PUBLISHED ON : செப் 26, 2020

கோபத்தால் வாய்ச்சண்டை போடும் போது, ஊருக்கே கேட்கிற மாதிரி உரக்க கத்துவோம். இதன் காரணத்தை விளக்கும் சுவாரசியமான கதை:
குளத்தில் குளித்து கரையேறிக் கொண்டிருந்தார் தந்தை. அவரது மகன்கள் சண்டையில் சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தனர்.
சிரித்தபடியே, 'சத்தம் போட வேண்டிய அவசியம் என்ன...' என்று கேட்டார்.
ஒருவன், 'கோபத்தில் அமைதியை இழந்து விட்டேன்; அதனால் சத்தமிடுகிறேன்!' என்றான்.
'மிக அருகில் இருப்பவரிடம், ஏன் சத்தமிடுகிறாய். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே...'
'ஆத்திரப்பட்டு விட்டேன்... அதனால் அறிவிழந்து சத்தம் போட்டேன்...' என்றான் மற்றொருவன்.
ஒருவர் சொன்ன காரணம் அடுத்தவருக்கு உடன்பாடாகயில்லை.
'கோபம் கொள்ளும் போது, மனங்கள் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகின்றன. எனவே, துாரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்கும் விதமாக சத்தமிடுகிறோம். விலகியிருக்கும் துாரத்துக்கு ஏற்ப ஆற்றலை உபயோகிக்க வேண்டியிருக்கும்... 'அன்புடன் பழகும்போது, அமைதியாக கருத்தை வெளிப்படுத்துகிறோம். அப்போது, மனங்கள் வெகு அருகாமையில் இருக்கும்... பேச சொல் தேவைப்படாது. கண்களிலே, எண்ணம் வெளிப்பட்டு விடும்...' அழகாக எடுத்து சொன்னார் தந்தை.
அறிவுரையை கேட்டு, கட்டிப்பிடித்து அன்பை பொழிந்தனர் மகன்கள்.
கே.முத்துாஸ்
