PUBLISHED ON : ஜூன் 22, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
ஆல் உடம்பு தோலால் ஆனது!
உடம்பில் அரிப்பு, தோலில் தடிப்பு தடிப்பாக சிவந்து போவது. அழுத்தி சொரிந்தால் புண்ணாவது, இப்படி தோல் பாதிப்புகள் பற்பல.
தலைமுதல் உள்ளங்கால்வரை தோலால் மூடிய உருவத்தைத்தான் முழு மனிதன் என்றே சொல்ல முடியும். கிட்னி, இதயம், குடல்கள், ரத்தம் போல் தோலும் நம் உடலின் மிக முக்கிய உறுப்புதான். இயற்கை உபாதைகள் மற்றும் செயற்கை தாக்குதல்களில் இருந்து நம் உடலை காப்பது தோல்தான். அந்த தோல் ஆரோக்கியமாக இருந்தால்தான், நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். தோல் ஆரோக்கியமில்லாமல் இருப்பதைத்தான் தோல் வியாதி என்கிறோம். பல பெரிய பெரிய நோய்களுக்கான அறிகுறியை வெளிக்காட்டுவதே இந்த தோல் நோய்தான். இயற்கையாகவே அமைந்துள்ள தோல் செல்கள், பல பிரச்னைகளில் இருந்து தோலை பாதுகாத்து வருகின்றன. அதற்கும் மீறி தோலில் பிரச்னை ஏற்படுகிறது என்றால், முதற்காரணமாக அது உணவு சம்பந்தப்பட்ட பிரச்னையாகவே இருக்கும் என்கின்றனர்.
தோல் நோய் வரக் காரணம்!
பயம், உழைப்பு, வெயில், அதிகக் குளிரில் குளித்தல் அல்லது அதிக சுடுநீரில் குளித்தல், உணவு செரிமானமாகாத நிலையில் மீண்டும் மீண்டும் உண்ணுதல், வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு பகலில் தூங்குதல், அதிகளவு தேன், கரும்பஞ்சாறு, மீன், எலுமிச்சம்பழம், புது அரிசி என்று உபயோகிப்பது இவையெல்லாம்தான் தோல் நோய்களுக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
தவிர்க்க வேண்டியவை:
தோல் நோய் வந்தவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
கத்தரிக்காய், நல்லெண்ணெய், தயிர், புலால் உணவு, புளிப்பான ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உப்பைத் தவிர்க்க வேண்டும். உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற தோல் வியாதிகளுக்கு உப்பு முக்கிய காரணம். அதிகளவு புளியை சேர்த்தால் தோல் வியாதி வரலாம்.
அதனால் குறைவாகவே புளி, எலுமிச்சை, நார்த்தங்காய் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். புளித்த மோர், தக்காளியையும் கூட தவிர்த்துவிடலாம்.
கரப்பான் போன்ற தோல்வியாதிகள் உள்ளவர்கள் முட்டைகோஸ், கருணைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, நல்லெண்ணெய், மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வாத கலவை உணவை தொடர்ந்து உண்டு வந்தாலும் தோல் வியாதிகள் வரலாம்.
உதாரணமாக, தயிருடன் வாழைப்பழம், மீன், கோழிக் கறி சேர்க்கக் கூடாது. அதேபோல், தேனுடன் சூடான உணவு, நெய், நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது.
சேர்க்க வேண்டிய உணவுகள்:
விட்டமின் ஏ, இ, நிறைந்த பழங்களை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். சாத்துக்குடி, கொய்யா, நெல்லிக்கனி ஆகிய பழங்கள் அவசியம்.
ஆரோக்கியமான சமச்சீரான உணவை சாப்பிட்டு பழகுவதுதான், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்க சிறந்த வழி.
தோல் நோய்களை நீக்கும் குணம் வல்லாரை கீரைக்கு உண்டு. தினமும் வல்லாரை சேர்க்கலாம். கோவைக்காய் தோல்நோய்களை குணப்படுத்த வல்லது. உணவில் அடிக்கடி சேர்க்கலாம். தோல் நோய்கள் குணமாக்கும் இன்னொரு முக்கிய உணவு பசலைக்கீரை. தினமும் உணவில் சேர்த்தால் எந்த தோல் நோயும் அண்டாது.
முக்கியமானது: பொதுவாக, சாப்பிட்டவுடன் உடல் அரிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அந்த உணவை கண்டிப்பாக தவிர்த்து விட்டாலே, தோல் நோயை தவிர்த்து விடலாம்.
ஸ்டிக் டாக்குமா!
