PUBLISHED ON : டிச 09, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
அடியில் மட்டும் ஆயில் எப்படி?
மேற்பரப்பில் பார்க்கும்போது பூமி என்பது எல்லா நாட்டிலும் ஒன்றாகத்தானே இருக்கிறது. அப்படி இருக்கும்போது பூமிக்கடியில் நம் நாட்டில் மட்டும் நீர்வளமும், வெளிநாடுகளில் எண்ணெய் வளமும் அதிகமாக காணப்படுவது எப்படி?
அதுவா... நாடுகள் பிரிவதற்கு முன்பே, ஏற்பட்ட வளம் இது. பெட்ரோலியம் என்பது பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இறந்த கடல்வாழ் உயிரினங்களின் மக்கிப்போன கலக்கல்தான் பெட்ரோலியம்.
அது ஒரு மாதிரி திரவ வடிவாகி சுற்றுப்பட்டதை விட, லேசாகி பாறைகளிடையே கசிந்து பூமிக்கடியில் தேங்கிப்போனது. பெட்ரோல் வளம் நம் பூமியின் சரித்திர மிச்சம். நீர்வளம், சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து திரும்பும் கடலை சார்ந்தது. இரண்டுமே நாடுகளுக்கு தேவை.
எறும்புகள் கற்று தருகின்றன!
கடுகின் கனம் கூட இல்லாத எறும்புகள், வீட்டில் எந்த மூலை மூடுக்குகளில் இனிப்பு வகைகளை ஒளித்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து தங்கள் இருப்பிடங்களுக்கு தலையில் சுமந்து சேர்த்து விடுகின்றனவே, எறும்பின் பலமும் நுகர்வு திறனும் அதற்கு எப்படி வாய்த்தன? என நமக்கெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும். எறும்புகளின் மூளை, ஒரு கடுகிலும் சிறியது. அந்த மூளையில் பதிந்திருப்பது இரண்டு முக்கிய புலனறிவு.
தொடுகை வாசனை!
இரை தேட, வேவு பார்க்க சென்று திரும்பி வரும் எறும்புகளை தொட்டு பார்த்தும், முகர்ந்து பார்த்தும் அவை இரை நோக்கி செல்வதாக ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.
எறும்புகளின் அறிவு ஒட்டு மொத்தமாக அவைகளின் காலனியில் இருக்கிறது. அதில் யாருமே தலைவனில்லை.
ஒரு ராணியை தவிர, மற்ற பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் எறும்புகளும் தொண்டர்கள். எப்படியோ இரை தேடுவதும் புற்று அமைப்பதும் நடைபெறுகிறது.
இத்தனைக்கும் மிஞ்சி போனால் ஒரு தொழிலாளி எறும்புக்கு வாழ்வு ஒரு வருடம்தான். எறும்பு புற்றுகளை கவனித்து அதிலிருந்த கணிப்பொறிகளை நெட்வொர்க் செய்யும் இயல், 'ரோபாட்டிக்ஸ் இயல்' என்று பலவற்றிலும் பயன்படுத்த துவக்கி வருகின்றனர். எறும்பை விரும்புவோம். அதனை பற்றி அறிந்த விஷயங்களை நாமும் கடைப்பிடிப்போம். சுறுசுறுப்பு, கூட்டுப்பணி, செயல்பாட்டு முறை...
தண்ணீர் பாட்டிலின் தரம்!
தண்ணீர் பாட்டில், பள்ளி செல்பவர்களிடம் மட்டுமல்லாமல் செல்போன் போல எல்லோருடனும் செல்கிறது.
நாம் கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கும் பொழுது, அந்த தண்ணீர் தீர்ந்தவுடன் பாட்டிலை வீசி எறியாமல் தண்ணீர் பிடித்து ப்ரிட்ஜில் வைத்து குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? என்று கேட்பவர்களுக்கு இதோ ஒரு விரிவான விளக்கம்.
''கடைகளில் நாம் வாட்டர் பாட்டில் வாங்கும்போழுது அந்த தண்ணீர் தீரும் வரை வைத்திருந்துவிட்டு பின்னர் அதை உடைத்து குப்பை தொட்டில் போடுவதுதான் நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் சூழலுக்கும் நல்லது.
