PUBLISHED ON : ஆக 24, 2018

சென்னை போன்ற பெரிய நகரங்களில், விழாக்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுான்களை பயன்படுத்துகின்றனர்.
ஹீலியம், ஒரு வகை வாயு; தீப்பிடிக்காது. காற்றை விட லேசானது. இந்த வாயு நிரப்பிய பலுானை, நுால் கட்டி விட்டால், பறந்து போகும்; சாதாரண பலுான் போல கீழே விழாது. அதனால் தான், விருந்து நிகழ்ச்சிகளில் ஹீலியம் நிரப்பிய பலுான்களை, கொத்து கொத்தாக கட்டி வைக்கின்றனர்.
இந்த வாயு கண்டறியப் பட்டது, ஆந்திர மாநிலம், குண்டூரில் தான். ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, வானவியல் விஞ்ஞானி, ஜூலஸ் ஜான்சன், பூரண சூரிய கிரகணத்தை ஆராய, 1868ல் இந்தியா வந்தார். குண்டூரில், சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது, மஞ்சள் நிற வரியைக் கண்டார்.
அந்த வரி, எந்த தனிமத்துடனும் ஒத்து போகவில்லை என்பதால், புதிய தனிமத்தாலோ, மூலக்கூறாலோ ஏற்பட்டிருக்கும் என தீர்மானித்தார்.
ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவந்த, இயற்கை என்ற அறிவியல் இதழின் ஆசிரியர்கள் லாக்கியர், பிராங் லாண்டு இருவரும் சேர்ந்து, ஹீலியம் என பெயர் வைத்தனர். கிரேக்க மொழியில், இதற்கு சூரியன் என்று பொருள்.
எந்த பொருளும் தாராளமாக, எளிதில் கிடைக்கிறது என்றால் அது, வீணடிக்கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது ரொம்பவே பொருந்தும்; அதற்கு உதாரணம் தான் ஹீலியம் பலுான்.
ஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று. எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. இது, வற்றாமல் கிடைக்கக் கூடியது அல்ல என்பதால், நிபுணர்கள், 'ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வலியுறுத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் கருவிகளில், காந்தங்களை குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. பல ஆராய்ச்சிக் கூடங்களுக்கு ஹீலியம் தேவைப்படுகிறது. இன்று, ஹீலியத்தை வீணாக்கினால், எதிர்காலத்தில் திண்டாட்டமாகி விடும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆங்காங்கு, ஹீலியம் பலுான்களின் நடுவே, உரத்த குரலில் கூச்சலிட்டபடி, விருந்து கொண்டாடுவோர் காதில் இது விழுமா...
