PUBLISHED ON : நவ 19, 2022

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லிங்கன் ஷயர் கிராமத்தில், 1642ல் விவசாய குடும்பத்தில் பிறந்தார், ஐசக் நியூட்டன். பிறக்கும் முன்பே, தந்தையை இழந்தவர். தாய் மறுமணம் செய்ததால், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்.
படிப்பில், கவனக்குறைவால் வகுப்பில் கடைசி மாணவனாக இருந்தார். ஒருநாள் நன்றாக படிக்கும் மாணவன் ஒருவன் அவரை உதைத்து தள்ளி விட்டான். கோபத்தில் அவனை வீழ்த்தியதுடன், நம்பிக்கையுடன் முயன்று, படிப்பிலும் முதல் மாணவனாக உயர்ந்தார்.
சிறு வயதிலேயே, கணிதம், அறிவியல், தத்துவத்தில் அதிக ஆர்வம் காட்டினார். இங்கிலாந்து, டிரினிட்டி பல்கலையில் சேர்ந்தார். ஏழ்மை காரணமாக, உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்தபடி படித்தார். வானியல் ஆராய்ச்சியில் ஆற்றல் மிக்க, 'ரிப்ளக்டிவ் டெலஸ்கோப்' என்ற கருவியைக் கண்டுப்பிடித்தார்.
பூமிக்கு அதிக ஈர்ப்பு சக்தி உள்ளதால், வானை நோக்கி செலுத்தும் பொருள், பூமிக்கே வந்து விடுகிறது. நிலா உட்பட கிரகங்கள், நிலை மாறாமல் சுற்றுவதற்கு, இந்த ஈர்ப்பு விசை தான் காரணம் என்ற அறிவியல் உண்மைகளை கண்டறிந்தார். சூரிய ஒளி பற்றி ஆராய்ந்து, வண்ணங்களை பிரித்து அறிந்தார்.
மிகவும் ஒதுங்கியபடி வாழ்ந்து வந்தார் நியூட்டன். அபூர்வமாக தான் பேசுவார். கோபம் வந்தால் கட்டுப்படுத்த இயலாமல் திணறுவார். வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பணியின் போது சாப்பிடக் கூட மறந்து விடுவது இயல்பாக இருந்தது.
ஒளியின் நன்மை, ஒளியலைகளின் போக்கு, நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வுகள் மேற்கொண்ட நியூட்டன், 1727ல், தன், 85ம் வயதில் காலமானார். இவரது உடல், இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு சொந்தமான, வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது!
- திலிப்