பிளாஸ்டிக் பாட்டில் முதல் பிளாஸ்டிக் பைகள் வரை எந்த வகை பிளாஸ்டிக்குகளை எதற்கு பயன்படுத்துவது என்பதற்கு வரைமுறை மட்டுமல்ல சட்டதிட்டங்களே உள்ளன.
அதன்படி பாட்டில்களில் அதன் தரத்தை ஒன்று, இரண்டு என எண்களின் மூலம் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். பாட்டிலின் அடிப்பாகத்தில் ஒரு முக்கோணத்தின் மத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும். 'எண்:1' என்று இருந்தால், அந்த பாட்டில் ஒரேயொரு முறைதான் பயன்படுத்தலாம். அதன் தரம் அதற்கு மட்டுமே பொருத்தம் என்று அர்த்தம். நாம் தண்ணீர் வாங்கும் பாட்டிலில் 'எண்:1' என்ற குறியீடுதான் இருக்கும்.
பலமுறை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் எண்.2, எண்.4, என குறிப்பிடப் பட்டிருக்கும். அந்த வகையில் எண்.5 என குறிப்பிட்டிருக்கும் பாட்டில்கள் குடிநீரை பிரிட்ஜில் மட்டுமல்ல... வெளியிலும் எடுத்து சென்று பயன்படுத்துவதற்கு ஏற்ற தரமுள்ளது என அர்த்தம்.
பள்ளிக்குழந்தைக்கு இந்த வகை பாட்டிலில்தான் தண்ணீர் கொடுத்து அனுப்ப வேண்டும். கலர் கலராக இருப்பது, காஸ்ட்லியாக இருப்பது என இந்த எண்களுக்குள் அடங்காத எதுவும் ஆபத்தானது. அதனால் 'எண்.5' அல்லது எவர்சில்வர், கண்ணாடி கண்டெய்னர்களை தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது ஆபத்தில்லாதது!
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது, 'கார்ன் இட்லி' செய்முறை நேரம்.
தேவையானவை: இட்லி மாவு-3 கப், வேக வைத்த சோளம்-ஒரு கப், பொடியாக நறுக்கிய பாலக்கீரை-அரை கப், பொடித்த மிளகு, சீரகம் ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: உதிர்த்த சோளத்தை உப்பு சேர்த்து வேக வைக்கவும். இட்லி மாவுடன் நறுக்கிய கீரை, வேக வைத்த சோளம், மிளகு, சீரகத்தூள், சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேக வைத்து எடுக்க... கார்ன் இட்லி ரெடி!
வித்தியாசமானது. சத்தானது, சுவையானது!
தங்கத்தை விட அதிகம்!
தங்கம் விலை தினம் தினம் எகிறி கொண்டே போகிறது. ஆனால், தங்கம் வைரத்தை விட பிளாட்டினம் விலை மிக அதிகம்.
ஆமாம். பிளாட்டினத்திற்கு ஏன் அத்தனை விலை தங்கத்தை போல ஏராளமானோர். பிளாட்டினத்தை அணிவதும் கிடையாது. பின் ஏன் இப்படி விலை! பிளாட்டினத்தை தயாரிக்க நிறைய செலவாகும் என்பதே காரணம். அது, தங்கத்தை விட 35 மடங்கு அரிதானது. உற்பத்தி செய்யும் செலவும் அதிகம். மிக மிக துல்லியமானது. 18 காரட் தங்கம் 95 விழுக்காடுதான் துல்லியம். பிளாட்டினம் நகைகள் 99.95 சதவீதம் துல்லியம்.
பணக்காரர்கள், தங்கம் அணிந்து அலுத்து போனவர்கள் அணியும் நகைகள், பிளாட்டினம் நகைகள். தங்கத்துடன் பெண்டென்டாக அணிகிறார்கள். பிளாட்டினத்துக்கு மருத்துவ உபயோகங்கள் பல உண்டு. இதயத்தில் பதியவைக்கும் பேஸ்மேக்கர்களில் பிளாட்டினம் பயன்படுகிறது.
சில கேன்ஸர் செல்கள் இரட்டிப்பாவதை பிளாட்டினம் தடுக்கிறது. அதனால், கேன்ஸர் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. அதன் ஸ்திர தன்மையும், கலக்காத தன்மையும் பல விதங்களில் பயன்படுகின்றன.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு!
