PUBLISHED ON : பிப் 01, 2013

டெலிபோனில் பேசிவிட்டு வந்த ஹனியின் சித்தி, தாங்க முடியாத பெருமையோடு தன் அக்கா பெண்ணிடம் கூறினாள்.
''ஹனி உன்னை பம்பாய் விடாது போலிருக்கு... நீ என்னன்னா ஊருக்குக் கிளம்பணும்னு துடிக்கிறே...''
''என்னவாம்? உங்ககிட்டே இப்போ டெலிபோனிலே பம்பாய் தான் பேசினதா... ஹனியை போக விடாதீங்கன்னு?'' கிண்டலாகக் கேட்டாள் ஹனி.
''குறும்புக்காரி நீ! பம்பாய் நகரின் போலீஸ் அதிகாரி பேசினாலே, பம்பாய் பேசினாப்பல தானே! உன்னைப் பார்க்க அவசரமா வறாராம்,'' என்றாள் பெருமையோடு.
''ஒவ்வொரு விசிட்டுக்கும் பணம் வாங்கினா... உன் பேரிலே, பம்பாயிலே ஒரு பிளாட் வாங்கிடலாம் போலிருக்கே?'' என்றாள்.
''பிளாட் வாங்கறது இருக்கட்டும் சித்தி... இன்ஸ்பெக்டர் எதுக்காக வறாராம்?''
''முன்னாள் பிரபல சினிமா ஸ்டார் சித்ராதேவியோட கணவன் கொலை விஷயமாக. நேரில் வந்து விவரிப்பதாகக் கூறினார். இன்னும் கொஞ்சம் நேரத்திலே வந்து விடுவார்... அவர் கிட்டயே கேட்டுக்கோ,'' என்று கூறியபடி டிபன் தயாரிக்கச் சமையலறையில் புகுந்து கொண்டாள் சித்தி.
சிறிது நேரத்துக்கெல்லாம் இன்ஸ்பெக்டர், ''ஹலோ, மிஸ் ஹனி!'' என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
குடியிருப்பில் ஆங்காங்கே பல முகங்கள் எட்டிப் பார்த்தன. மேலும், அத்தனை பேரின் பேச்சிலும் ஹனியின் பெயர்தான் உலா வந்தது.
''சித்ராதேவியைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்காது,'' என்று தம் பேச்சைத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர்.
''அந்தக் காலத்துப் பிரபல ஸ்டார்... இப்போது தன் காதலனுடன் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டவள், இன்று மலபார் ஹில்ஸில் உள்ள அவளது பங்களாவில் காலை அவளது கணவன் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த சமயத்தில் அதே அறையில் சித்ரா தேவியும் இருந்திருக்கிறாள். ஆனால், 'தன் கணவனைச் சுட்டது யார் என்று தனக்குத் தெரியாது' என்கிறாள் அந்த முன்னாள் பிரபலம்.
''அதற்கு அந்த நடிகை கூறும் காரணம் எனக்கு இடது காது சுத்தமாகக் கேட்காது என்பது தான்; சித்ராதேவி கடிதம் எழுதிக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து, பதினைந்தடிக்கு அப்பாலுள்ள ஜன்னல் அருகே, அவள் கணவன் நின்று கொண்டிருந்தாராம். அவரிடம் ஏதோ கேட்க நினைத்து சித்ரா திரும்பிய போது, அவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதையும் கண்டாளாம்.
''வேறு எந்தச் சத்தத்தையும் நான் கேட்கவில்லை. அவர் என் இடது பக்கத்தில் இருந்தார். சைலன்சர் பொருந்திய துப்பாக்கியினால் யாராவது ஜன்னல் வழியே அவரைச் சுட்டிருக்க வேண்டும். எனக்கு இடது காது கேட்காததினால் அவர் விழுந்த சத்தத்தைக் கூட நான் கேட்கவில்லை என்கிறாள்.
