PUBLISHED ON : ஜூலை 08, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
நாமே வாதாடலாமா!
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள்தான் வாதாட வேண்டும் என்றில்லை. யாரும் வாதாடலாம். ஆனால், அதற்கும் முறைகள் உண்டு. 'தங்களுடைய வழக்கில் தாங்களே வாதாடலாம்' என்பது நமது நீதித்துறை மக்களுக்கு அளித்துள்ள ஒரு சிறப்பு உரிமை.
வழக்கறிஞருக்கு கட்டணம் கொடுக்க வசதியில்லை என்று கருதியோ அல்லது வழக்கறிஞர்களை விட நாமே சிறப்பாக நம் தரப்பு வாதத்தை திறமையாக வைக்கலாம் என்கிற நம்பிக்கையிலோ இப்படி தாங்களே தங்கள் வழக்குகளில் ஆஜராகின்றனர்.
இப்படி வாதாடுவதற்கு சட்ட பிரிவுகள் பற்றி முழுவதும் அறிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கொடுக்கும் வழக்கின் தன்மையை புரிந்து கொண்டாலே போதும். அத்துடன் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளை மிக கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். (அதாவது கட்ட வேண்டிய கட்டணம், இணைக்க வேண்டிய பட்டியல், நீதிபதி முன் பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்பது உள்ளிட்டவை...) வழக்கை தாக்கல் செய்வதற்கு முன், நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திலேயே அந்த நடைமுறைகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும், சட்டப்பிரிவுகள், குற்றங்களுக்கான தண்டனை பற்றி தெரிந்து கொள்வதில் கூட இன்று சிரமம் ஏதுமில்லை. சட்டப் புத்தங்களை புரட்டலாம். இணையதளத்தில் நீதி மன்ற தீர்ப்புகள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றன.
இப்போதைக்கு ஓரளவுக்கு படித்தவர்கள்தான் துணிந்து வாதாட வருகின்றனர். பாமரர்களை சில நடைமுறை சிக்கல்கள் ஒதுங்கி பின்வாங்க வைக்கின்றன. அவற்றைகளையும் முயற்சிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. இது ஜனநாயக நாடு. அதனால், உரிமையை நிலைநாட்டி தரும் நீதிமன்றங்களிலேயே கூட ஒரு தனி நபர் தனக்காக வாதாட உரிமை உள்ளது.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது பூசணி அடை பூக்கும் நேரம்!
என்னென்ன தேவை: முற்றிய பூசணிக்கீற்று-2, பச்சரிசி-400 கிராம், கடலைப்பருப்பு-150 கிராம், மிளகாய் வற்றல்-10, மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன், இஞ்சி-1 துண்டு, கறிவேப்பலை சிறிதளவு, கடலை எண்ணெய்- சிறிது. உப்பு தேவையான அளவு.
எப்படி செய்வது?
பச்சரிசியையும், கடலை பருப்பையும் தனித்தனியை ஊற வைக்கவும். பூசணிக்கீற்றை தோல் சீவி, விதைகளை எடுத்துவிட்டு, சதை பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு லேசாக அடித்து, துணியில் வடிகட்டி, துருவலை மட்டும் தனியே எடுத்து வைத்து கொள்ளவும். அரிசியை தனியே கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு கடலை பருப்புடன், மிளகாய் வற்றல், கறிவேப்பலை சேர்த்து கரகரப்பாக அரைத்து அரிசி மாவில் கலந்து பிசைந்து கொள்ளவும். இத்துடன் மஞ்சள்தூள், இஞ்சிச்சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து பூசணி துருவலையும் கலந்து கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும் எண்ணெய் தடவி சிறு உருண்டையாக உருட்டி கல்லில் வைத்து கையால் அடையாக தட்டவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபடியும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். தொட்டு கொள்ள தேங்காய் சட்னி ஏற்றது. இது வித்தியாசமான சுவையுடன் அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும்.
எப்படி சாப்பிடுவது?
இதுக்குன்னு தனி முறையில்லை. எப்பவும் சாப்படுவது போல கையில எடுத்து வாயில வைத்து சாப்பிடுங்க... ஹி...ஹி!
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்!
கையில் உண்டியலோடு மெடிக்கல் ஷாப்புக்கு வந்த சிறுமி, அதை உடைத்து திறந்து உள்ளே இருந்த சில்லறைகளை டேபிளில் கொட்டினாள். கடைக்காரார் சிறுமியை விநோதமாக பார்த்து, ''என்ன வேணும் பாப்பா'' என்று கேட்டார்.
'இதுல அநேகமா நூறு ரூபாய்க்கு மேல இருக்கும்னு நினைக்கிறேன். இதை வச்சிக்கிட்டு, 'அதிசயம்' இருந்தா கொடுங்க!'' என்றாள்.
''நீ என்ன கேக்கறேன்னு எனக்கு புரியல... எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு! கடையில நிறைய கூட்டம் இருக்கு, நான் எல்லாரையும் கவனிக்கணும்'' என்றார் கடைக்காரர்.
''என் அண்ணனுக்கு மண்டைக்குள்ள ஏதோ வளர்ந்திருக்கு, அம்மாவும், அப்பாவும் அழறாங்க.... ஏதாவது அதிசயம் நடந்தாதான் அவனை காப்பாற்ற முடியும்'னு பேசிக்கிறாங்க, அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்,'' என்றாள் சிறுமி.
கடைக்காரருக்கு அரைகுறையாக புரிந்தது. ''அதெல்லாம் இங்க விக்கிறதில்லை. போய் பெரியவங்க யாரையாவது அனுப்பு,'' என்று சிறுமியை விரட்ட பார்த்தார்.
கடையில் நின்றிருந்த கூட்டதில் ஒருவருக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்தது.
அவர் சிறுமியிடம் சென்று, ''கவலைப்படாதே பாப்பா... நீ கேக்கற அந்த அதிசயம் என்கிட்ட இருக்கு. உன் வீட்டை காட்டு.'' என சிறுமியோடு வீட்டிற்கு போனார்.
அந்த சிறுமியின் அண்ணனுக்கு மூளை பிரதேசத்தில் கட்டி. வசதியில்லாத குடும்பம், பிரச்னையை உணரும் அளவுக்கு நவீனங்கள் வளராத கிராமம். சிறுமியோடு வந்தவர், தேசத்தின் மிகப் பெரிய நரம்பியல் நிபுணர்.
உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு வந்தவர் தற்செயலாக மெடிக்கல் ஷாப் வந்திருக்கிறார். விபரீதம் உணர்ந்து குடும்பத்தோடு அவர்களை நகரத்தக்கு அழைத்து சென்று பையனுக்கு ஆபரேஷன் செய்து, அவனை காப்பாற்றியும் விட்டார். நன்றி சொல்லி பரவசப்பட்ட பெற்றோர் தயக்கத்தோடு,'பில் எவ்வளவு?' என்று கேட்டனர்.
டாக்டர் சிரித்தபடி சிறுமியை பிடித்து கொண்டு சொன்னார்.
''நூறு ரூபாய் சில்லறைகாசும், ஒரு சிறுமியின் அபார நம்பிக்கையும் எளியவர்களின் நம்பிக்கைகளே அதிசயத்தை நிகழ்த்துகின்றன!
அன்புடன் அங்குராசு
