PUBLISHED ON : ஜூன் 15, 2012
ஒரு ஊரில் ரொம்ப ஏழையான ஒரு வாத்து மேய்க்கிறவன் இருந்தான். அவன் தினமும் கடவுளிடம், ''என்னிடம் கருணை காட்ட மாட்டாயா?'' என்று வேண்டுவான்.
ஒருநாள் கடவுள் அவன் முன் தோன்றி, ''அப்பனே! இந்த வாத்து நாளையிலிருந்து தினம் ஒரு பொன்முட்டையிடும்!'' என்று கூறி மறைந்தார்.
வாத்துக்காரனுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடினான். ஏனென்றால், அந்தக் குள்ளவாத்து அவனுக்குச் சொந்தமானது. கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து முந்தைய நாள்தான் வாங்கியிருந்தான்.
மறுநாள் காலை அவனுடைய குள்ளவாத்து தகதகன்னு ஜொலிக்கிற ஒரு பொன்முட்டையைப் போட்டது. அதை வெளியூரில் விற்று சவுகரியமாக வாழ்ந்து வந்தான். இப்படியே அவன் நிறையப் பணம் சேர்த்து ஆனந்தமாயிருந்தான்.
'மனம் ஒரு குரங்கு'ன்னு சும்மாவா சொன்னாங்க! 'இந்த வாத்து வயித்துலே நிறையப் பொன்முட்டை இருக்கும் போலிருக்கிறது. மொத்தமா போட்டுத் தொலைச்சா என்ன? பெரிய பங்களா, கார்னு வசதியா இருக்கலாமே' என்று முட்டாள் தனமா யோசிச்சான்.
மறுநாள் காலையிலே வாத்தைப் பிடிச்சு அதன் வயிற்றை அறுத்தான். பாவம் வாத்து! அதோட வயித்துலே அன்னிக்குப் போடவேண்டிய ஒரு முட்டைதான் இருந்தது.
பேராசை பெரிய நஷ்டமாப் போச்சு!
ஒரு மூட்டை அரிசியையும் ஒரே நாளிலா சாப்பிடறோம்! முட்டாளான வாத்துக்காரனை எல்லாரும் சுலபமா ஏமாத்திட, அவன் பணமெல்லாம் கரைஞ்சது. பழையபடி அவன் வாத்து மேய்க்கத் தொடங்கினான். பணம் கிடைத்தாலும் அதை வைத்து பாதுகாக்கத் தெரியணும் குட்டீஸ். இல்லன்னா இப்படித்தான் கிடைத்ததையும் விட்டுவிட்டு உட்கார்ந் திருக்கணும்.
***
