PUBLISHED ON : ஆக 24, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
ஜாக்கிரதை கபர்தார்!
மலைப்பாதை பயணத்தின் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட், முள்ளங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வயலில் அறுவடை செய்தவற்றை, ஓடைத் தண்ணீரில் கழுவி விற்பர். அந்த தண்ணீர், விலங்குகளால், அசுத்த படுத்தப்பட்டிருக்கும்.
இதை சாப்பிடுவதால், குடற்புழுத் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு; அத்தகைய காய்கறிகளை, சுத்தமான தண்ணீரில், நன்கு கழுவிய பின் தான் பயன்படுத்த வேண்டும்.
தக்காளிச் செடியின் இலைகளிலும், இலை நரம்புகளிலும், 'அட்ரோபைன்' என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது, மயக்கம், தலைவலி, வயிற்றுக் கோளாறு ஏற்படுத்த கூடியது. பச்சை நிற தக்காளியில், ஓரளவு இது இருப்பதால், முடிந்த வரை, பழுத்த தக்காளிகளை பயன்படுத்துங்கள்.
கீரை, காலி ப்ளவர், முட்டைக் கோஸ் போன்ற, பச்சைக் காய்கறிகளில், வைட்டமின் 'கே' அதிகம் உள்ளது; இவை, உடலுக்கு நல்லது. ஆனால், ரத்தம் உறைவதில் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஆகாது; எச்சரிக்கையாக இருங்கள்.
வெள்ளரிக் காய்களை, தோல் நீக்கி, கூடைகளில் பரப்பி விற்பர். அவற்றை, ஈக்கள் மொய்த்திருக்கும். அதை தின்பதால் தாகம் தணிவது உண்மை தான். ஆனால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அது போன்ற வெள்ளரியை தவிருங்கள்.
காலை நேரத்தில், நடை பயிற்சி செய்பவர்கள், அருகம்புல் சாறு குடிக்கின்றனர். அருகம்புல் விளைந்த இடம், சேகரித்த விதம், சுத்தம் செய்த விவரம் தெரியாமல், அருந்துகின்றனர்.
சாக்கடை, குப்பைக் குவியலில் பிடுங்கி, சரியாக சுத்தம் செய்யாமல் தான், ஜூஸ் தயாரித்து, விற்கின்றனர். நடைபயிற்சியால், ஆரோக்கியத்துக்கு மாறாக, வியாதி வாங்கி வந்து விடாதீர்கள். அருகம்புல் சாறு அருந்தும் போது, ஜாக்கிரதையாக இருங்கள்.
முளை விடாத உருளைக் கிழங்கு பயன்படுத்துங்கள். சில உருளைக் கிழங்குகளில், உள்ளே பச்சையாக இருக்கும். அதில், 'சொலானைன்' என்ற வேதிப் பொருள் உள்ளது. அது, ஜீரணக் கோளாறுகளை உண்டாக்கும்.
பூச்சி தாக்குதலில் இருந்து, திராட்சையை காக்க, பூச்சிக்கொல்லியை, சர்வ சாதாரணமாக தெளிக்கின்றனர். பூச்சிக் கொல்லி தெளித்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தான், விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால், பறித்த பழங்களுக்கு கூட, பூச்சிக்கொல்லி தெளிக்கும் கொடுமை நடக்கிறது. உப்பு கலந்த தண்ணீரில், காய்கறி, பழங்களை நன்கு கழுவினால், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறைந்து விடும்.
ஆப்பிளைச் சாப்பிடும் போதோ, ஜூஸ் போடும் போதோ, உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விடுங்கள். விதையில், 'சையனோஜெனிக் கிளைகோசைட்' என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது, உடலுக்கு கேடு தரும்.
கார்பைடு கற்களை, மாம்பழக் குவியல்களுக்கிடையே வைத்து, செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இது, தீங்கு விளைவிக்கும். இதைக் கண்டறிய, சில உபாயங்கள் உண்டு. அந்த மாம்பழங்களை, ஈ நெருங்காது. மாம்பழம் வாங்கும் போது கவனம் அவசியம்.
சில பழங்கள், ஒரு பகுதி பூஞ்சையால் தாக்கப்பட்டு, அழுகிப் போயிருக்கும். இதர பகுதி நன்றாக இருப்பது போல தோன்றும். ஆனாலும், கண்ணுக்கு தெரியாத, 'மைசீலியம்' என்ற பூஞ்சை இழைகள், ஊடுருவி இருக்கும். பழம் அழுக துவங்கினால், முழுவதுமாக துாக்கி எறிவது தான் உத்தமம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
