PUBLISHED ON : ஆக 31, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
உடனே ஸ்கேனா!
யாருக்காவது விபத்து ஏற்பட்டு, தலையில் லேசா அடிப்பட்டா உடனே, 'ஸ்கேன்' எடுக்க வேண்டும் என பர பரக்கிறோம். 'ஸ்கேன்' செய்வது என்பது, ஒரே சமயத்தில், 200 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமான கதிர்களை, நம் மூளையில் பாய்ச்சுவது. அதனால், மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே, 'ஸ்கேன்' செய்ய வேண்டும். பின், அதுவே ஒரு புது வியாதியை உருவாக்கி விடும்.
சரி... உண்மையில், 'ஸ்கேன்' எடுக்க வேண்டுமா... என, எப்படி கண்டறிவது... மருத்துவர்கள், சில அறிகுறிகளை வைத்து, இதை தீர்மானிப்பர் அவை...
ஒருவருக்கு, தலையில் அடி பட்டதும், மயக்கம் வருதல், மயக்கத்திற்கு பின், வலிப்பு வருதல், பயங்கரமான வாந்தி எடுத்தல், அடிபட்டவருக்கு, தலையில் சுத்தியல் வைத்து அடிப்பது போல், தலை, 'விண் விண்'னென்று தெறித்து விடுவது போல் தலை வலித்தல், ஒரு சிலருக்கு, அடிப்பட்டவுடன் தலைவலி வராமல், சிறிது காலத்திற்கு பின், இதேபோல் தலைவலி வந்தால் மட்டுமே கட்டாயம், சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டும். அப்படியில்லை எனில், ஸ்கேன் எடுக்க வேண்டாம். மருத்துவரே, 'ஸ்கேன் தேவையில்லை...' என்று சொன்னாலும் கூட, சிலர், 'எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்திரலாமே டாக்டர்...' என்று சொல்வர்.
எதுக்கும் இருக்கட்டும் என்று சொல்வதற்கு, இது என்ன, 'டீ' குடிக்கும் விஷயமா என்ன... சிந்தியுங்கள்.
'கம கம' சமையலுக்கு...
தமிழகத்தை பொறுத்தவரை, கறிவேப்பிலை மணக்காம எந்த சமையலும் கிடையாது. சாப்பிடாம துாக்கி எறிந்தாலும், அதனுடைய மணம் சமையலில் இருக்கும். இதில், வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. உடலுக்கு அதிகமான கால்ஷியம், தர்றதுல இதற்குத்தான் முதலிடம். மேலும், அமினோ அமிலங்களும் உள்ளன. சுவை நரம்புகளை துாண்டி, பசியை அதிகரிக்கிற ஆற்றல் பெற்றது கறிவேப்பிலை.
சாப்பாட்டை சீக்கிரம் செரிக்க வைக்கும். வயிற்றுப் போக்கு, செரிமான கோளாறுகள், அமிலம் அதிகமா சுரப்பதால் உண்டாகும் வயிற்றுப் புண்கள்ன்னு, வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் இது கை கண்ட மருந்து.
உடலில் அதிகமான கொழுப்பு சேர்வதை தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. அதிகாலையில், வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையும், மிளகையும் ஒன்றாக மென்று தின்றால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சாப்பாட்டில் அதிகமா கறிவேப்பிலையை சேர்த்து வந்தால், தலைமுடியோட வேர்களுக்கு பலம் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெயில், சிறிது கறிவேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின், தலையில் தேய்த்து வந்தால் இளநரை பிரச்னை குறையும். வெயில் காலத்தில், உடம்பில் வரும் கட்டிகளுக்கு கறிவேப்பிலையை அரைத்து பூசினால் குணம் கிடைக்கும்.
இனிமேல் சாப்பாட்டுல கிடக்கும் கறிவேப்பிலையை துாக்கி வீசக் கூடாது. புரிஞ்சுதா...
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
