PUBLISHED ON : நவ 19, 2022

மருத்துவ அறுவை சிகிச்சை அறையில், பச்சை, நீல நிற ஆடையை அணிகின்றனர் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள். மற்ற வண்ணங்களில் அணிவதில்லை. இதற்கு உரிய காரணத்தை பார்ப்போம்...
மருத்துவமனை ஊழியர்கள் முதன்முதலாக, வெள்ளை நிற உடையை தான் அணிந்தனர். இதை, 1914ல் பச்சை நிறமாக மாற்றினார் ஒரு மருத்துவர். அன்று துவங்கி, இன்று வரை, பச்சையும், நீலமும் மருத்துவமனையில், பணி உடையாக பேணப்படுகிறது.
சில வண்ணங்களை தொடர்ச்சியாக பார்த்தால் கண்கள் சோர்வடையும். சூரியனையோ, பளபளக்கும் பொருளையோ பார்த்தால் சோர்வு ஏற்படும். பச்சை நிறம் இதமாக இருக்கும். பச்சை அல்லது நீல நிறத்தை மட்டுமே உறுத்தல் இன்றி, நீண்ட நேரம் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும்.
அதுவே, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் என்றால் உறுத்தும். இதனால் தான், பச்சை, நீலம் கண்களுக்கு இதமானது என கருதப்படுகிறது.
மருத்துவமனைகளில், திரைச்சீலை முதல் அனைத்தும் பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும். இதை பார்ப்பதால் நோயாளிகள் சோர்வடைவதில்லை. நீலமும், பச்சையும் மூளைக்கு இதமானது.
- மு.நாவம்மா
