PUBLISHED ON : நவ 19, 2022

ரயில் பயண அதிர்வு!
ரயிலில் பயணம் செய்பவருக்கு ஒரு வித அனுபவம் ஏற்படும். ரயில் புறப்படும் போது, சில நேரம் எந்த அதிர்வும் ஏற்படாது. ரயில் நகர்வதே தெரியாது. சில நேரம் ரயில் பெட்டியை வேகமாக இழுத்து, அதிர்வை உண்டாக்கிய பின் நகர துவங்கும். பயம் தரும் விதமாக சில ரயில்களில் அதிர்வு ஏற்படுவது ஏன் என்பதை பார்ப்போம்...
பயணியர் ரயிலில், 24 பெட்டிகள் வரை இருக்கும். இவற்றை இணைத்து, ரயில் இன்ஜின் இழுத்து செல்லும். இன்ஜின் இழுக்கும் போது பின்னால் உள்ள பெட்டிகளும் நகர துவங்கும்.
ரயில் பெட்டிகள் இணைப்பில், இரு வழிமுறைகள் உள்ளன. ஒரு முறையில், 'ஸ்க்ரூ கப்ளிங்' எனப்படும் திருகு இணைப்பால் இணைக்கப்படும். இன்னொரு முறையில், 'சிபிசி கப்ளிங்' என்ற, 'சென்டர் பப்பர் கப்ளிங்' முறையில் இணைக்கப்படும்.
ரயில், நிற்கும் போது பெட்டிகளுக்கு இடையில் இணைப்பில் சிறிய இடைவெளி ஏற்படும். இணைக்கும் முறைக்கு ஏற்ப, இந்த இடைவெளி மாறுபடும். ரயில் கிளம்பும் போது, இணைப்பின் இடைவெளிக்கு ஏற்ப அதிர்வு அதிகரிக்கும்.
இதில், சென்டர் பப்பர் கப்ளிங் முறை இணைப்பில், இடைவெளி குறைவாக இருக்கும். அதனால், இன்ஜின் நகரும் போது எந்த அதிர்வும் ஏற்படுவதில்லை. நகர்வதே தெரியாது.
ஆனால், திருகு வகை இணைப்பில், இடைவெளி அதிகமிருக்கும். அதனால், நகரும் போது, அதிர்வு அதிகரித்து, வேகமாக இடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
அதிர்வின்றி ரயிலை ஓட்டும் நுட்பம் ஓட்டுநர் கையில் தான் இருக்கிறது. அவரது அனுபவம் ரயில் பெட்டியில் அதிர்வை தவிர்த்து, ஆனந்தமான பயணத்தை தரும்.
உதட்டு சாயம்!
இந்திய துணைக் கண்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கியது சிந்துவெளி நாகரிகம். இன்றைய பாகிஸ்தான் மற்றும் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு வாழ்ந்த மக்கள் திருமண வைபவத்தில், மணப்பெண்ணை அலங்கரிக்க ஒப்பனை பொருட்களை பயன்படுத்தினர். அவற்றில் ஒன்று லிப்ஸ்டிக்.
அதை தயாரித்த விதம் அலாதியானது. இதற்காக பயன்படுத்திய மூலப்பொருட்கள் இரண்டு தான். ஒன்று தேன் மெழுகு; மற்றொன்று தாவர நிறமி. தேன் மெழுகு என்பது, தேன்கூட்டில் தேனை நீக்கிய பின் கிடைக்கும் மாவு பொருள். அதனுடன் சிலவகைத் தாவரங்களில் எடுத்த நிறம் கலந்து தயாரித்த திரவ வடிவ கூழை உதட்டில் பூசிக்கொண்டனர்.
தேன்மெழுகு, ஆமணக்கு எண்ணெய் மற்றும் வண்ண பசைகளால் திண்ம வடிவில் லிப்ஸ்டிக் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தார் மத்திய கிழக்கில் வசித்த அபு அல் காசிம்.
பிரபல நடிகைகள் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, லிப்ஸ்டிக் பயன்படுத்த துவங்கினார். தொடர்ந்து பொதுமக்களும் அதை நாடினர்.
ஐரோப்பிய நாடான பிரான்சில், குர்லைன் என்ற நிறுவனம் வணிக நோக்கில் லிப்ஸ்டிக் தயாரித்து, 1884ல் சந்தைப்படுத்தியது. தேன், ஆமணக்கு எண்ணெய், மாட்டு கொழுப்பை மூலப் பொருளாக கொண்டு அந்த நிறுவனம் லிப்ஸ்டிக் தயாரித்தது. அதை துாரிகையால் தொட்டுத்தான் உதட்டில் பூச வேண்டியிருந்தது.
அழகுக்கலை நிபுணர் எலிசபெத் ஆர்டன், பல்வேறு நிறங்களில் உதட்டு சாயத்தை, 1930ல் அறிமுகப்படுத்தினார். பின், பல வண்ணங்களில் லிப்ஸ்டிக் கடைகளில் விற்பனைக்கு வந்தது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
