PUBLISHED ON : பிப் 01, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
லிமிட்டான தூக்கம் நல்லது!
பகலில் தூங்கினால் உடல் குண்டாகி விடும். இதுதான் பலரது கருத்து. ஆனால், அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புது ஆய்வுகள். பொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத்தான், படைக்கப்பட்டிருக்கிறது. இரவில், 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் (அ) மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு, அரை மணி நேரம் குட்டி தூக்கம் போட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இப்படி போடும் பகல் குட்டித் தூக்கம் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது பகலில் தூங்கினால், மூளை செயல்பாடு அதிகரித்து, அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து, பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.
அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தனர். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரித்து காணப் பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும் ஒரே முடிவுதான் வந்தது. மேலும், பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான்பிரிண்டில், சாராகாங்கிளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணிநேரம் தூங்கும்படியும், மற்றொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால், ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம், இதய நோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெரியவந்தது. இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித்தூக்கம் மட்டுமே பயன் தரும். அதை விட்டு, அரைமணி நேரம் தூக்கமானது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதுதான் அந்த எச்சரிக்கை.
பகலில் அளவாக தூங்கினால் வளமாக வாழலாம்.
என் செல்ல பொட்டேடோவே!
உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடக் கூடாது. அதில், கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. எனவே, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பல ஆண்டுகளாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. உருளைக்கிழங்கை ஒதுக்கக் கூடாது. அதையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உருளையில் அதிக அளவு கலோரி உள்ளது. குறைந்த அளவே நார்ச்சத்து உள்ளது என்பது உண்மையல்ல. சாதாரண அளவு கொண்ட உருளைக்கிழங்கில் கலோரியின் அளவு 161 என்றால் 4 கிராம் நார்ச்சத்தும் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது தவிர உருளைக் கிழங்கில் அறுபதுக்கு மேற்பட்ட உயிர்ச்சத்துக்களும், பைட்ரோ என்ற ரசாயனங்களும் உள்ளன. இது உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரியவந்துள்ளது.
இது தவிர உருளைக்கிழங்கில் உள்ள பிளாவோ நாய்ட்ஸ் என்ற பொருள் இதயத்துக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாது என்று இதுவரை கருதப்பட்டது. ஆனால், இது தவறு. இதிலுள்ள ஒருவகை ரசாயனம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்றும் தெரியவந்துள்ளது. உருளைக்கிழங்கின் தோலில் பொட்டாசியம் நிறைந்து உள்ளது. இதுவும் நமக்கு அத்தியாவசிய தேவை ஆகும். எனவே, உருளைக் கிழங்கை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ரயிலும் பறக்குது; டிக்கெட்டும் பறக்குது!
ஸ்பெயின் நாட்டில் ஓடும், 'ஆல்டோ வேலாகிடாட் எஸ்பொனாலா என்ற 'ஏ.வி.சி' பறக்கும் ரயில் மிகவும் பிரபலம். மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது இந்த ஆல்டோ வேலாகிடாட் எஸ்பொனாலா பறக்கும் ரயில். உள்நாட்டு போக்குவரத்தில், இந்த ரயில் சேவைக்கு அமோக வரவேற்பு உள்ளது. ஸ்பெயினின் தலைநகரான, மாட்ரிட்டில் இருந்து தென்கிழக்கு முனையில் பலேரிக் கடலோரம் அமைந்துள்ள வேலன்சியா வரை பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. 8.8 பில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப் பட்டுள்ள இந்த பறக்கும் ரயில் சேவையின் மூலம், இவ்விரு இடங்களுக்கான பயண நேரம், மூன்றரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாக குறைந்துள்ளது.
தற்போது இந்த சேவையை ஸ்பெயின் நாட்டு அரசின் ரயில்வே துறையே செய்து வருகிறது. வருங்காலத்தில் தனியார் வசம் விடப்படலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாட்ரிட் வேலன்சியா பறக்கும் ரயில் தடமானது பார்சிலோனா, ஜாரோகோசா, செவில்லா, கார்டோபா, வல்லடோலிட், செகோவியா, டோலிடா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கிறது. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளே ஒரு மாதத்திற்கான 90 ஆயிரம் டிக்கெட்டுகளும் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்தன. ரயில் என்றாலே எல்லா நாட்டிலும் பறக்கத்தான் செய்வர் போலும்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது, 'உக்காரா' செய்முறை நேரம்.
தேவையானவை: ரவை-1/2 கப், அரிசி மாவு- 1/2 கப், பாசி பருப்பு - 1கப், வெல்லம்-2 கப், தேங்காய் துருவல்-1/2 கப், ஏலக்காய் தூள்- 1/2 டீஸ்பூன், முந்திரி-12, நெய்-3/4 கப்.
செய்முறை: கடாயில் எண்ணெய் சேர்க்காமல் பாசி பருப்பை வறுக்கவும். பருப்பை நன்கு வேக விடவும். வெல்லத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி, மறு படியும் மெல்லிய தீயில் கொதிக்கவிடவும். பாதி நெய்யை கடாயில் சேர்த்து அரிசி மாவை போட்டு கிளறவும். பிறகு தேய்காய் துருவல் சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்தவுடன் வெல்லப்பாகு, வேக வைத்த பாசி பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். கலவை பாத்திரத் தில் ஒட்டாமல் வரும்போது மீதமுள்ள நெய்யையும், ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
என்றும் அன்புடன், அங்குராசு.
