தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுபவேளை!

சூரியனை மையமாக கொண்டுள்ளது நாள். அதை, வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என, ஆறு பொழுதுகளாக பிரித்துள்ளனர் தமிழர்கள்.

வைகறை என்பது சூரிய உதயத்துக்கு முன்னுள்ள, 90 நிமிட நேரம். அதாவது, அதிகாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. இந்த நேரத்தில் துயில் எழுவது மிக சிறந்தது; இதுவே பிரம முகூர்த்தம் எனப்படுகிறது.

இந்த நேரத்தில்...

* சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும்

* குளிர் இதமாக தழுவும்

* புதிய சிந்தனைகள் மலரும்

* நினைவாற்றல் அதிகரிக்கும்

* எடுத்த வேலையை சிறப்பாக செய்ய இயலும்

* யோகாசனம், தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்

* படிக்கலாம்; ஓவியம் வரையலாம்

* பாடல் பயிற்சி பெறவும், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் சிறந்த நேரம்.

அதிகாலை எழுவதால் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்ற மந்திரத்தை மனங்கொள்ளுங்கள். கனவுகள் எல்லாம் நிஜமாகும்!

எச்சில் மருத்துவம்!

உடலில் முக்கிய சுரப்பிகளில் ஒன்று உமிழ்நீர். வாயை எப்போதும் ஈரத் தன்மையுடன் காக்கும். உண்ணும் உணவு நன்றாக செரிக்க உதவும்.

ஒரு நாளைக்கு, ஒரு மனிதன் வாயில்,

1-2 லிட்டர் வரை உமிழ்நீர் சுரக்கும். இதில், 99 சதவீதம் தண்ணீர் மற்றும் சோடியம், பொட்டாஷியம் பைகார்பனேட் என்ற ரசாயன சேர்மங்கள் இருக்கின்றன.

உமிழ்நீரின் வேலை...

* உண்ணும் உணவை முறைப்படி செரிக்க செய்யும்

* உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கட்டுப்படுத்தும்.

உணவு நன்றாக செரிப்பதை தான், 'நொறுங்கத் தின்றால் நுாறு வயது' என பொன்மொழியாக கூறினர் பழந்தமிழர். இதன் பொருள், உணவை நன்றாக மென்று, உமிழ்நீர் பெருக விழுங்கினால், நீண்ட நாட்கள் நலமாக வாழலாம் என்பதாகும்.

புளிப்பு, இனிப்பு சுவைகளை உணர்ந்தால், உமிழ் நீர் சுரக்கும். இதனால் தான், முதல் உணவாக இனிப்பை சாப்பிட வைக்கும் வழக்கம் தமிழர்களிடம் உள்ளது.

காரத்தன்மை கொண்டது உமிழ்நீர். அதிக, 'என்ஸைம்' கொண்டது. இதில் 'ஆன்டிபயாடிக்' அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

வழக்கமான உணவுக்கு, 30 நிமிடங்கள் முன்னரும், உண்ட, 30 நிமிடங்களுக்கு பின்னரும் வெல்லம், கருப்பட்டி போன்ற ஏதாவது ஒரு இனிப்பை உண்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

உமிழ்நீர் சுரப்பு குறைந்தால்...

* நாவில் வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

* சர்க்கரை வியாதி, மன அழுத்தம் போன்றவை உண்டாகலாம்.

சர்க்கரை நோய்க்கு காரணம், உடலில், 'இன்சுலின்' சுரப்பு குறைவதாகும். உடலின் முக்கிய உள் உறுப்பான கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் துாண்டுவது, உணவுடன் செல்லும் உமிழ்நீர் தான்.

விழுங்கும் உணவில் உமிழ்நீர் குறைவாக இருந்தால், இன்சுலின் சரியாக சுரப்பதில்லை. இதனால், உணவில் உள்ள குளுக்கோஸ், வேதிமாற்றம் அடையாமல் சர்க்கரையாகவே ரத்தத்தில் தங்கிவிடும். நாளடைவில் அதுவே, நீரிழிவு நோயாக மாறும்.

நீரிழிவு எனும் செயற்கை நோயை, உமிழ்நீர் எனும் இயற்கை மருந்து கொண்டு அழிக்கலாம். உணவை நன்றாக மென்று விழுங்க பழகுங்கள். அதுவே ஆரோக்கியத்தின் முதல்படி.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us