PUBLISHED ON : ஜூன் 15, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பதினாறாம் நூற்றாண்டில் பாதம் பதித்த கிழங்கு!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்து போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அந்த கிழங்குக்கு அல்ல, நமக்குதான்.
ஏனெனில், அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம், இதன் மாவுச்சத்தை கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது.
கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையை சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையை போன்றிருக்கும்.
வரலாறு: இது ஒரு அமெரிக்க செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது.
மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை 'ஆக்ஸி' என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில், சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்து போகவே பயிரிட ஆரம்பித்தனர்.
அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்கு கொண்டு சென்றனர். அமெரிக்க புரட்சியின் போது, சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால், ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை.
இந்தியா, சீனா, கிழக்கிந்திய தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப் படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வடக்கு ஜப்பானில் ஸாட்ஸீமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கின்றனர்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
1.நீளமான இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்பு தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும், நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
2. வெளியில் சிவப்பு தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு.
உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால், அமெரிக்காவில் இதை தவறாக, சேனைக்கிழங்கு என்கின்றனர்.
உண்மையில், சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில், வைட்டமின் ஏ அதிகம். இதை தவிர, ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் பண்டிகையின் போது, இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீசனாகும்.
நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீசன்.
எப்படி இருக்கணும்?
கையில் எடுத்தால் கனமாக, கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல், சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுக தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்கு பரவி இருக்கும்.
வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும், கெட்டு போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும்.
வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விட வேண்டிய காய்கறி இது. ப்ரிட்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.
உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். வள்ளிக் கிழங்கின் தோலும் சாப்பிட கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டீன் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மி.கிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மி. கிராம், வைட்டமின் 29.51 மி.கிராம், வைட்டமின் ஏ-26081.9 ஐக்.
எப்படி சமைப்பது?
வள்ளிக்கிழங்கை பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு ஏ சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ண கிழங்கை துருவி சேர்த்தால் சாலட், சூப், சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். வள்ளிக் கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து, குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பு வரும்.
பாயசம்!
இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப் பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து போடவும்.
அன்பு கலாம் காலம்!
கேள்வி: 'இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?
பதில்: 'நான் சொல்வது 2020ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம் கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!
என்றும் அன்புடன், உங்கள் அங்குராசு.
