PUBLISHED ON : மே 09, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
கொத்தி, கொத்தி, மரங்கொத்தி!
அழகான சிவந்த நிற அலகுடன் காணப்படும் மரங்கொத்தி பறவைகள் மரங்களில் அமர்ந்து கொண்டு மரங்களின் பட்டைகளை கொத்திக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இந்த பறவைகளுக்கான உணவு அந்த மரப் பட்டைகளில் இருக்கிறது. மரப்படைகளின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் புழு, பூச்சிகளை தேடிப்பிடித்து இவை உண்ணுகின்றன. புழு, பூச்சிகளுக்காக இந்தப் பறவைகள் தங்கள் அலகால் மரப் பொந்துகளை விடாமல் கொத்தி துளையிடுகின்றன.
இந்த இடத்தில் ஒன்றை பார்க்க வேண்டும். அதாவது, மரங்கொத்தி பறவையைப் போல் நமது தலையை எங்காவது முட்டினால் என்ன ஆகும். ரத்தம் வழிந்து மயங்கி விழுந்து விடுவோம். நாம் முட்டும் அளவு என்பது புவி ஈர்ப்பு விசை அலகு கணக்குப்படி சுமார் 80 முதல் 100 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், மரங்கொத்தி, மரத்தின் பட்டையை துளையிடும் போது அது கொத்தும் அளவின் வேகம் என்பது சுமார் 1200 புவிஈர்ப்பு விசை அலகுகள் என்று கணக்கிட்டு இருக்கின்றனர். இந்த வேகத்தில் ஒரு சின்னஞ்சிறு பறவை கடின மரத்தை கொத்தும் போது அதற்கு ஒரு தலைவலி கூட வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம். இதற்கான பதிலைத்தான் விஞ்ஞானிகள் தேடினர். அவர்கள் கண்டு பிடித்தது இதுதான்.
அதாவது, மரங்கொத்தியின் தலையானது பலத்த அதிர்வுகளை தாங்கும் வகையில் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பறவை யின் மண்டை ஓடு நான்கு விதமான அதிர்வு தாங்கும் அமைப்புகளுடன் இருக்கிறது. மண்டை ஓட்டின் முதல் நிலையில் உள்ள அமைப்பு உறுதி உடைய நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்ட அமைப்பாக இருக்கிறது.
மண்டை ஓட்டின் இரண்டாவது அடுக்கான ஹையாய்டு என்னும் எலும்பு மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. மூன்றாவதாக உள்ள மண்டை ஓட்டு எலும்பில் பஞ்சு போன்ற ஒரு அமைப்பும், அதற்கடுத்து மண்டை ஓட்டிற்கும் மூளைக்கும் இடையே குறுகிய இடைவெளி யும் காணப்படுகின்றன. இங்கு தான் மூளை தண்டு வட நீர் இருக்கிறது.
இந்த நான்கு நிலை களைத் தாண்டித் தான் எந்த அதிர்வும் மரங்கொத்தியின் உள்மண்டையை தாக்க முடியும். ஆனால், எப்படிப்பட்ட பலத்த அதிர்வும், இந்த நான்கு தடைச்சுவர்களையும் தாண்டிப் போவதில்லை. எனவேதான், மரங் கொத்தியால் வினாடிக்கு சுமார் 22 தடவை மரத்தைக் கொத்த முடிகிறது. உலகில் உள்ள வேறு எந்தப் பறவையும் இந்த அளவுக்கு விசையை பயன்படுத்தி தனது தலையால் மரத்தில் மோத முடியுமா என்பது வியப்பானது தான்.
மரங்கொத்தியைக் கண்டு வியந்து போன ஆய்வாளர்கள், மரங்கொத்திப் பறவையின் மண்டை அமைப்பை வைத்து மனித குலத்திற்கு உதவக்கூடிய வேறு சில கருவிகளை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அப்படி உருவாக்கப்படும் கருவிகளை, புவியின் எத்தனை உயரத்தில் இருந்து கீழே போட்டாலும் அவை உடையாமல் அதிர்வை தாங்கும் என நம்பலாம். விமானத்தின் கருப்பு பெட்டி போன்ற அதிமுக்கிய தகவல்களை தரும் சாதனங்களை இந்த வரிசையில் சேர்க்கலாம். உயிரினங்கள் மனித குலத்திற்கு எத்தனையோ பாடங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மரங்கொத்திகளும் இயற்கையின் அதிசயம்தான்.
என்றென்றும் உங்கள் அன்புடன், அங்குராசு
