
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இந்து மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!
பள்ளி வளாகத்தில், காலை பிரார்த்தனை கூட்டம் நடக்கும். அதில் பங்கேற்க செல்லும் போது, வகுப்பறையில் வைத்திருக்கும் பொருட்கள் திருடு போய்க்கொண்டிருந்தன. இது, புரியாத புதிராக இருந்தது.
உடன் படித்த நண்பர்களில் ஒருவர் சற்று குறும்புக்காரர். மாற்றுத்திறனாளி என்பதால் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். அவர் மீது சந்தேகம் எழுந்த போதும் கேட்க தயக்கமாக இருந்தது.
இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாளும் கூட்டத்துக்கு செல்லும் முன், வகுப்பறையில் இருக்கும் அவரிடம், என் பொருட்களை கவனித்துக் கொள்ள வேண்டினேன். அவை பாதுகாப்பாக இருந்தன.
இதை அறிந்து, அனைவரும் அந்த நடைமுறையை பின்பற்றினர். நாளடைவில், தீய பழக்கத்தை விட்டு திருந்தினார் நண்பர். நல்ல மாற்றம் ஏற்பட்டது கண்டு மகிழ்ந்தோம்.
இப்போது எனக்கு, 54 வயதாகிறது; படித்த அதே பள்ளியிலே, தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறேன். அந்த மாற்றுத்திறனாளி நண்பரை எங்கு சந்தித்தாலும், அந்த சம்பவத்தை நினைவு கூறுவார். அன்று படிப்பினையாக கிடைத்த அனுபவம் இன்று பயிற்றுவிப்பதில் உதவுகிறது.
வகுப்பறையில் குறும்பு செய்வோர், மெல்ல கற்போர், முறைகேடு செய்யும் மாணவர்களை கண்டறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். அதை ஏற்றதும் முறையற்ற செயல்களை விடுத்து, சிறப்பாக செயல்படுகின்றனர். தவறு செய்வோரை திருத்தும் எளிய உத்தியாக அதை பயன்படுத்தி, பள்ளியை சிறப்பாக நிர்வகித்து வருகிறேன்.
- எஸ்.ராஜசேகரன், விருதுநகர்.
தொடர்புக்கு: 94429 84083

