகரில் செட்டில் ஆகிவிட்டார்.
மாபெரும் மேதை; கிரேக்க தத்துவ மேதைகளின் முன்னோடியான பிளாட்டோவின் சீடர். பிளாட்டோ, 'அகடமி' என்ற கல்விக் கழகத்தை நடத்தி வந்தார். தனது சிறந்த சீடரான அரிஸ்டாடில்தான் தனக்குப் பின் அகடமியை தொடர்ந்து பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று பிளாட்டோ விரும்பினார்.
போட்டி இல்லாத உலகமா இது? பிளாட்டோவின் மறைவுக்குப் பின் அகடமியின் தலைவர் யார் என்று நடந்த அடிதடி சண்டையில் அரிஸ்டாடில் ஈடுபட விரும்பவில்லை. பிளாட்டோ இருந்தவரை தத்துவப் பாடங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
ஆனால், பிளாட்டோ மறைவுக்குப் பின் கணிதம், வானசாஸ்திரம் போன்றவற்றுக்குத் தான் மவுசு என்று கூறி அகடமியை நடத்த நிதியுதவி அளித்தவர்கள் அரிஸ்டாடிலை தத்துவ பாடங்களுக்குப் பதிலாக கணிதம் போதிக்க வற்புறுத்தினர். பிளாட்டோவின் சித்தாந்தங்களைக் கற்றுத்தரவேண்டும் என்பதில் யாரும் அக்கறை காட்டவில்லை. இதுவும் அரிஸ்டாடிலுக்கு பிடிக்கவில்லை. போதாக்குறைக்கு அகடமியின் நிர்வாகத்தைக் கைப்பற்ற ஏகப்பட்ட உள்வேலைகள்; சதி... ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன அரிஸ்டாடில் ஆளைவிட்டால்போதும் என்று ஒதுங்கிவிட்டார்.
ஆசியா மைனர் பகுதியில் அட்டார்னேயர் என்ற நாட்டில் தனக்கென சொந்தமாக ஒரு கல்விக் கழகத்தைத் துவக்கி நடத்தினார் அரிஸ்டாடில். கழகத்தை நடத்துவதற்கு மாமனார் கொடுத்து வந்த நிதியுதவி கைகொடுத்தது. இந்நிலையில், அவரது மாமனார் கொலையானதும், கல்வி நிறுவனத்தை மூடிவிட்டு லெஸ்போஸ் என்ற தீவில் தனியே வாழ்ந்து கொண்டிருந்தார் அரிஸ்டாடில்.
அப்போதுதான் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாடிலிடம் கல்வி பயிலுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அலெக்ஸாண்டருக்கு பதின்மூன்று வயது. அவனுக்கு உயர் கல்வியைக் கற்றுத்தருமாறு அரிஸ்டாடிலிடம் கேட்டுக் கொண்டார் மன்னர் பிலிப். மன்னன் வாக்குக்கு மறுப்பேது. அலெக்ஸாண்டரை மாணவராக ஏற்றுக் கொண்டார் அரிஸ்டாடில். அதுவும் ஒரு நிபந்தனையோடு...
அலெக்ஸாண்டருக்கு ஆரம்பக் கல்வியைக் கற்றுத்தந்த லியோனிடஸ் போல, மன்னரின் அரண்மனைக்கு வந்து கற்றுத் தரமுடியாது. ராஜா வீட்டுப் பிள்ளையானாலும், பள்ளிக்கு மாணவன்தானே... எனவே, மாசிடோனியாவில் தனக்கென ஒரு கல்விக்கழகத்தை ஏற்படுத்த வேண்டும். அதில் மற்ற மாணவர்களோடு அலெக்ஸாண்டரும் படிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
நிபந்தனையை உடனடியாக நிறைவேற்றினார் மன்னர் பிலிப். மீஸா என்ற நகரில் புதிய கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. அலெக்ஸாண்டருக்கு அங்கு பாடங்கள் தொடர்ந்தன. இலக்கியம், நுண்கலைகள், அறிவியல், மருத்துவம், போர்முறை, உடற்பயிற்சி என்று சகலமும் கற்பித்தார் அரிஸ்டாடில். நீதி, நிர்வாகம், ராஜதந்திரம் போன்ற விஷயங்கள் அலெக்ஸாண்டருக்கு மட்டும் கூடுதலாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன.
திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்ற அரசு நிர்வாக உத்திகளை அரிஸ்டாடிலிட மிருந்து அலெக்ஸாண்டர் திறமையாகக் கற்றுத் தேர்ந்தான். பிற்காலத்தில் ஆசியாவுக்கு படையெடுத்துச் சென்றபோது அங்கு, தான் கண்ட விசித்திர வகை தாவரங்கள், விலங்குகளின் மாதிரிகளை ஏதென்ஸில் இருந்த அரிஸ்டாடிலுக்கு அனுப்பி, அவற்றைப் பற்றிய தகவல்களைக் கற்றுக் கொண்டான் அலெக்ஸாண்டர். அதுதான் அவனது கற்றுக் கொள்ளும் ஆர்வம்.
கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியட்ஸ் என்ற காவியத்துக்குத் தாம் எழுதியிருந்த விளக்க உரையை அலெக்ஸாண்டருக்கு போதித்தார் அரிஸ்டாடில். கிரேக்கர்களுக்கும், ட்ராய் நகரத்தவர் களுக்கும் இடையே நடந்த போரை கதையாகச் சொல்லியிருந்தார் ஹோமர். ட்ராய் நகரத்து அரசன் ப்ரையாம். ப்ரையாமின் மகன் பாரிஸ்.
இந்த பாரிஸ் ஒரு அழகன். இவன் கிரேக்க ராணி ஹெலனை மீட்பதற்காக ட்ராய் நகரத்தில் யுத்தம் நடந்தது. அந்தப் போரில் கிரேக்கர்களுக்கு வெற்றி தேடித் தந்தவன் அக்கிலஸ். தானும் அக்கிலஸைப் போல் சிறந்த வீரனாக விளங்க வேண்டும் என்று விரும்பினார் அலெக்ஸாண்டர். தனக்குச் சிறந்த அறிவை வழங்கிய அரிஸ்டாடிலிடம் நன்றி மறக்காதவனாக இருந்தான் அலெக்ஸாண்டர். பிற்காலத்தில் ஏதென்ஸ் நகரில் அரிஸ்டாடில் நினைவாக மார்பிள் கல் சிலையை நிறுவி தன் குருபக்தியை வெளிப்படுத்தினான்.
அந்த சிலை காலப்போக்கில் அழிந்துவிட்டாலும், அப்படியொன்று இருந்ததாக இன்றும் ஓர் அறிவிப்புப் பலகை சுற்றுலா பயணிகளுக்காக அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'நிக்கோமோகஸ்ஸின் மகனான அரிஸ்டாடிலின் திருவுருவை இங்கே அலெக்ஸாண்டர் நிறுவினார்' என்று அந்த அறிவிப்புப் பலகையில் பொறிக்கப் பட்டிருந்தது.
டயோஜினஸ் கிரேக்கத்தின் தலைச்சிறந்த ஞானி. மிக எளிமையானவர்; தண்ணீர் குடிக்க ஒரு கோப்பை கூட வைத்துக் கொள்ளாத அளவுக்கு, அவர் வீட்டில் வசிக்கவில்லை. பெரிய கல்மேடை ஒன்றின்மீதுதான் படுத்து உறங்குவார்.
ஒருசமயம் காலை வேளையில் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தார் டயோஜினஸ். அலெக்ஸாண்டர் அவரைக் காணச் சென்றான். அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று விரும்பியிருந்தான். தன் படை பரிவாரங்களை தொலைவில் நிறுத்திவிட்டு, அவரிடம் சென்றான்... ''பெருந்தகையே... அலெக்ஸாண்டர் வந்திருக்கிறேன். தங்களுக்கு உதவ விரும்புகிறேன். தயவு செய்து கேளுங்கள்,'' என்று பணிவுடன் கூறினான்.
