PUBLISHED ON : டிச 18, 2021

சமையலறையில்...
சமையல் என்பது பாரம்பரியமிக்கது; இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வித்தியாசமான கைப்பக்குவம் உண்டு. அதில் புதுமையான, வித்தியாசமான சில அணுகுமுறைகளை பார்ப்போம்...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது
* கீரைகளை மூடி போட்டு சமைக்கக்கூடாது
* காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கக்கூடாது
* தக்காளி, வெங்காயத்தை ஒன்றாக வதக்கக்கூடாது
* பிரிட்ஜில் வாழைப்பழம், உருளைக்கிழங்கு வைக்கக் கூடாது
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி தழை போடக்கூடாது
* நன்கு கழுவிய பின் காய்கறிகளை நறுக்கவும். நறுக்கும் முன் ஊற வைப்பதோ, நறுக்கிய பின் கழுவுவதோ கூடாது
* காய்கறி, பழங்களில் தோலை ஒட்டித்தான் தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் இருக்கின்றன; முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்
* கீரையில், மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதை தவிர்க்கவும்
* பாலைத் திரித்து பனீராக்க, எலுமிச்சைச் சாறு ஊற்றுவதுதான் வழக்கம். அதற்கு பதில் தயிர் ஊற்றினால், பனீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்
* மாவு பிசையும்போது, சிறிது ரவை சேர்த்துக் கொண்டால், பூரி உப்பலாக வரும்
* மோர் கலந்த நீரில் வாழைப்பூவை நறுக்கிப் போட்டு, அரித்தெடுத்து, இட்லி தட்டில் வேகவைத்தால் கறுக்காது
* கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு மற்றும் உப்பை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சிகள் வராது; நறுமணமாகவும் இருக்கும்
* பகாளாபாத் என்ற தயிர் சாதம் தயாரிக்க அரிசியை வேக வைக்கும்போது, ஒரு ஸ்பூன் அவல் அல்லது ஜவ்வரிசியையும் சேர்க்கவும்; சாதம் குழைவாகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும்
* ஊறுக்காய் பாட்டில் இறுக மூடி திறக்க முடியவில்லையா... பாட்டிலைத் தலைகீழாகக் கவிழ்த்து, சில நிமிடங்கள் இளம் சூடான வெந்நீரில் அமிழ்த்தினால் சுலபமாகத் திறக்கலாம்
* கொத்தமல்லித் தழையை, வாழை இலையில் சுற்றி ப்ரிட்ஜில் வைத்தால் ஐந்து நாட்கள் வரை பசுமையாக இருக்கும்
* பாயசத்துக்கு, முந்திரிப்பருப்பு இல்லையா... கவலை வேண்டாம். இரண்டு ஸ்பூன் நெய்யில் கைப்பிடி வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து சேர்த்தால் சுவை கூடும்.
வாழ்வின் துாண்கள்
திசைகள் தோறும் பயணிக்க கால்களின் பயன்பாடு முக்கியம். வயது முதிரும் போது, கால்கள் வலுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நீண்ட ஆயுளுக்கான அறிகுறிகளை, அமெரிக்க பத்திரிகையான, 'பிரிவென்ஷன்' நுட்பமாக பட்டியலிட்டுள்ளது. அதில், வலுவான கால்கள் முதன்மை இடம் பெற்றுள்ளன. ஆரோக்கிய வாழ்வுக்கு, வலுவான கால்கள் முக்கியம்.
ஐரோப்பிய நாடான டென்மார்க், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு வித்தியாசமான முடிவை தெரிவித்துள்ளது. அதாவது, இரண்டு வாரங்கள் கால்கள் செயலற்று இருந்தால், தசை வலிமை குறைந்து விடும். கடும் உடற்பயிற்சிகள் செய்தாலும், அதை மீட்டு பழைய நிலையை அடைவது கடினம் என கண்டறியப்பட்டுள்ளது.
உடல் எடையை, கால்கள்தான் தாங்குகின்றன. மனித உடலில் உள்ள எலும்பில், 50 சதவீதம் கால் பகுதியில்தான் உள்ளது. மிகப்பெரிய, வலுவான மூட்டுகளும் கால்களில்தான் உள்ளன.
உண்ணும் உணவில் கிடைக்கும் ஆற்றலில், 70 சதவீதத்தை எரிக்கும் செயலை, கால்களே செய்கின்றன. காலின் மேல் பாகத்தில் இருப்பது தொடை. ஓர் இளைஞரின் தொடை, சிறிய வகை காரைத் துாக்கும் வலிமை கொண்டது.
காலைத் தாங்கும் பாதம் ஆரோக்கியமாக இருந்தால்தான், ரத்த ஓட்டம் சீராக அமையும். வலுவான கால்கள் உள்ளவருக்கு, வலிமையான இதயம் நிச்சயம் அமைந்திருக்கும்.
எனவே கால்களை வலுவாக பேணுங்கள்.
அதற்கு...
* தினமும், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்
* மெல்லோட்ட பயிற்சியையும் தவறாது செய்யவும்.
இந்த பயிற்சிகள் வயது முதிர்வால் வரும் தொல்லைகளை குறைக்கும். மனம், கற்பனையுடன் பட்டாம்பூச்சி போல் சிறகடித்தபடியே இருக்கும்.
கால்களை, தலையில் ஏந்தி மரியாதை செய்வோம்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு
