தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/லட்சிய வீரன்! (3)

லட்சிய வீரன்! (3)

லட்சிய வீரன்! (3)


PUBLISHED ON : நவ 21, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தொழில்துறையில் புதுமைகள் படைக்க விரும்பினான் ஹென்றி. குடும்பத்தினரிடம் சொல்லாமல், அமெரிக்கா, டெட்ராய்டு நகருக்கு வந்தான். தேடி வந்த தந்தையிடம் லட்சிய பாதையை விளக்கினான். இனி -

தந்தை கூற்று கேட்டு சிரித்தபடி, 'புதிய தொழில் உருவாக்க முயன்று வருகிறேன். அதற்கான பயிற்சி பெறத்தான் இங்கு வந்தேன்...' என்றான் ஹென்றி.

அவன் பேச்சு கேட்டு, 'இதெல்லாம் பணம் சம்பாதிக்க உதவாது...' என்றபடி சட்டைப் பையில் வைத்திருந்த நாணயங்களை குலுக்கினார் போர்ட். மகனுக்கு நாலு அறை கொடுத்து, காதைப் பிடித்து இழுத்து போகலாம் என்ற எண்ணம் வந்தது.

வன்முறை பிரயோகித்தால் விபரீதமாகிவிடும். அழைத்து சென்றாலும் வீட்டில் தங்கமாட்டான். மீண்டும் ஓடி விட வாய்பிருக்கிறது என கணித்து, 'சரி... ஆசை தீரும் வரை இங்கே இரு... பித்து தெளிந்தபின் பண்ணைக்கு வந்து சேர்...' என்று புறப்பட்டார்.

தினமும் தொழிற்கூடத்துக்கு தவறாமல் செல்வான் ஹென்றி; வேலைமுறை, இயந்திர இயக்கம் என, கூர்ந்து கவனித்தான். தொழில் நிர்வாகத்தையும் கற்றான்.

மனம் சுதந்திர பறவையாக இருந்தது.

காலை 6:00 மணிக்கு எழுந்து, மாலை 6:00 வரை தொழிற்கூடத்தில் வேலை செய்வான்.

இரவு 7:00 மணிக்கு பூத கண்ணாடியை கண்ணில் மாட்டியபடி, கடிகாரம் பழுது நீக்குவான். இரவு 11:00 மணிக்கு வீடு திரும்பி, தொழில் சார்ந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்து துாங்கப்போவான்.

சிரமங்கள், அவன் சிறகை முடக்கவில்லை; களைப்பை மறந்தான்.

சோர்வை மனதில் குடியேற விடவேயில்லை.

ஹென்றியின் வேலையில் திருப்தி கண்ட நிர்வாகம், சம்பளத்தை உயர்த்தியது. வேண்டியதைக் கற்றுக் கொண்டதும் இருப்பு கொள்ளவில்லை. ஒன்பதே மாதத்தில் வேலையை துறந்தான் ஹென்றி.

பின், மற்றொரு இயந்திரக்கூடத்தில் சேர்ந்தான்.

இளைஞர் குழு ஒன்றுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தமாக கலந்தான்.

சேர்ந்து விளையாடு குறும்புகள் செய்வர்; குத்துச்சண்டையும் போடுவர். தெருவில் உலாவியபடியே குதிரை வண்டிகளை வேடிக்கை பார்ப்பர். வாழ்வில் உயர்வதற்கான வழிமுறைகளையும் விவாதித்தனர். சுவாரசியமாக நகர்ந்தது வாழ்க்கை.

குழுவில் சிலர் குடி மையம், சூதாட்ட கிளப் என அலைந்தனர். அங்கு நேரம் செலவழிப்பது, வாழ்க்கையை வீணடிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பினான் ஹென்றி. எனவே தவிர்த்தான்.

சம்பளம் உயர்ந்ததால், கடின வேலைகளை தவிர்த்தான். புதிதாக சேர்ந்திருந்த வேலையையும் விட்டான்.

