PUBLISHED ON : பிப் 28, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
அப்பா பார்த்தா பெயராகும்!
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற எண்ணம் குடும்பத்தாரிடம் எழும்.
பெண் என்றால் என்ன பெயர்? ஆண் என்றால், என்ன பெயர்? என பட்டியல் ரெடியாகும்.
அமெரிக்க நாட்டு சிவப்பிந்தியர்கள் குழந்தை பிறந்தவுடன் அதனுடைய தந்தை எந்த பொருளை முதலில் பார்க்கிறாரோ, அப்பொருளின் பெயரையே அக்குழந்தைக்கு சூட்டுகின்றனர்.
ஓடும் தண்ணீர், நடக்கும் நாய், அசையும் இலை என்றெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் வைத்து இருக்கின்றனர்.
ஒழுங்கும், உறுதியும்!
25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி, அதை தனது காலத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றி காட்டினார் திருபாய் அம்பானி.
அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னை போலவே பிறரும் அதனை பின்பற்ற வேண்டும் என்று பலருக்கு கற்று கொடுத்தது ஆகியவையே அவரது வெற்றிக்கு காரணம்.
பொதுவாக முதல் தலைமுறையில் சம்பாதித்த சொத்துக்களை அடுத்த தலைமுறையில் வருவோர் அழித்து விடுவது உண்டு.
ஆனால், திருபாயின் மகனாக வந்து அம்பானியின் தொழிலை நிர்வகிக்க தொடங்கிய இரு சகோதரர்களும், 60 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை இன்று 6 லட்சம் கோடி ரூபாயாக தூக்கி நிறுத்தி விட்டனர்.
காரணம், அவர்களிடம் இந்த தொழில் ஒழுங்கு மற்றும் அதை ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பின்பற்றியது தான். எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பதில் ஓர் உறுதி இருந்தாலே வெற்றி நிச்சயம் ஆகிவிடும்.
பூட்டு மட்டுமல்ல...!
ஒவ்வொரு பிரச்னைக்கும், தவறுக்கும் ஒரு தீர்வு இருக்கும்.
பிரச்னை வரும் நேரத்தில் குழம்பி நிற்பதை விட வெளியே வரும் தீர்வே வெற்றியை தரும். பிரச்னையை பூட்டு என்று வைப்போம். தீர்வை சாவி என்று வைப்போம். பூட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பூட்டை மட்டும் தயாரிப்பதில்லை. பெயர் பூட்டு கம்பெனி என்றிருந்தாலும், அங்கே சாவியும் தயார் செய்கின்றனர் என்பதை உணருங்கள்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது சுவையான 'பரங்கிக்காய் பிர்ணி' செய்முறை நேரம்
தேவையானவை: முற்றிய பரங்கிக்காய் துருவல் - 1 கப், ரவை-1/4 கப், பால்-500 மில்லி, ஜாதிக்காய் தூள்-1/4 தேக்கரண்டி, ஏலக்காய்-2, லவங்கம் - 3, சர்க்கரை - 300 கிராம், நெய்-50 கிராம்.
செய்முறை:
* ஏலக்காய், லவங்கத்தை தூளாக்கவும். பரங்கிக்காய் துருவலை பிழிந்து வைக்கவும்.
* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, ரவையை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
* ரவை வெந்து வரும்போது, பரங்கிக்காய் துருவலை சேர்க்கவும். கொதித்து கலவை கெட்டியாக வரும்போது ஜாதிக்காய்த் தூள், ஏலக்காய்த் தூள், லவங்கப் பொடி, சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
* பிறகு நெய்யை ஊற்றி கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை பிரிந்து வரும்போது, சிறிது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகளாக்கி பயன்படுத்தவும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