எல்லா விஷயங்களிலும் நம்முடைய கோணம் என ஒன்று உண்டு. இது எல்லாருக்கும் தெரியும். அதுபோல் அடுத்தவருக்கும் ஒரு கோணம் உண்டு என்பதை நாம் உணர்வதில்லை. அதை உணர அடுத்தவர்களிடம் விவாதிக்க வேண்டும். ஆனால், அந்த விவாதங்களின்போதும் மற்றவர்களை பேசவிடாமல் குறுக்கிட்டு செக்குமாடு மாதிரி திரும்ப திரும்ப தன்னுடைய எண்ணத்தை மட்டுமே பேசி லொள்ளு பண்ணுகிறவர்கள் உண்டு. அதை தவிர்ப்பதற்கு, 'ஸ்டீபன் கோவி' ஓர் அட்டகாசமான வழி சொல்கிறார். அதன் பெயர், 'டாக்கிங் ஸ்டிக்.' அமெரிக்க பழங்குடியினர் சிலரிடையே உள்ள வழக்கம் இது.
'டாக்கிங் ஸ்டிக்' என்பது அடிப்படையில் ஒரு தடிமனான குச்சி. அதன் மேல் பகுதியில் ஒரு கழுகு இறகை கட்டி விட்டிருப்பர். கீழே முயலின் தோல், ஒரு நீலக்கல், பல வண்ண மணிகள் எல்லாம் பொருத்தப்பட்டிருக்கும். விவாதத்தின்போது இந்த குச்சி யாரிடம் இருக்கிறதோ அவர்கள்தான் ராஜா.
அதாவது, அவர்கள் மட்டும்தான் பேச வேண்டும். மற்ற யாரும் வாயை திறக்கக்கூடாது; குறுக்கிடக்கூடாது. முதல் நபர் பேசி முடித்ததும் 'டாக்கிங் ஸ்டிக்' அடுத்தவருடைய கைக்கு செல்லும். இப்போது அவர் பேசுவார். மற்றவர்கள் குறுக்கிடாமல் கேட்க வேண்டும்.
''டாக்கிங் ஸ்டிக்கின் உச்சியில் உள்ள கழுகு இறகு, அந்த கையில் வைத்திருப்பவர் தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும், பொறுப்புணர்ச்சியோடும் பேச செய்கிறது. முயலின் தோல் நம்முடைய பேச்சு மிக மென்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என உணர்த்துகிறது. நீலக்கல் நமது பேச்சை கடவுள் கேட்டு கொண்டிருக்கிறார் என்று ஞாபகப்படுத்துகிறது. பல வண்ண மணிகள் இதயத்திலிருந்து பேச வேண்டும் என்று சொல்லி தருகிறது. இவையெல்லாம் அந்த பழங்குடியினரின் நம்பிக்கைகள். ஆனால், இதையெல்லாம் விட முக்கியம், 'டாக்கிங் ஸ்டிக்' மூலம் அவர்களுடைய விவாதங்களில் இரண்டு துருவங்கள் முட்டி கொண்டு நிற்காமல் மூன்றாவது துருவங்கள் தோன்றுகின்றன.
அதாவது ஒவ்வொருவர் பேசுவதையும் மற்றவர்கள் கூர்ந்து கேட்கின்றனர். அவர்களுடைய கோணத்தை புரிந்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் ஒரு பொதுவான முடிவுக்கு வருகின்றனர். அமெரிக்கப் பழங்குடியினரின் இந்த பழக்கத்தை நேரில் பார்த்து சிலிர்த்து போன ஸ்டீப்ன் கோவி, நம்மைப்போன்ற நாகரிக உலகத்தில் கூட இப்படி ஒரு பண்பான ஒழுங்கு இல்லை' என்கிறார்.
இந்த முறையை நாமெல்லாம் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் எந்த பிரச்னைக்கும் சுலபமான, முழுமையான, எல்லாரும் ஒப்புக்கொள்ள கூடிய தீர்வுகளை கண்டுபிடிக்க முடியும். இப்போது நாம் என்ன செய்வது? ஆளுக்கு ஒரு கழுகு இறகு, முயலின் தோலைத் தேடிப் போக வேண்டுமா?
அதெல்லாம் வேண்டாம். முதலில், அடுத்தவர்கள் பேசும்போது அவர்களை குறுக்கிடாமல், கவனித்து கேட்கும் பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும். வேண்டுமெனில் அவர்கள் கையில் ஒரு 'டாக்கிங் ஸ்டிக்' இருப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம். அடுத்து, அப்படி மற்றவர்கள் சொல்லும் விஷயங்களை வெறுமனே காதில் போட்டு கொண்டு மறந்துவிடாமல், பிரச்னைகளை அவர்களுடைய கோணத்திலிருந்து பார்க்க பழக வேண்டும். இந்த இரண்டையும் ஒழுங்காக செய்தாலே, மூன்றாவது துருவம் தானாக புலப்படும். இருதரப்பினருக்கும் பொருந்தக்கூடிய புதிய தீர்வுகள் ஏராளமாக கிடைக்கும்.
என்றென்றும் உங்கள் அன்பில்,
அங்குராசு