''அந்த முன்னாள் நடிகையின் வாக்குமூலம் எங்களுக்கு நம்பும்படியாக இல்லை. ஒரே அறையில் இருந்தும் எப்படி...? அந்தம்மாளுக்கு நிஜமாகவே ஒரு காது செவிடுதானா அல்லது தனக்கு இடது காது செவிடு என்று பொய் சொல்லி நடிக்கிறாளா என்று புரியவில்லை. அவள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்றும் தெரியவில்லை. நீ ஏதாவது யோசனை கூறுவாயே என்று தான் வந்திருக்கிறேன்,'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''அவள் குழந்தை, அவளுக்கு இந்தக் கொலை, திருட்டு இதிலெல்லாம் என்ன...'' என்று இடைமறித்தார் சித்தி.
''மாதாஜி! நீங்க நினைக்கிறது தப்பு. நாங்க கிரிமினாலஜி விஷயமா எவ்வளவோ படிச்சிருக்கோம். ஆனால், சமயத்திலே அது கை கொடுக்காது; ஆனால், இன்றைய குட்டீஸ்கள் சூப்பர். உங்க ஹனி போன்ற புத்திசாலிகள், தாங்கள் படித்த பல விஷயங் களை மறக்காமல் தக்க சமயத்திலே பயன் படுத்தறாங்களே, அதுதான் திறமை,'' என்றார் இன்ஸ்பெக்டர்.
பெருமையால் பூரித்துப் போனாள் சித்தி.
இத்தனை நேரமும் யோசனையிலிருந்த ஹனி, ''சித்ரா தேவிக்கு நிஜமாகவே ஒரு காது கேட்குமா? கேட்காதா? என்ற விஷயம் தானே உங்களுக்குத் தெரியணும்,'' என்று கேட்டாள்.
''ஆமாம். அது தெரிந்தால் அதன் அடிப்படையில் நாங்கள் மேலே கொலை விஷயமாக முன்னேறலாம். சித்ராதேவியை வைத்தியப் பரிசோதனை செய்யலாமே என்று நீ கேட்கலாம். ஆனால், அது இல்லாமலே அறிய முடியுமானால் நல்லது. 'என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையா?' என்று அந்தம்மாளை ஆத்திரப்பட வைக்க வேண்டாமே என்று...'' தன் தயக்கத்தை வெளிப்படுத்தினார் இன்ஸ்பெக்டர்.
''உங்கள் சங்கடம் புரிகிறது. அந்தம்மா ளுக்கு நிஜமாகவே ஒரு காது செவிடுதானா என்பதை நாசூக்காக அறிந்து சொல்ல ஒரு வழி உள்ளது. நீங்களும், உங்கள் உதவி யாளரும் சித்ராதேவியின் இரு காதினரு கிலும் வெவ்வேறு வாக்கியங்களை ஒரே சமயத்தில் முணுமுணுங்கள். பிறகு நீங்கள் கூறிய வார்த்தைகளைத் திருப்பிக் கூறும்படி அவளிடம் சொல்லுங்கள். அப்போது அந்தம் மாளின் நிலையைக் கொண்டு அவளுக்கு நிஜமாகவே ஒரு காது செவிடு தானா இல்லையா என்பதைக் கூறிவிடலாம்...'' என்றாள் ஹனி.
''அது எப்படி...? என்று கேட்ட இன்ஸ் பெக்டருக்கு அதை விளக்கினாள் ஹனி.
விடைகள்:
தனக்கு ஒரு காது செவிடு என்று ஒருவர் பொய் கூறி ஏமாற்றினால், அவருடைய இரு காதுகளில் ஒரே சமயத்தில் இருவர் வேறு, வேறு வார்த்தை களை முணுமுணுக்கும் போது, ஒரு காது செவிடானால் மற்ற காதில் கூறியவருடைய முணு முணுப்பை அவர் உணர்ந்து அதைத் திருப்பிக் கூறிவிடு வார். இரு காதுகளும் நன்கு கேட்குமானால், அவரால் யார் முணுமுணுத்ததையும் திருப்பிக் கூற முடியாது. இதை நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சோதித்துத் தெரிந்து கொள்ளலாம்.
***
