
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
'ஸ்மார்ட் போன்' குட்டீஸை 'ஸ்மார்ட்' ஆக்குகிறதா?
வீட்டிற்கு ஒரு போன் என்பது மாறி, ஒவ்வொருவரின் கையிலும், ஒரு போன் என்ற உலகமாகி விட்டது.
சாதா போன் எல்லாம் சாக்கு மூட்டைக்குபோக, ஒவ்வொருவரிடமும், 'ஸ்மார்ட் போன்' பளபளக்கிறது. குறிப்பாக, குட்டீஸ்களிடம், 'ஸ்மார்ட் போன்' மிக அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது.
உலகில் இப்போதைய அளவில், 1.8 மில்லியன் மக்கள், 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து, மேலும் எகிறி கொண்டே போகிறது. அப்படிப்பட்ட 'ஸ்மார்ட் போன்'களின் ஆதிக்கம், சுட்டிக் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் இங்கே விஷயமே!
உலகளவில், 11 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளில், 70 சதவீதம் பேருக்கு, மொபைல் போனை பயன்படுத்த தெரிந்திருக்கிறது.
அதுவே, 14 வயதுடைய குழந்தைகள் என்றால், 90 சதவீதமாக உயர்கிறது. மேலும், அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், 10 வயது முதல் 13 வயது உள்ள குழந்தைகளில், 56 சதவீதத்தினர் சொந்தமாக, 'ஸ்மார்ட் போன்' வைத்திருக்கின்றனர்.
அதனால், ஓடியாடி விளையாட வேண்டிய குட்டீஸ்கள் இப்போது, 'ஸ்மார்ட் போன்' திரையில், விரல் நுனியில் விளையாடி மகிழ்கின்றனர்.
அப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதுடன், கற்பனை திறனும் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வெளி உலக அறிவை முடக்குவதுடன், மூன்று அங்குல திரையில் குழந்தைகளை கட்டிப் போட்டு விடுகின்றன. குட்டி பாப்பாக்களின் படிப்பை பாதிப்பதுடன் வயதுக்கு மீறிய விஷயங்களையும், தேவையில்லாத விவகாரங்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. இதை பெற்றோர்தான் ஒழுங்குபடுத்த வேண்டும்.
'ஸ்மார்ட்போன்' மற்றும், 'டேப்லெட்'களின் தேவையை ஆக்கப்பூர்வமாக உபயோகப் படுத்திகொள்ள குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும்.
நண்பர்களே இதோ, பேஸ்புக் நிறுவனர், மார்க் சக்கர்பேக் கூறுவதை படியுங்கள்...
'என்னுடைய குழந்தைகளை, 15 வயதிற்கு மேல்தான், 'பேஸ்புக்' பயன்படுத்த அனுமதிப்பேன். அதுமட்டுமா, 15 வயதிற்கு மேலாக தான், 'ஸ்மார்ட் போன்,' கம்ப்யூட்டர் இணையதளம் எல்லாமே. அதுவரை, அவர்கள் புத்தகங்களை படிக்கட்டும்!
தகவல்களையும், இயற்கை அதிசயங்களையும், கண்களில் கண்டு ரசிக்கட்டும். அதற்குதான் குழந்தை பருவம்! என்ன புரிகிறதா மார்க்கின் கொள்கை.
பெற்றோர்களே, பள்ளிப் பருவத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வாங்கி தராதீர்.
மலரின் 13 நிலைகள்!
அரும்பு என்பது பொதுவாய் மலர்; மொட்டு விடுவதற்கு முன் இருக்கும் நிலை.
ஒரு மலருக்கு, 13 நிலைகள் இருப்பதாக நமது மொழி சொல்கிறது. அவை...
* அரும்பு - அரும்பும் தோன்றும் நிலை
* நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
* முகை - நனை முத்தாகும் நனை
* மொக்குள் - மணத்தின் உள்ளடக்க நிலை
* முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
* மொட்டு - கண்ணுக்கு தெரியும் மொட்டு
* போது - மொட்டு மலரும்போது காணப்படும் புடைநிலை
* மலர் - மலரும் பூ
* பூ - பூத்த மலர்
* வீ - உதிரும் பூ
* பொதும்பர் - பூக்கள் பலவாக குலுங்கும் நிலை
* பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
* செம்மல் - உதிர்ந்த பூ, செந்நிறம் பெற்றும் அழுகும் நிலை.
சீட்டான்னா - சிறுத்தையா?
இந்தியாவில் நாம் சிறுத்தை என்று கூறுவது லெப்பர்ட்டைத்தான். சீட்டா என்பதை தமிழில் சிவிங்கப் புலி என்று சொல்ல வேண்டும். அந்த இனம் இந்தியாவில் முழுமையாக அழிந்து போய்விட்டது.
சிறுத்தை என்பது புலியை போன்றே தோற்றம் கொண்ட, அதே நேரத்தில் வரிகளுக்கு பதில் உடலில் கறுப்பு வண்ண வட்டங்களை கொண்ட ஒரு விலங்கு.
சீட்டாவுக்கோ, உடலில் கறுப்பு புள்ளிகள் மட்டுமே இருக்கும்.
சிறுத்தையின் முகம், புலி முகம் போலவே இருக்கிறது. சீட்டாவின் முகமோ சிறியதாகவும், யூ வடிவ கோட்டுடனும் இருக்கும்.
தமிழகத்தில், பாந்தர் என்ற வார்த்தையும் சிறுத்தையை குறிப்பிடுவதாக நினைக்கின்றனர். நம்மூர் சிறுத்தைக்கும், பாந்தருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
ஒரே ஒரு ஒற்றுமை பூனை, சிங்கம், புலி, சிறுத்தை சீட்டா, பனிச்சிறுத்தை, மலைச்சிங்கம், பாந்தர் எல்லாமே பூனைக்குடும்பத்தை சேர்ந்தவை.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.