PUBLISHED ON : ஜூன் 21, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
'பச்ச விட புழுங்கல்' நல்லது!
தமிழ்நாட்டில் காலம் காலமாக தமிழர்கள் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்ற 2 வகை அரிசியை சாப்பிட்டு வருகின்றனர். அந்த இரண்டுக்கும் தனித்தனி சிறப்பு தன்மைகள் உண்டு.
தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள். பச்சரிசி உணவை சாப்பிட்டால், அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால்தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
வளரும் குழந்தைகளுக்கு பச்சரிசி உணவுதான் ஏற்றது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணக் கூடாது. புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால், அதில் உள்ள சர்க்கரை மெதுவாகத்தான் ரத்தத்தில் கலக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. அந்த நிறம்தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது, தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கூடுதலாக கிடைக்கின்றன. முன்பெல்லாம் நெல்லை அவிக்கும் முன் நீரில் கொட்டி நன்றாக ஊற வைப்பர். அதன் பின்பு ஊறிய நெல்லை அவிக்கும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைப்பர்.
இப்பொழுதெல்லாம் நெல்லை நேரடியாகவே நீராவியில் வேக வைக்கும் முறை வந்து விட்டது. அதனால் ஊற வைக்கும் போது வீணாகும் உயிர்ச்சத்துக் கள், இப்போது நீராவியில் வேக வைப்ப தால் முழுவதுதாக கிடைக்கின்றன. இந்த முறையில் இன்னும் கூடுமான உயிர்ச் சத்துக்கள் புழுங்கல் அரிசிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனால்தான் உடலுழைப்பு அதிகம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசியையும், உடலுழைப்பு குறைவானவர்கள் பச்சரிசியையும் சாப்பிடும் முறையை நமது முன்னோர்கள் வகுத்தனர்.
ஈரெட்டு வயதில் எவரெஸ்ட்!
உலகிலேயே மிக உயரமான சிகரம் என்ற பெயர் பெற்றது எவரெஸ்ட் சிகரம். இந்தியாவை ஒட்டி உள்ள நேபாளத்தில் இந்த எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர். அதாவது 29 ஆயிரத்து 29 அடி ஆகும். இந்த சிகரத்தில் ஏறி உச்சியை அடைவது உலக சாதனையாக கருதப்படுகிறது.
இதுவரை ஏராளமானவர்கள் ஏறி சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளனர். இதில் பெண்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் ஒரே நாள் இரவில் 9 பேர் ஏறி உச்சியை வெற்றிகரமாக அடைந்துள்ள சாதனை முதல் முறையாக நடந்துள்ளது.
அவர்கள் அனை வரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அருணாச்சல மாநில சிகரம் ஏறும் குழுவினர் மற்றும் சாதனை விளையாட்டு அமைப்பின் தலைவர் செரிங் வாங் மே மாதம் 19ம் தேதி கூறியதாவது...
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த அனுஷ் ஜேம்சென்பா, தருண் சைகியா (அசாம்), டேவி, சொமங்கைகா, (மிசோரம்), வாங்ஷீக் மிர்தாஸ் (மேகாலயா), காஸி ஷெர்பா (சிக்கிம்), நனமரக்பம், (மணிப்பூர்) ஆகிய 6 பேர் 17-5-2013 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் தெற்கு அடிவாரப்பகுதியில் இருந்து ஏறத் தொடங்கினர்.
இதில் மணிப்பூரை சேர்ந்த நனமரக்பம் 16 வயது சிறுவனும் உண்டு. இவர்கள் விடிய விடிய மலை ஏறி, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்கு சிகரத்தின் உச்சியை அடைந்து இந்திய தேசிய கொடியை நாட்டினர். இதில் அனுஷ் ஜேம்சென்பா என்ற பெண், சிகரம் ஏறும் குழுவின் துணைத்தலைவர் ஆவார். இவர் 3 முறை ஏறி சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெறுகிறார்.
ஜேம்சென்பாவுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். 10 நாட்களில் 2 முறை எவரெஸ்டில் ஏறி, 'சாதனை தாய்' என்ற பட்டத்தையும் இவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.
ஏறும்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேக சூறாவளி காற்றையும் இவர் சந்தித்து சோதனைகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பகலில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிமா லாமா, மணிப்பூரை சேர்ந்த பித்யாபதி தேவி, சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் குருய் ஆகியோர் எவரெஸ்ட் சிகரம் ஏறி உச்சியை அடைந்தனர்.
ஒரே நாளில் இந்தியர்கள் 9 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தது முதல் முறையாக நடந்துள்ள சாதனை ஆகும். இவ்வாறு செரிவ் வாங் கூறினார்.
சிலந்திக்கு சாப்பாடு-பறவையா?
நீலகிரி மாவட்டம், மசினகுடி குடியிருப்பு பகுதியில் முதன் முறையாக தென்பட்ட, பறவை உண்ணும் சிலந்தி குறித்த ஆய்வில் , ஊட்டி அரசு கலை கல்லூரி விலங்கியல் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் பல வகை சிலந்திகள் உள்ளன. இதில், 'போசில்லோ தெர்யா ரெனகல்ஸ்' என்ற விலங்கியல் பெயரை கொண்ட கொடிய விஷத்தன்மை நிறைந்த இச்சிலந்திகள், கேரள மாநிலத்தில், பாலக்காடு உட்பட, பல இடங்களில் அதிகளவில் காணப்படுகின்றன.
இவ்வகை சிலந்திகள், மரத்தில் வாழும். விஷத்தன்மை நிறைந்த இச்சிலந்திகள், சிறிய பறவை பூச்சியினங்களை உண்டு உயிர் வாழ்கின்றன. இச்சிலந்தி கடித்தால், உடனடியாக மரணம் ஏற்படும்.
இச்சிலந்தியால் கடிபடும், ஆடு, மாடுகள் இரண்டு மணி நேரத்தில் இறந்துவிடும் என கூறப்படுகிறது. விஷத்தன்மை நிறைந்த இச்சிலந்திகள் இதுவரை நீலகரி மாவட்டத்தில் தென்படவில்லை.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், மசினகுடி மாவனல்லா பகுதியில் வசிக்கும், ஊட்டி அரசு கலை கல்லூரியில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியின், வீட்டில் இருந்த விறகு கட்டையின் இடையே இவ்வகை சிலந்தி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'குழம்புமா உப்புமா' செய்முறை நேரம்.
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், புளித்த மோர் - அரை கப், கடுகு-ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல்-8, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, எண்ணெய்-ஒரு கரண்டி, உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை:
*அரிசி மாவோடு உப்பு சேர்த்து கலந்து, மோர் ஊத்தி நல்லா கெட்டியா பிசைஞ்சுக்குங்க.
* வாணலியில் எண்ணெய் விட்டு, நல்லா காய்ஞ்சதும் கடுகை போட்டு, அது வெடிச்சதும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை... ரெண்டையும் கிள்ளி போட்டு வறுத்துங்குங்க.
*பிசைந்த அரிசி மாவை உதிர்த்தாற்போல போட்டு நல்லாக் கிளறணும்.
*மாவு ஒட்டிக்காம உப்புமா போல உதிர் உதிராக வந்ததும் இறங்குங்க.
காரச் சட்டினியோட சாப்பிட்டு பாருங்க... ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும் இந்த குழம்புமா உப்புமா!
என்றும் அன்புடன், அங்குராசு.
