PUBLISHED ON : நவ 23, 2019

வீடு பேறு...
வீடு என்பது, வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. உலகம் முழுவதும், பழங்குடியினர் எளிய குடியிருப்பை உருவாக்கி வசிக்கின்றனர். அவை, நுட்பங்களை உள்ளடக்கிய கட்டுமானங்கள். சுழலுக்கு ஏற்ப அமைந்தவை. சில எளிய குடியிருப்புகள் பற்றி சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.
குதிரை ஏறும் வீடு!
மத்திய மற்றும் கிழக்காசிய நாடான மங்கோலியாவில் வசிக்கும் பழங்குடியினர் வீட்டின் பெயர் யூர்ட். மரச்சட்டங்கள், கம்பளி போர்வை, தடித்த பாய்களால் உருவாக்கப்படுகிறது. இதை பிரித்து குதிரையில் எடுத்துச் செல்லலாம். அந்த அளவு எளிமையானது. ஸ்டெப்பி புல்வெளிகளில் வாழும், பழங்குடியின மக்கள் இவ்வகை குடியிருப்புகளை, பாரம்பரிய அறிவால் அமைத்து வசிக்கின்றனர்.
பனி வீடு!
பூமியின் வட துருவப் பகுதியான ஆர்க்டிக்கில் வசிக்கும், 'எஸ்கிமோ' என்ற பழங்குடியினரின் பனிக்கட்டி வீடு, 'இக்லுா' என, அழைக்கப்படுகிறது. பனிபாளங்களை வெட்டி, 30 நிமிடத்துக்குள் இதை கட்டிவிடுகின்றனர். நான்கு மீட்டர் வரை உயரம் கொண்டது. அதி உறைநிலை குளிரான, 'மைனஸ் 40 டிகிரி' என்ற பருவத்திலும், இந்த வீட்டின் உட்புறம் கதகதப்பாக இருக்கும். தற்காலிகமாக தான், இதை பயன்படுத்துகின்றனர்.
சுருட்டும் வீடு!
வட அமெரிக்கா கண்ட பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் குடியிருப்புகள், 'தெப்பீ' எனப்படும். இதற்கு, குடிசை என்று பொருள். கூம்பு வடிவில், புகை போக்கி போன்ற உச்சியுடன் இருக்கும். நீண்ட கழிகளையும், விலங்கு தோலையும் பயன்படுத்தி கட்டுகின்றனர். இந்த வகை வீட்டை சுருட்டி, விரும்பும் இடத்துக்கு, எளிதாக எடுத்துச் செல்லலாம்.
தவழும் வீடு!
நீலகிரி மாவட்டத்தில் வாழும், 'தோடர்' என்ற பழங்குடியின மக்கள், அரை வட்ட வடிவில் வீடு அமைக்கின்றனர். இதற்கு, 'மந்து' என்று பெயர். மிகச்சிறிய வாசல் தான் உண்டு. வீட்டுக்குள் தவழ்ந்து தான் நுழைய வேண்டும்; வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே இது போல் அமைக்கின்றனர்.
புவி மேலாடை!
மனதை மயக்கும் பச்சைபசேல் மரம், செடி, கொடிகளின் தயவால் தான் வாழ்கிறோம். சுவாசித்தல் என்ற பெயரால், கார்பன்டை ஆக்சைடு என்ற கரியமில வாயுவை வெளியிடுகிறோம். நமக்கு தேவையான ஆக்சிஜன் என்ற பிராண வாயுவை மரம் வெளியிடுகிறது. நலமும், பணமும் தருகிறது. வீட்டருகே, 10 சதுர அடி இடத்தில் கூட, மரங்கள் வளர்க்கலாம். வளர்த்தால் குளிர்ச்சியும், அழகும் நிறையும்.
முற்றத்தில் வளர்க்கும் மரங்களை, மூன்றாக வகைப்படுத்தலாம்.
வேம்பு, புங்கை, சரக்கொன்றை, பூவரசு, வாதநாரயணன், மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம் போன்றவை நிழல் தரும் மரங்கள்.
மா, பலா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, நெல்லி போன்றவை பயன் தரும் மரங்கள்.
தேக்கு, சந்தனம், மகாகனி, சவுக்கு, ரப்பர் போன்றவை, பணம் தரும் மரங்கள்.
கோடையின் இறுதி தான், மரம் நட உகந்த பருவம்; நடுவதற்கு குறைந்தபட்சம், நான்கு அடி உயரக் கன்றுகளை தேர்வு செய்யலாம். இரண்டு அடிக்கு, இரண்டு சதுரஅடி பரப்பில், இரண்டு அடி ஆழம் பள்ளம் தோண்டி, ஆறு மணி நேரம், ஆற விட வேண்டும்.
அதை, மேற்பரப்பு மண், மக்கிய உரக்கலவையால் நிரப்ப வேண்டும். காலை அல்லது மாலையில் தான், கன்று நட உகந்த நேரம். நட்டதும், தண்ணீர் ஊற்ற வேண்டும். மரம் வளர வளர மகிழ்ச்சியும், பலனும் அதிகரிக்கும்.
மரம் நட்டு வளமும், நலமும் பெறுவோம்.
சொல்லறிவோம்
கார்பன்டை ஆக்சைடு : கரியமில வாயு
ஆக்சிஜன் : பிராண வாயு
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
