PUBLISHED ON : நவ 05, 2022

வாழ்வில் வெற்றி பெற திட எண்ணமும், தொடர் முயற்சியும் அவசியம். எத்தனை இடையூறு வந்தாலும், எதிர்கொண்டு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இப்படி செயல்பட்டு முன்னேறிய உலகத் தலைவர்கள் பற்றி பார்ப்போம்...
ஆப்ரகாம் லிங்கன்!
அமெரிக்காவில் மாதா கோவிலில், பாதிரியார் ஒருவர், சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். சொர்க்கத்தை பற்றி வருணித்து கூறிக் கொண்டிருந்தவர், 'சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறவர் எழுந்து நில்லுங்கள்...' என்றார்.
ஒருவர் தவிர, அத்தனை பேரும் எழுந்து நின்றனர்.
அவரிடம், 'நீ சொர்க்கத்திற்கு செல்ல விரும்பவில்லையா...' என்றார்.
'இல்லை... நான் தேர்தலில் வெற்றிப் பெற்று, நாட்டின் குடியரசு தலைவராகி, மக்களுக்கு தொண்டு செய்யப் போகிறேன்...' என்றார்.
சொர்க்கத்தை விரும்பாத அந்த பிரபலம், அமெரிக்க குடியரசு தலைவராக உயர்ந்த, ஆப்ரகாம் லிங்கன் தான்!
ஹிட்லர்!
ஓவியத் தொழில் செய்து பிழைத்து வந்தார் ஒரு இளைஞர். இரவில் வெகுநேரம் வரை, அரசியல் நுால்களையும், ஐரோப்பா கண்டத்தின் படத்தையும், வைத்த கண் வாங்காமல் பார்த்து ஆராய்வார்.
இதை பார்த்த வீட்டு வேலைக்காரப் பெண், 'பகலில் சுற்றி அலைந்து வீடு வந்து சேருகிறாய்... இரவிலாவது உறங்கக் கூடாதா; ஐரோப்பாவின் எல்லையை மாற்றி அமைக்க போகிறாயா...' என கிண்டலாக கேட்டாள்.
பதில் எதுவும் கூறாமல், தொடர்ந்து ஐரோப்பா கண்ட படத்தை உற்று பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் அந்த இளைஞர்; அவர் பெயர் ஹிட்லர். ஐரோப்பா கண்டத்தையே மாற்றி அமைத்து விட்டார்.
முசோலினி!
கல்லை உடைக்க, பலவீனமான இடத்தில் உளியால் தகர்க்க வேண்டும். அதுபோல், ஆசிரியர் வேலையை உதறி, ஆளும் திறமையை வளர்த்து, அதிலே நிலைத்து வெற்றிக் கொடி நாட்டினார், முசோலினி. ஐரோப்பிய நாடான இத்தாலி மக்கள் அவரை பின் தொடர்ந்தனர்.
காந்திஜி!
ஒரு சமயம், 'இந்தியாவுக்கு விடுதலை பெற்று தருவதாக உறுதி கொண்டிருக்கிறீரே... விடுதலை பெறுவதற்கு முன், தாங்கள் இறந்து விட்டால் என்ன செய்வீர்...' என காந்திஜியிடம் கேட்டார் நிருபர்.
அதற்கு, 'இந்தியா விடுதலை பெறும் வரை நான் சாக மாட்டேன்...' என்றார் காந்திஜி. அதை நிறைவேற்றியும் காட்டினார்; நம்பிக்கை வெற்றியாக மலர்ந்தது.
லெனின்!
'இளைஞனே... புரட்சி செய்தால் பயன் என்ன... உனக்கு முன், பெரிய சுவர் இருப்பதை பார்க்கவில்லையா...' என கேட்டார் ஒரு காவலர்.
'சுவர் இருப்பது தெரிகிறது; அது முற்றிலும் பழுதடைந்திருக்கிறது; ஒருமுறை தட்டினால் கீழே விழுந்து விடும்...' என்றான் அந்த இளைஞன்.
அப்போது அவனுக்கு வயது, 17; புரட்சியால் புதுமை உலகை உருவாக்க முடியும் என, நம்பிய அந்த இளைஞன் பெயர் லெனின். ஆசியா - ஐரோப்பா கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்யாவில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தினார்.
நெப்போலியன்!
குறைந்த காலத்தில், நிறைய போர்களை நிகழ்த்தி, பல நாடுகளை வென்றவர் என, புகழ் பெற்றவர் நெப்போலியன். இதற்கு காரணம், அவரிடம் இருந்த தனித் தன்மை.
அவரிடம், 'போர்க்களத்தில் எப்படி வெற்றி பெறுகிறீர்...' என கேட்டனர்.
'வாளால் வென்று, வெற்றிக் கொடி நாட்டவில்லை. கண்களால் தான் வெல்கிறேன்...' என்று கூறினார்.
ஒருமுறை அணி வகுத்த வீரர்களை பார்வையிட்ட நெப்போலியன், அருகில் இருந்த தளபதியிடம், 'படையில் லட்சம் வீரர்கள் இருக்கின்றனர் அல்லவா...' என கேட்டார்.
நெப்போலியன் தவறாக கணிப்பதாக நினைத்த தளபதி, 'அறுபதாயிரம் வீரர்கள் தான் உள்ளனர்...' என்றார்.
பதிலை கேட்ட நெப்போலியன், 'அப்படியானால் நான் கூறியது சரி தான்; வீரர்களுடன் என்னையும் சேர்த்தால், லட்சம் பேர் தானே...' என்றார்.
தன்னை, 40 ஆயிரம் வீரர்களுக்கு சமமாக எண்ணிய நம்பிக்கை நட்சத்திரம், நெப்போலியன்.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