''அப்பனே, நான் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறேன். நீ சூரியனை மறைக்காமல் தள்ளி நின்றால் போதும்,'' என்றார் அந்த ஞானி. ஒரு நாடாளும் மன்னவரை, மாவீரனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவர் பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது. அன்று முதல் தன்னுடைய குருவாகவே அவரை ஏற்றான் அலெக்ஸாண்டர். ஆசியப் படையெடுப்பைத் தொடங்கிய போது, டயோஜினஸை பார்த்து ஆசி பெறச் சென்றான் அலெக்ஸாண்டர்.
''ஐயா... நான் நாடுகளை வெற்றி கொள்ளப் புறப்பட்டிருக்கிறேன். உலகத்தையே எனது ஆதிக்கத்துக்குக் கொண்டு வருகிறேன். பிறகு நானும் உங்களைப் போல் ஞானி ஆவதற்கு முயற்சிப்பேன்,''என்றான்.
டயோஜினஸ் சிரித்தார்...
'வீரனே, நான் அப்படி எதுவும் செய்யாமலே ஞானம் பெற்றேன். உன்னாலும் அது முடியும். ஆனால், நீயோ நாடுகளை வென்றபின் ஞானம் பெறுவேன் என்கிறாய்... நாடு பிடிக்கச் செல்கிற நீ, மீண்டும் இங்கே வருவதுமில்லை, ஞானம் பெறப்போவதும் இல்லை' என்றார்.
அப்படித்தான் ஆனது.
மடிசிடோனியாவுக்குத் தெற்கே தெஸ்ஸாலி என்ற நாடு இருந்தது. ஏராளமான புல்வெளிகளைக் கொண்ட நாடு. அங்குள்ள காட்டுக் குதிரைகள் பிரசித்தி பெற்றவை. 'ப்யூஸ் பாலஸ்' இனத்தைச் சேர்ந்த உயர்ரக குதிரை ஒன்று முழு அமாவாசை நிறத்தில், மினுமினுப்பான தோல் அழகும், குணத்தில் கட்டுக்கடங்காத முரட்டுத்தனமும், நெற்றியில் பளிச்சென்று பொட்டுவைத்தது போல வெள்ளைச் சுழியும், முகம் பார்ப்பதற்கு காளை மாட்டின் முகத்தைப் போலவும் இருந்தது. கிரேக்க மொழியில், ப்யூஸ்பாலஸ் என்றால் 'மாட்டுத்தலை' என்று அர்த்தம்.
ப்யூஸ்பாலஸை யாரும் நெருங்க முடியவில்லை. தன்மீது உட்கார்ந்து சவாரி செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை. மீறி உட்கார முயன்றால் முதுகைத் திமிறி ஒரே எறி. தூரப் போய் விழுந்துவிடுவர். அந்த அடங்காக்குதிரையை இனி வாங்குவதற்கு யாரும் இல்லை. தள்ளி விட்டால்போதும் என்று மிகவும் குறைந்த விலையில் மன்னர் பிலிப்பிடம் ப்யூஸ்பாலஸை விற்றுவிட்டுச் சென்றான் ஒரு குதிரை வியாபாரி.
பிலிப் மன்னருக்கு ப்யூஸ்பாலஸை விலைக்கு வாங்குகிற எண்ணம் துளியுமில்லை. அந்தக் குதிரை வியாபாரி, 'இந்தக் குதிரையை அடக்கக் கூடியவர் யாராவது உண்டா?' என்று குதிரைச் சந்தை மைதானத்தின் நடுவே நின்று சவால் விட்டான். குதிரை ப்யூஸ்பாலஸின் கம்பீரத் தோற்றமே பலரையும் அசர வைத்தது. அருகில் சென்று பார்த்த சிலர் அதன் சீற்றத்தைக் கண்டு தடுமாறி பின்வாங்கினர். சிறுவன் அலெக்ஸாண்டரோ குதிரை நின்றிருந்த நிலையைக் கவனித்தான்.
- தொடரும்.
