PUBLISHED ON : மார் 28, 2014

அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் ஒரு நாயை அன்புடன் வளர்த்து வந்தார். அதற்கு, 'வைரம்' என்று பெயர் வைத்திருந்தார். தம்முடைய ஓய்வு நேரத்தில் அதனுடன் கொஞ்சி விளையாடுவார். அதுவும் அவருடன் அன்புடன் கொஞ்சி விளையாடும். அவர் எங்கிருந்தாலும் அவரைத் தேடி அடிக்கடி வந்து போகும். அதே போல், ஆய்வுக் கூடத்திற்கும் வந்து போகும்.
அவர் தமது ஆராய்ச்சி குறிப்புகளை ஓர் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். அதனை தம் மேஜை மீது வைத்திருந்தார். ஒருநாள் அவரது நாய் ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்து அங்கிருந்த விளக்கை தவறுதலாக தள்ளிவிட்டது. அதனால் அந்த முக்கியமான ஆராய்ச்சிக் குறிப்புகள் முழுமையாக தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிட்டன.
ஆய்வுக் கூடத்திற்கு வந்த நியூட்டன் அதனைக் கண்டு திடுக்கிட்டார். பல ஆண்டுகள் தாம் அரும்பாடுபட்டு சேகரித்த ஆராய்ச்சிக் குறிப்புகள் முழுவதும் நாசமானது கண்டு வருந்தினார்.
அதைக் கொஞ்சமும் உணராத நாய் நியூட்டனின் அருகில் வந்து வழக்கம் போல் கொஞ்சிய படி அவர் மீது கால்களைத் தூக்கிப் போட்டது.
நியூட்டன் அந்த நாயை செல்லமாகத் தட்டிக் கொடுத்து, 'வைரம் நீ செய்த குறும்பால் என் பல்லாண்டு கால உழைப்பு வீணாகி விட்டது என்பது உனக்கெப்படி புரியப் போகிறது' என்று கொஞ்சலாக கட்டியணைத்தார்.
