PUBLISHED ON : மார் 28, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
வீட்டிலேயே சூப்பரா சூப் சாப்பிடலாம்!
ஸ்நாக்ஸ் போல இப்போது சூப் கடைகள் பெருகிவிட்டன. என்னென்ன பெயரிலோ சூப்புகள். அதற்கு தொட்டுக்க என வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.
வீட்டிலேயே அதிக செலவில்லாமல், அதிக பயனும் - சத்தும் கொண்ட சூப்புகளை செய்து குடும்பத்தோடு மாலை வேளையில் அருந்தலாம். இதனால் குடும்பத்தினரிடையே நல்லிணக்கம் ஏற்படும். வீண் செலவு, வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.
பட்டினிக்கும் சூப்!
இது முருங்கைக்கீரை சூப். செய்முறை பலன்பகுதி.
நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதில் சின்ன வெங்காயம் 4, மிளகு 10, சீரகம் 5 கிராம், பூண்டு 2 பல் போட்டு கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப்பாக காலை உணவுக்கு பின் மதிய உணவுக்கு முன் 2 கப் அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப் மிகவும் நல்லது. உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். மேலும் கண் பார்வை தெளிவாகும். நரம்பு தளர்ச்சியை போக்கும். தாதுவை விருத்தி செய்யும். காலரா, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு குணமாகும். உண்ணா நோன்பு நாட்களில் முருங்கைக் கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது.
நோயை எதிர்க்கலாம்:-
இது புதினா சூப். புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம், கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரகக் கல்லடைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகள் எல்லாம் விலகும்.
சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கு முன் குடிப்பது நல்லது.
புதினாவை நிழலில் காய வைத்து பொடி செய்து பனங்கற் கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்கு பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பருமனுக்கு பை.... பை....!
இது வாழைத்தண்டு சூப்.
வாழை மரத்தின் இலை, பூ, காய், தண்டு, வேர்த்தண்டு அனைத்தும் பயன் படுகிறது. வீட்டு விசேஷங்களில் வாழை மரம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்த பிறகு, சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைபட்டவர்களில் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வை கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு. வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும்.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும். பெண்களுக்கான தனிப்பட்ட உபாதைகள் மற்றும் பிரச்சனைக்கு இது நல்லது.
ரத்த அழுத்தத்தை குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களை குணப்படுத்தும்.
உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாகும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலேயே பழக்கிடவேண்டும். பிற்காலத்தில் அவர்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் அற்புதமாக வாழ அது வழி செய்யும்.
உங்கள் அன்பு, அங்குராசு.