அன்று, ஒரு புதிய கைக்கடிகாரம் வாங்கினான். அறைக்கு திரும்பியதும், அதை அக்கு, ஆணி வேறாக பிரித்து மேஜையில் பரப்பினான். மீண்டும் இணைத்து, அணிந்து கொண்டான். நல்ல நிலையில் இயங்கியது கடிகாரம்.

ஒரு நாள் -

கடிகாரத்தை பிரித்து மேஜையில் பரப்பியிருந்தான். வீட்டுக்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவன், 'ஏன்டா... நல்ல கடிகாரத்தை நாசமாக்குகிறாய்...' என்றான்.

'பொருத்துவது கஷ்டமான வேலையல்ல...' என்று சிரித்தான் ஹென்றி. இணைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தான். ஆச்சரியத்தடன் பார்த்தனர் நண்பர்கள்.

அவர்களிடம், 'கடிகார தொழிற்சாலை ஒன்றை கூட்டு பங்கு முறையில் ஆரம்பித்தால் என்ன...' என்றான் ஹென்றி.

'திடீரென்று இந்த யோசனை எப்படி வந்தது...' என்றனர்.

'மூன்று டாலர் விலையில் கடிகாரம் வாங்கினேன். இதில் உள்ளது போல் பாகங்களை ஒரே அச்சில், பல்லாயிரக் கணக்கில் உருவாக்க முடியும். பணம், வேலைத்திறன் விரயத்தை தடுக்கலாம். அப்படி உருவாக்கும் கடிகாரத்தை அரை டாலருக்கு விற்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்...' என்றான் ஹென்றி.

இந்த கணக்கு நண்பர்களை கவர்ந்தது.

எல்லாரும் ஒப்புக்கொண்டனர்.

சந்தேகமடைந்த ஒருவன், 'கடிகாரத்தை அரை டாலருக்கு விற்பது பைத்தியக்காரரத்தனம். அதிக விலை வைக்கலாம்...' என்றான்.

இதைக் கேட்டதும், 'இது சரியான வியாபாரம் அல்ல; உற்பத்தியை சேவையாக செய்ய விரும்புகிறேன்... தரமான பொருட்களை சிக்கனமாக தயாரித்து, மலிவாக விற்பது தான் என் நோக்கம். அதில் கிடைக்கும் வருவாய் தான் மகிழ்ச்சி தரும்...' என்றான் ஹென்றி.

இந்த மாறுபட்ட சிந்தனையுடன் தொழில்கள் துவக்கியவர், ஹென்றி போர்டு. அமெரிக்காவை சேர்ந்தவர். பிரபலமான, 'போர்டு' வாகனத்தை உருவாக்கியவர்.

இன்று உலகம் முழுவதும் இந்த வாகனம் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை, மறைமலைநகர் அருகேயும், போர்டு கார் உற்பத்தியாகிறது.

குழந்தைகளே... ஹென்றி போல் முழு மூச்சுடன் அயராது உழைத்து உயருங்கள்.

பிரபல தொழிலதிபர் ஹென்றி. அமெரிக்கா, மிச்சிகன் மாநிலம், கிரீன்பில்டு கிராமத்தில், ஜூலை 26, 1863ல் பிறந்தார். கடுமையாக உழைத்து, 'அசெம்பிளி லைன்' என்ற வாகன உற்பத்தி முறையை உருவாக்கினார். இதை, 'ஒழுங்கு முறை பொருத்துகை' என்பர்.

உதிரி பாகங்களை வரிசைப்படி இணைத்து செய்யும், உற்பத்திமுறை இது. ஒரே நேரத்தில் பல்லாயிரம் வாகனங்களை தயாரிக்கலாம். இந்த முறையில் தான், உலகில் வாகன உற்பத்தி இன்று நடக்கிறது.

இவர் உருவாக்கிய, போர்டு நிறுவனம், கல்வி ஆராய்ச்சிக்கு, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு தோறும் நன்கொடையாக வழங்கி வருகிறது.

- முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us