PUBLISHED ON : டிச 04, 2021

மீன் தோல் சிகிச்சை!
தீக்காயம் ஏற்பட்டால் உடலில் எரிச்சல், உடலமைப்பில் மாற்றம் என பாதிப்புகள் ஏராளம். இதை தவிர்க்க, மீன் தோல் பயன்படுத்தி சிகிச்சையளிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், மீன் பண்ணைகளில், 'டிலாபியா' என்ற வகை மீன் வளர்க்கப்படுகிறது; நன்னீரில் வளரும். தீக்காய சிகிச்சையில் இந்த மீன் தோலை பயன்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.
தீக்காயம் பட்ட இடங்களில் மீன் தோலால் கட்டுப் போடுகின்றனர். இதனால், தீக்காயத்தில் தொற்று ஏற்படுவதில்லை; அதே நேரம் பழுதான தோல் வளர்ந்து தழும்பின்றி அமைகிறது.
மால்டா பெருஞ்சுவர்!
உலக அளவில், சுவர் என்றால் நினைவுக்கு வருவது சீனப் பெருஞ்சுவர் தான். அதுபோல் வியப்பூட்டுவது மால்டா பெருஞ்சுவர்.
தெற்கு ஐரோப்பிய நாடான மால்டா தீவில் அமைந்துள்ளது. இந்த பெருஞ்சுவர் பற்றி பல ஆண்டுகள் வெளி உலகுக்கு தெரியாமலே இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின், அது பற்றிய விவரங்கள் துலங்கின.
இந்த பெருஞ்சுவர்...
* கி.பி., 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடான இங்கிலாந்து படையால் கட்டப்பட்டது. தனித்தனியான கோட்டை அரண்களை இணைத்து, ராணுவம் ரோந்து செல்ல வசதியாக வடிவமைக்கப்பட்டது
* கோட்டை அரண்களின் வலை அமைப்போடு, 12 கிலோ மீட்டர் துாரத்திற்கு அமைந்துள்ளது
* விக்டோரியா லைன்ஸ் என்றும் அறியப்படுகிறது
* மேற்கில், போம் இர்ரிக் என்ற இடத்தில் துவங்கி, மெட்லீனா என்ற இடம் வரை நீண்டுள்ளது. மால்டா தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, இது புதுப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன. போரில் இந்த கோட்டை அரண்கள் தப்பின. பின்னர் தான், உலக சுற்றுலா பயணியருக்கு, அறிமுகமானது.
இப்போது உலகின் மிகப் பிரபலமான சுற்றுலா பகுதியாக பராமரிக்கப்படுகிறது.
துணிமரமும் சுவை பாலும்!
பருத்தியை துணிமரம் என்பர்! பருத்தியிலிருந்து, பஞ்சு எடுத்து துணி நெய்கின்றனர். இது, துணி பற்றிய கதை அல்ல... சுவைமிக்க பருத்தி பால் கதை.
மதுரையில், ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான பானம். அது போலவே பிரபலமானது, மணக்கும் பருத்திப்பால்.
இதை தயாரிப்பது பற்றி பார்ப்போம்...
பருத்தி விதைகளை ஊறவைத்து பால் எடுத்து, அதை காய்ச்சி, பச்சரிசி மாவுடன் கருப்பட்டியையும் கலக்கவும். மிதமான சூட்டில் ஏலக்காய், திப்பிலி பொடியை கலக்கவும். சுவைமிக்க பருத்தி பால் தயார். சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்.
இது சுவைக்காக மட்டுமே குடிப்பதில்லை. உடல் உஷ்ணம், நெஞ்சு வலி, சளி போன்ற தொந்தரவுகளை விரட்டும். இது போன்ற இயற்கை பானம் குடித்து, ஆரோக்கியமாக வாழ்வோம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
